கொரோனா வைரஸ்: வெளிமாநில தொழிலாளர்களின் பயண செலவை காங்கிரஸ் தரும் - சோனியா காந்தி

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான பயணச் செலவை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்றுக்கொள்ளும் என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பாக காங்கிரஸ் பல முறை குரல் கொடுத்தும் மத்திய அரசும் ரயில்வே அமைச்சகமும் அதனைக் கண்டுகொள்ளவில்லையெனக் கூறியிருக்கிறார்.

"நம் தொழிலாளர்கள்தான் நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அவர்களது கடின உழைப்பும் தியாகமும் நமது நாட்டின் அஸ்திவாரம்.

நான்கு மணி நேர அவகாசத்தில் மத்திய அரசு ஊரடங்கை அறிவித்ததால், வெளிமாநிலத் தொழிலாளர்களால் தங்கள் ஊருக்குத் திரும்ப முடியவில்லை. 1947 பிரிவினைக்குப் பிறகு, இவ்வளவு பெரிய அளவில் துயரம் நிகழ்வது இப்போதுதான். ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் உணவு, மருந்து, பணம், போக்குவரத்து ஏதுமின்றி தங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு பல நூறு மைல் நடந்து வீடுதிரும்புகிறார்கள். அவர்களுடைய நிலையை நினைத்துப் பார்த்தாலே நமது இதயம் உடைந்துவிடும்.

பொதுமக்கள் இவர்களுக்கு உதவுகிறார்கள் என்றாலும், அரசின் பொறுப்பு இதில் என்ன? இப்போதும் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் நாட்டின் பல பகுதிகளில் துன்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடு திரும்ப விரும்பினாலும் அதற்குப் பணமோ, இலவச போக்குவரத்து வசதிகளோ இல்லை. ஆனால், இந்த நிலையில் நம்மை மிகவும் வருந்தச் செய்வது, மத்திய அரசும் ரயில்வே அமைச்சகமும் இந்தச் சூழலிலும்கூட ரயில் கட்டணம் கேட்பதுதான்.

நம்முடைய குடிமக்கள் வெளிநாட்டில் சிக்கியிருக்கும் அவர்களுக்காக இலவசமாக விமானப் பயணத்தை ஏற்பாடு செய்கிறது. குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கான போக்குவரத்திற்காகவும் உணவிற்காகவும் 100 கோடி ரூபாய் செலவிடப்படும்போது பிரதமரின் கொரோனா நிதிக்காக ரயில்வே அமைச்சகம் 151 கோடி ரூபாயை தானமாக அளிக்கும்போது, தொழிலாளர்களுக்காக இலவச ரயில் போக்குவரத்தை அளிக்க முடியாதா?

ஊரடங்கு துவங்கியதிலிருந்து இந்த விவகாரத்தை காங்கிரஸ் எழுப்பி வருகிறது. தொழிலாளர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்ப இலவச ரயில் சேவையை வழங்க வேண்டும். நாம் திரும்பத் திரும்ப இது குறித்து வலியுறுத்தியபோதும் மத்திய அரசும் ரயில்வே அமைச்சகமும் கண்டுகொள்ளவில்லை.

ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு முடிவெடுத்திருக்கிறது. வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்குத் தேவையான ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகள் செலுத்தும்" என தன்னுடைய அறிக்கையில் சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டிருந்த ட்வீட்டில், ரயில்வே இலவச பயணத்திற்கு மறுத்தால் PM Careல் இருந்து அந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டியதுதானே எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், தான் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் இது தொடர்பாக பேசியிருப்பதாகவும் ரயில் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசும் 15 சதவீதத்தை மாநில அரசும் தரும் எனவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென்றும் மற்றொரு ட்வீட்டில் சுவாமி தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயணம் செய்ய தொழிலாளர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே. சிவகுமார் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பாக கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார்.

இதற்குப் பிறகு, முதல்வர் பி.எஸ். எடியூரப்பா வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த மூன்று நாட்களுக்கு மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்துகள் இலவசமாக இயங்கும் என அறிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: