You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மர நிழல் இல்லாமல் போவது எப்படி பெரும் எண்ணிக்கையிலான மக்களை பட்டினியில் தள்ளும்?
- எழுதியவர், மார்க் கின்வர்
- பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்
ஹைதராபாத்தின் தெருக்களில் வணிகம் செய்யும் வணிகர்களுக்கு ‘மர நிழல்' மறுக்கப்படுவதாக ஓர் ஆய்வு கூறுகிறது.
நகரங்களில் தெருவோரம் செய்யப்படும் வணிகங்களில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அந்த மர நிழல்களில் அமர்ந்துதான் எளிய தெருவோர வியாபாரிகள் வணிகம் செய்கிறார்கள். மரங்கள் இல்லாமல் போனால் இவர்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்வார்கள். இது இவர்களை நம்பி இருக்கும் நகர ஏழை மக்களின் உணவு பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும்.
இந்த ஆய்வு முடிவானது லேண்ட்ஸ்கேப் மற்றும் அர்பன் பிளானிங் சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றத்துக்கான மையமும், பிற அமைப்புகளும் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வினில் அங்கம் வகித்த சுகன்யா பாசு உலகெங்கிலும் நகரங்களில் உள்ள மரங்கள் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்.
தகிக்கும் நவீன நகரங்கள்
இந்த மரங்கள் வெட்டப்படுவதனால் ஏற்படும் தாக்கத்தை கணக்கிடும் போது, அந்த மரத்தை நம்பி இருப்பவர்களைக் கணக்கில் கொள்வதில்லை.
“நாம் இந்திய நகரங்களை உற்று நோக்கினால், மரங்களை அதிகம் சார்ந்து இருப்பது தெருவோர வணிகர்கள் என்பது தெரியும். அவர்கள் தங்கள் வாழ்நாளில் அதிக நாட்களை தகிக்கும் சூரியனுக்கு கீழ் கழிக்கிறார்கள்,” என்கிறார் சுகன்யா பாசு.
அந்த மரங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பை வர்ணிக்கும் எந்த இலக்கியங்களும் இல்லை என்கிறார் அவர்.
மரங்களுக்கும் வணிகர்களுக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்ய ஹைதராபாத்தை களமாக எடுத்துக் கொண்டது இந்த ஆய்வு குழு.
காலநிலை மாற்றத்துடன் இதனை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பக்கம் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, இந்த பின்னணியில் யோசித்து பாருங்கள், மரங்கள் தெரு வணிகர்களின் வாழ்வில் எப்படி பின்னிப் பிணைந்து இருக்கிறது என புரியும் என்கிறார் சுகன்யா.
நிழல் மட்டும் ஒரு காரணம் அல்ல, வணிகர்களுக்கும் மரங்களுக்கும் ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம் இருப்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்ததாகக் கூறுகிறார் சுகன்யா.
ஆனால், பல்வேறு காரணங்களால் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மரங்களுக்கும் வணிகர்களுக்குமான தொடர்பு அறுபட்டு வருகிறது என்கிறார் அவர்.
உணவு பாதுகாப்பு
நகரங்களில் வசிக்கும் ஏழை மக்கள் உணவு வாங்க, உடை வாங்க, பிற பொருட்கள் வாங்க இந்த தெரு வணிகர்களையே சார்ந்து இருக்கிறார்கள். இந்த தெரு வணிகர்களின் வாழ்வில் ஏற்படும் சிறு பிரச்சனையும் இந்த ஏழை மக்களின் வாழ்விலும் தாக்கம் செலுத்தும் என்கிறார் பாசு.
ஆனால், நகரங்களை திட்டமிடும் போது இது எதனையும் திட்டக்குழுவில் இருப்பவர்கள் கருத்தில் கொள்வதில்லை என்கிறார் அவர்.நகரங்களை திட்டமிடும் போது கொள்கை வகுப்பாளர்கள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: