சசிகலா விடுதலையானார்: 4 ஆண்டு சிறைவாசம் முடிந்தது; தொடர்ந்து மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை

வி.கே. சசிகலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வி.கே. சசிகலா
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசிக்காக, பெங்களூரிலிருந்து

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற வி.கே. சசிகலா இன்று (ஜனவரி 27, புதன்கிழமை) விடுதலையானார்.

4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, 10 கோடி ரூபாய் அபராதமும் செலுத்திவிட்டதால், பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அவர் விடுதலையாவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவார்.

தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணத்தை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேரில் சென்று வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து சிறை கைதி என்ற அடிப்படையில் சசிகலாவுக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. அதே சமயம், அவரது தரப்பு வழக்குரைஞர்களின் கோரிக்கையின்படி, சசிகலாவுக்கு தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சசிகலாவின் வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன், "இங்கு வழங்கப்படும் சிகிச்சை திருப்திகரமாக உள்ளதால், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார்.

"சசிகலாவுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 10 நாட்கள் கொண்ட சிகிச்சை காலம் முடிவுக்கு வர உள்ளதால், அவர் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது."

விடுதலையானார் சசிகலா: தொடர்ந்து மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவார்

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினரும், அ.ம.மு.க. கட்சியின் தலைவருமான டி.டி.வி. தினகரன், "சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். அவர் எப்போது மருத்துவமனையிலிருந்து அனுப்பப்படுவார் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளோம். அதை பொருத்தே, அவரை எப்போது தமிழகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்பது தொடர்பாக முடிவு செய்வோம்" என்று கூறினார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அப்போது அதிமுகவின் பொதுச் செயலாளரான சசிகலாவை குற்றவாளி என்று 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த இந்திய உச்சநீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது.

அதாவது, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்திருந்தது.

சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலர் மருத்துவமனை வளாகத்தின் முன்பு திரண்டுள்ளனர்.
படக்குறிப்பு, சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலர் மருத்துவமனை வளாகத்தின் முன்பு திரண்டுள்ளனர்.

இளவரசி, சுதாகரனின் நிலை என்ன?

இதே சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அவரும் சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இளவரசி தனது தண்டனை காலத்தின்போது பிணையில் வெளிவந்த காரணத்தினால் அவரது விடுதலைக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவோடு இளவரசி.

பட மூலாதாரம், KASHIF MASOOD

படக்குறிப்பு, சசிகலாவோடு இளவரசி (கோப்புப்படம்)

அதே சூழ்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனின் தண்டனைக்காலம் கடந்த மாதமே முடிவுக்கு வந்துவிட்டதாகவும், ஆனால் அவர் இன்னமும் உச்ச நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்தாததால் அவரது விடுதலை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெயலலிதா - சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கு வரலாறு

1991-1996: ஜெயலலிதா முதன் முறையாக முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்தக் காலகட்டத்தில் தான் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கப் போவதாக அறிவிக்கிறார். விரைவிலேயே ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

ஜூன் 14, 1996: அப்போது ஜனதாக் கட்சித் தலைவராக இருந்த சுப்ரமணியன் சுவாமி ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர்கிறார்.

செப்டம்பர் 18, 1996: விசாரணை அதிகாரி நல்லமநாயுடு முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தார்.

டிசம்பர் 7-12: ஜெயலலிதாவின் வீட்டிலும் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது.

ஜூன் 4, 1997: தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்படுகிறது.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

மே 14, 2001: மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா. ஆனால், அதே ஆண்டு செப்டம்பர் 21 தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.

நவம்பர் 2002: தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது செல்லாது என்று ஜெயலலிதா தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதன் பின்னர் விசாரணை துவங்குகிறது. தனி நீதிமன்ற நீதிபதியாக ஆர். ராஜமாணிக்கம் செயல்படுகின்றார்.

மார்ச் 2, 2002: மீண்டும் முதலமைச்சராகிறார் ஜெயலலிதா.

நவம்பர் 18, 2003: வழக்கை பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம்.

செப்டம்பர் 10, 2004: வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. பப்புசாரே நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.

2005: பப்புசாரே ஒய்வுபெற்று மல்லிகார்ஜுனைய்யா நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.

2005-2010: இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல்செய்யப்படுகின்றன.

2010 ஜனவரி 22: சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையைத் தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

டிசம்பர் 2010 - பிப்ரவரி 2011: சாட்சிகளை அரசுத் தரப்பு மறுவிசாரணை செய்கிறது.

மே 16, 2011: ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகிறார்.

அக்டோபர் 20, 21, நவம்பர் 22, 23 2011: பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.

செப்டம்பர் 30, 2012: நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வுபெறுகிறார்.

அக்டோபர் 2013: ஜான் மைக்கல் குன்ஹா சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெயலலிதா

ஆகஸ்ட் 28, 2014: வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்தன என்றும் தீர்ப்பு செப்டம்பர் 20ஆம் தேதி வழங்கப்படும் என்றும் நீதிபதி மைக்கல் குன்ஹா அறிவிக்கிறார்.

செப்டம்பர் 16: பாதுகாப்புக் காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் இடமும் தேதியும் மாற்றப்படுகின்றன. தீர்ப்பு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவிக்கிறார்.

செப்டம்பர் 27, 2014: 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஜெயலலிதா, சசிகலா குற்றவாளி என அறிவிப்பு.

மே 11, 2015: தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

டிசம்பர் 5, 2016: முதல்வர் ஜெயலலிதலா மறைவு

பிப்ரவரி 14, 2017: மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :