சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை - ’எந்த நகருக்கும் கையாள்வது சிரமமே’

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதையொட்டி `சென்னைரெய்ன்ஸ்` என ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

பலரும் தங்களின் பகுதியில் பெய்து வரும் மழை குறித்தும் சாலையில் தேங்கியுள்ள நீர் குறித்தும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் தேங்கியிருக்கும் நீரை சென்னை மாநகராட்சி ஓய்வில்லாமல் அகற்றி வருவதாக அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆங்காங்கே விழுந்து கிடக்கும் மரங்களையும் சென்னை மாநகராட்சி அகற்றி வருகிறது.

வட கிடக்கு பருவமழையின் தொடர்ச்சியில் சராசரியாக சென்னையில் 97.27 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒரு சில மணிநேரங்களில் சென்னையில் 150மிமீ - 200மிமீ வரையிலான மழை பொழிந்துள்ளது. நகரில் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எந்த ஒரு நகரும் இத்தனை மழையை கையாள்வது கடினமே என வானிலை குறித்த செய்திகளைச் சுயாதீனமாக வழங்கி வரும் ’சென்னை வெதர் மேன்’ தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை மைய அறிக்கையின் படி, அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை,திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் தென் மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து விலகி வட கிழக்கு பருவமழை கேரளா மற்றும் தென் இந்தியப் பகுதிகளில் துவங்கியுள்ளது என இந்திய வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :