இந்தியா - சீனா எல்லை பதற்றம் எங்கு போய் முடியும்? அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன் மற்றும் விகாஸ் பாண்டே
- பதவி, பிபிசி
ஆசியாவின் இரு முக்கிய நாடுகளின் ராணுவங்களும் இமயமலையில் குவிக்கப்பட்டுள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. நிலைமை மேலும் மோசமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியத் தலைவர்களுக்கும், ராணுவ உத்தியாளர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா கட்டுமானப்பணிகளை செய்வதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் இதனால் சீனா சொல்ல வரும் செய்தி டெல்லி தலைவர்களுக்கு தெளிவாகவே இருக்கிறது. இது வழக்கமான ஊடுருவல் அல்ல எனும் செய்திதான் அது.
"சூழல் மோசமாக உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமானது என்று ஏற்கனவே சீனாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிக்குள்ளே அவர்கள் தற்போது நுழைந்துள்ளனர். அதனால், அங்கிருந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது" என்கிறார் இந்திய ராணுவ நிபுணரான அஜய் சுக்லா.
இந்த மாற்றத்திற்கு காரணம் இந்தியா மாறியதுதான் என்று சீனா கூறுகிறது.
லடாக்கில் இருதரப்பினரிடையே இருமுறை மோதல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கால்வன் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்க்ஸ் மற்றும் பங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் இருதரப்பிற்கும் மோதல் நிலை ஏற்பட்டது.

இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது. இருப்பினும், இரு நாடுகளும் இன்னும் முழுமையாக எல்லைகளை வரையறுக்கவில்லை. ஏனென்றால் பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தகராறு நீடிக்கிறது.
இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு வாகனங்களிடையே அடிக்கடி மோதல் நிகழ்வுகள் இருந்தாலும், கடந்த 4 தசாப்தங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஏதும் இருக்கவில்லை.
உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட இந்த இருநாடுகளும் அவ்வப்போது பல தருணங்களில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
எது எவ்வாறு இருந்தாலும், இருக்கும் நிலையை அப்படியே தக்க வைத்துக் கொள்ள, நிஜமான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அதாவது எல்.ஏ.சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அது இன்னும் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இந்த எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில், பல பனிப்பாறைகள், பனிப் பாலைவனங்கள், மலைகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றன. எல்.ஏ.சி-யை ஒட்டியப் பகுதிகளில் இதுபோன்ற பல பகுதிகள் உள்ளன, அங்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.
இந்த பதற்றம் லடாக் பகுதிக்கு மட்டும் இல்லை. இருநாட்டு ராணுவ வீரர்களும் சீனாவிற்கும் சிக்கிமிற்கும் இடையே உள்ள நகு லா கணவாயிலும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
மேலும், நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடம் குறித்த சர்ச்சையும் நீடிக்கிறது. சீனாவை இணைக்கும் சாலையை அமைப்பது மூலம் இந்தியா நேபாளுக்கு உட்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பதாக அந்நாடு குற்றஞ்சாட்டுகிறது.
தற்போது பதற்றம் அதிகரிப்பது ஏன்?
இதற்கு பல காரணங்கள் உண்டு.
"தற்போது கல்வான் நதிக்கு அருகில்தான் அதிக பதற்றம் நீடிக்கிறது. ஏனென்றால் ஷ்யோக் நதிக்கரையோரத்தில் இருந்து டாலட் பெக் பகுதிக்கு இந்தியா அமைக்கும் புதிய சாலை இங்கிருந்துதான் எல்ஏசி-க்கு மிகவும் நெருக்கமான இருக்கிறது" என்று சுக்லா கூறுகிறார்.
இது சீனாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
"கால்வன் பள்ளத்தாக்கு சீன பிராந்தியத்துக்கு உட்பட்டது. உள்ளூர் எல்லைக் கட்டுப்பாட்டு சூழல் தெளிவாக இருக்கிறது" என சீன அரசு ஊடக நிறுவனமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
"சீன ராணுவத்தை பொறுத்தவரை, இந்தியாதான் கால்வன் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்ததாக கூறுகிறது. எல்லையில் இருக்கும் சூழலை இந்தியா மாற்றுவதே, சீனாவின் கோபத்திற்கு காரணம்" என்று உலக விவகாரங்களுக்கான செங்க்டு நிறுவனத்தின் தலைவர் லாங் ஷிங்சுன் தெரிவிக்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியது பிராந்திய வரைபடத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது.
இதன்படி அக்சாய் சீனா லடாக் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியை, இந்தியா தனக்கு சொந்தம் என்று கூறியது.
வில்சன் சென்டர் என்ற வல்லுநர் அமைப்பில் ஆசிய திட்டத்தின் துணை இயக்குநராக இருக்கும் மைக்கெல் கூகெல்மேன் கூறுகையில், "இது வழக்கமான மோதல் கிடையாது. தங்களுடைய பலத்தை காண்பிக்கவே எல்லையில் ராணுவ வீரர்களை சீனா நிறுத்தியுள்ளது" என்றார்.
மோதல் ஏற்பட்டால் ஆட்களையும் அதற்கு தேவையானவற்றையும் எல்லைக்கு அனுப்ப இந்தியா வேகமாக நடவடிக்கை எடுக்கும்.
கடந்த ஆண்டில் மற்றக் கொள்கைகளிலும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின.
பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரை மீண்டும் கைப்பற்றுவது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர்.
நீண்டகால நட்பு நாடுகளாக இருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் சாலையான கரகொரம் நெடுஞ்சாலை இப்பகுதியில்தான் செல்கிறது.
பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீனா சுமார் 60 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் பாகிஸ்தானிய துறைமுகம் குவாடரில் இருந்து சீனாவுக்கு சரக்கு போக்குவரத்து செய்யப்படுகிறது. இந்தத் துறைமுகம்தான் அரபுக்கடலில் சீனாவிற்கு இருக்கும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த உதவுகிறது.

