கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான தொற்று

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை அலைகழித்துவருகிறது. பல மாநிலங்களில் சுடுகாடுகள், இடுகாடுகளில் பிணங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. உடல்களை சுட்டெரித்து, சுட்டெரித்து மயான உலோகச் சட்டங்கள் உருகுவதாக செய்திகள் வருகின்றன.
இப்போது வருகிற புள்ளிவிவரங்களும் அதிகபட்ச எச்சரிக்கையைத் தருவதாக இருக்கின்றன. இன்று காலை இந்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,17,353 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். 1,185 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை மொத்தம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கையில் இந்தியா பிரேசிலைவிட மோசமாக சென்றுள்ளது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இரண்டாவது அதிக கொரோனா தொற்றுகளைப் பார்த்த நாடாக இந்தியா இருக்கிறது.
பத்தே நாள்களில் இருமடங்கான தினசரி எண்ணிக்கை

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு பத்தே நாள்களில் இரண்டு மடங்காகி இருக்கிறது. கடந்த 4,5 தேதிகளில் சுமார் ஒரு லட்சம் என்ற அளவில் இருந்த பாதிப்பு நேற்று 2.17 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 2 லட்சத்துககு மேல் தொற்று கண்டறியப்படுவது இது இரண்டாவது நாளாகும்.
உச்சம் தொடும் 8 மாநிலங்கள்
இதில் 8 மாநிலங்களில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மொத்தப் பாதிப்பில் 70 சதவிகிதமாகும். வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் என்ற பேதமில்லாமல் நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்திருப்பது புள்ளி விவரங்களில் தெரியவருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 61,695 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிராவின் பங்கு சுமார் 30 சதவிகிதம். அங்கு நேற்று மட்டும் 349 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 22,339 பேரும், டெல்லியில் 16,699 பேரும், சத்தீஸ்கரில் 15,256 பேரும், கர்நாடகத்தில் 14,738 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 10,166 பேரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றுக்கு அடுத்து குஜராத் மாநித்தில் 8,152 பேருக்கும், கேரளாவில் 8,126 பேருக்கும், தமிழ்நாட்டில் 7,987 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் 10 ஆயிரத்துக்கு மேல்
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இதுவரை இல்லாத அளவாக 10,497 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையின் இன்று அவசரக்கூட்டம் நடக்கிறது. எனினும் பொது முடக்கம் அறிவிப்பதற்கு வாய்ப்பில்லை என்று அரசு ஏற்கெனவே கூறிவிட்டது.
17 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ள டெல்லியில் வார இறுதி முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை இயங்காது.
சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மரணம்
சிபிஐ இயக்குநராக இருந்த ரஞ்சித் சின்ஹா இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1974-ஆண்டு பிகார் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சின்ஹா இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். ரயில்வே பாதுகாப்புப்படை, சிபிஐ ஆகியவற்றின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த பிறகு 2012-ஆம் ஆண்டு சிபிஐயின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
கும்ப மேளாவில் கொரோனா

பட மூலாதாரம், Getty Images
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றிருக்கும் கும்பமேளாவில் பங்கேற்ற 30 சாதுக்களுக்கு நேற்று தொற்று உறுதியாகியுள்ளது. ஹரித்வாரில் இரண்டே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் திட்டமிட்டபடி வரும் 30-ஆம் தேதி வரை கும்பமேளா நடக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்
- பிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்?
- கொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன?
- புறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன்
- இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: பிணவறைகளில் காத்திருப்பு, மயானங்களில் நீண்ட வரிசை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












