சாத்தான்குளம் சிசிடிவி வீடியோ வெளியானது: முதல் எஃப்.ஐ.ஆருடன் முரண்பாடு

பட மூலாதாரம், Twitter
சாத்தான்குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. காவல்துறையினர் முதன் முதலில் பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையுடன் இந்தக் காட்சிகள் முரண்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு உயிரிழந்தனர். இவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டே உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு ஒன்றை பதிவுசெய்திருந்தனர். இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில்,
"APJ மொபைல்ஸ் கடை அரசு அனுமதியளித்துள்ள நேரத்திற்கு பிறகு, அரசு உத்தரவை மீறி திறந்திருந்தது. கடையின் முன்பு கடையின் உரிமையாளர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸ் என்பவரும் அவரது நண்பர்களும் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களைக் கூட்டம் போட வேண்டாம், அமைதியான முறையில் செல்லுங்கள் என்று சொன்னோம். அதற்கு மற்றவர்கள் கலைந்து சென்றுவிட்டார்கள். மேற்படி ஜெயராமும் அவரது மகன் பென்னிக்சும் தரையின் அமர்ந்து கொண்டு போக முடியாது என்று சொல்லி தரையில் உருண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சிசிடிவி காட்சி:
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இந்த நிலையில், இந்த மொபைல் கடைக்கு அருகில் இருந்த கடையின் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது ஊடகங்களுக்கு கிடைத்துள்ளன. அந்த வீடியோ காட்சியில் ஜெயராஜ் கடையின் வாயிலில் தனியாக நிற்பதும், யாரோ அழைத்ததும் அங்கிருந்து செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த நேரத்தில், எஃப்ஐஆரில் குறிப்பிட்டபடி அவரது மகன் பென்னிக்ஸோ, அவரது நண்பர்கள் கூட்டமோ அங்கே இல்லை. அவர்கள் தரையில் விழுந்து உருளுவது போன்ற காட்சிகளும் இல்லை.
இதற்கு சில நிமிடங்களுக்குப் பிறகே பென்னிக்ஸ் அங்கு வருவதும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும் காட்சிகளும் இந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்கள் அனைத்தும் இரவு ஒன்பதே முக்கால் மணியிலிருந்து ஒன்பது ஐம்பதுக்குள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
எனினும் இந்தக் வீடியோவின் உண்மைத் தன்மையை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
இந்தக் காட்சிகள் அனைத்தும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் பதிவான தகவல்களுக்கு முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன.
பிற செய்திகள்:
- சாத்தான்குளம்: சமூக ஊடகங்களில் அத்துமீறல்களை கொண்டாடும் சில போலீஸார் - காவல்துறை கூறுவது என்ன?
- "தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரைக்கவில்லை": மருத்துவர் குழு
- சாத்தான்குளம்: சமூக ஊடகங்களில் அத்துமீறல்களை கொண்டாடும் சில போலீஸார் - காவல்துறை கூறுவது என்ன?
- கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு - நான்கு பேர் உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












