பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல் - என்ன நடந்தது?

தமிழகத்தில் கோவை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது என்ற புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்தவர்களை கண்டறிந்து கைது செய்யவேண்டும் என பெரியாரிய அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில், போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருண்கிருஷ்ணன் என்பவர், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் பாரத்சேனா அமைப்பை சேர்ந்தவர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பெரியார் அமைப்பினர், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அரசியல்கட்சி தலைவர்கள் ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ''என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்.சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்,'' என தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பெரியார் சிலை அவமரியாதை குறித்து, ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