இது எங்கு போய் முடியும்?
"எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இருநாட்டு ராணுவங்கள் அவ்வப்போது மீறுவது வழக்கம்தான். இதுபோன்ற நிகழ்வுகள் அப்பகுதியில் ராணுவ மட்டத்திலேயே பேசி தீர்க்கப்படும். ஆனால், தற்போது நடப்பது நாங்கள் கண்டிராத ஒன்று" என்கிறார் இந்தியா - சீனா விவகாரங்களுக்கான வல்லுநரும் முன்னாள் இந்திய அரசின் அதிகாரியுமான ஸ்டோப்டன்.
"தனக்கு மிகவும் முக்கியம் என்று இந்தியா கருதும் சில பகுதிகளில் மோதல் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாங்காங் ஏரி கைவிட்டு போனால் லடாக்கை காப்பாற்ற முடியாது. ஷ்யோக் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் குடியேற அனுமதிக்கப்பட்டால், அவர்கள் நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் சியாச்சினை கூட அடையலாம்" என்று அவர் கூறுகிறார்.
இந்தியா இதுபோன்ற ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதற்கு புலனாய்வு தோல்வியே காரணம் என்று கருதப்படுகிறது. எல்லைப் பிராந்தியத்தில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க, அதற்குள் சீனா அங்கு அந்நாட்டின் ராணுவத்தையும் தேவையான உபகரணங்களையும் குவித்துவிட்டது.
இதனால் ஆபத்தை உணர்ந்த இந்தியாவுக்கு, தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஒன்று, பேச்சுவார்த்தை மூலம் துருப்புகளை திரும்பிப் பெற இந்தியா சீனாவை சம்மதிக்க வைக்கலாம். அல்லது கட்டாயப்படுத்தி அவர்களை வெளியேற்றலாம். ஆனால், இரண்டுமே அவ்வளவு எளிமையானது கிடையாது.
"உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவ சக்தியாக சீனா திகழ்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை விட சீனா வலிமையானது. சீனா மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளை கொண்டது. ராணுவத்திற்கு தேவையானவற்றை பெற சீனாவிடம் நிதியை செலவழிக்கும் திறன் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலை இதற்கு ஏதுவாக இல்லை. மேலும், கொரோனா வைரஸ் தொற்று, இந்திய பொருளாதார சூழலை அதிகம் பாதித்துள்ளது" என்று அஜய் சுக்லா கூறுகிறார்.
அடுத்து என்ன?
இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் 1962ல் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்பட்டது.
தனது பிராந்தியத்தின் 38,000 கிலோ மீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. எல்லைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர கடந்த 3 தசாப்தங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

பட மூலாதாரம், PRESS INFORMATION BUREA
இந்தியா தனக்கு சொந்தமானது என்று கூறும் லடாக்கின் கிழக்கில் இருக்கும் அக்சாய் சீனா, ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தையும் மேற்கு திபெத்தையும் அக்சாய் சீனா இணைப்பதால், அது மூலோபாய ரீதியாக சீனாவுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
"பதற்றத்தை அதிகரிக்கும் எண்ணம் சீனாவிற்கு இல்லை. இந்தியாவும் மோதலை தவிர்க்கவே நினைக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், என்ன நடக்கும் என்பது இருதரப்பையும் சார்ந்தது. உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்கும் வல்லமை இரு நாடுகளுக்கும் இருக்கிறது" என்று செங்டு நிறுவனத்தின் லாங் ஷிங்சுன் கூறுகிறார்.
எல்லை தகராறு குறித்து சீன ஊடகங்கள் பெரிய செய்திகள் ஏதும் வெளியிடவில்லை. அதனால் பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சனையை சீனா தீர்க்க நினைப்பதாகவே தெரிகிறது.
"இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் ராணுவ பதற்றத்தை தவிர்த்து, தங்களின் பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தவதில் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிகிறது" என்கிறார் ஆபத்துக் கட்டுப்பாட்டு ஆலோசனை அமைப்பின் தெற்காசிய இயக்குநர் ப்ரத்யுஷ் ராவ்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












