You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: 20 ஆயிரத்தை கடந்த எண்ணிக்கை, மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க அவசர சட்டம் - அண்மைய இந்திய தகவல்கள்
இந்தியாவில் இதுவரை 20,471 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 3959 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 652 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இந்தியாவை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற சுகாதார பணியாளர்கள் முயற்சித்து வருவதாகவும், அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதார பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அதன்படி யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
நோய்தொற்று பரவல் சட்டம்,1897ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அது விரைவில் அமலுக்கு வரும் என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர், இது ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும் என்பதையும் குறிப்பிட்டார்.
மேலும், விமான சேவைகள் இயங்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சேவைகள் தொடங்கும் முன் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும் - மோதி
கோவிட் 19 நோய் தொற்றை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளரின் பாதுகாப்பை உறுதிபடுத்த, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோய் தொற்று பரவல் அவரச சட்ட மசோதா 2020 உதவும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்துள்ளார்.
சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை இந்த சட்டம் உறுதிபடுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அதன்படி யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் இந்திய அரசு தெரிவித்திருந்தது.
மேலும் இந்தியாவில் இனி தினமும் மத்திய சுகாதார அமைச்சகம் செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து நேரடியாக விளக்கம் அளிக்காது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படும். ஆனால் தினமும் அறிவிக்கை மூலம் கொரோனா வைரஸ் பரவல் குறித்து விளக்கம் அளிக்கப்படும். மேலும் கட்டுப்பாடுகள் குறித்தும் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்று ஏ.என். ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
ராஜஸ்தானில் 9000 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.
ராஜஸ்தானில்ஏற்கனவே தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12,500 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்படாமல் இருந்தனர். தற்போது ராஜஸ்தான் முதல்வர் அளித்த உத்தரவின் பேரில் பல்வேறு மருத்துவ துறைகளில் 9000 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்படஉள்ளனர் என அம்மாநில சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பரிசோதிக்கவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு
மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸுக்கான போதுமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது பொய். இதுவரை 7037 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அம்மாநில தலைமை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக 6 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் ஒரு மருத்துவர் உட்பட ஆறு சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பணிபுரிந்த பாட்டியா மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
சீனாவை விட ஹரியாணாவில் பரிசோதனை உபகரணங்கள் விலை குறைவாகவுள்ளது
ஹரியானா மாநிலம் ஏற்கனவே 1.1லட்சம் பரிசோதனை உபகரணங்களை சீனாவின் இரண்டு முன்னனி நிறுவனத்திடம் முன்பதிவு செய்திருந்தது. ஆனால் சீனா நிறுவனங்கள் ஆர்டர்களை ரத்து செய்ததால் தென் கொரியாவில் பரிசோதனை உபகரணங்கள் வாங்க ஹரியாணா மாநிலம் முடிவு செய்தது.
எனவே 1 லட்சம் பரிசோதனை உபகரணங்களை ஆர்டர் செய்த ஹரியாணாவிற்கு தற்போது 25 லட்சம் பரிசோதனை உபகரணங்கள் கிடைத்துள்ளது.
மேலும் சீனாவை விட ஹரியாணாவில் பரிசோதனை உபகரணங்கள் விலை குறைவாகவுள்ளது அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இழப்பீட்டு தொகை அதிகரிப்பு : தமிழக அரசு
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடிவரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், உள்ளாட்சித் துறையினர் ஆகியோர் உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ஐம்பது லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு எதிராகப் பணியாற்றிவரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களது சிகிச்சை முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் தரப்படுமென்றும் உயிரிழந்தால் பத்து லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர் உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படுமென்றும் அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள் தனியார் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசுத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் உயிரிழக்கும்பட்சத்தில், அவர்களது உடல்கள் உரிய மரியாதையுடனும் பாதுகாப்புடனும் அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழக்கும் பணியாளர்களைப் பாராட்டி விருதுகளும், பாராட்டுகளும் வழங்கப்படுமென்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: