You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: முடங்குகிறது டெல்லி, ஆந்திரா, தெலங்கானா - அண்மைய தகவல்கள் Coronavirus in India
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபடி, 14 மணி நேர மக்கள் ஊரடங்கு தொடங்கி நடந்துவரும் நிலையில், அதை மக்கள் நலன் கருதி தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 5 மணிவரை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இப்படியான சூழலில் டெல்லி மெட்ரோ சேவையை மார்ச் 31ஆம் தெதி வரை முடக்குவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் கூறி உள்ளது.
அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும், இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லியில் 144 தடை உத்தரவு, மார்ச் 22 தேதி இரவு 9 மணியில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 12 மணிவரை இந்த தடை உத்தரவு நீடிக்கும். இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தரவுள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று இருந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் இறந்தார்.
டெல்லியில் ஊரடங்கு
இன்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
- டெல்லியில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- டெல்லியில் உள்நாட்டு விமான சேவை மார்ச் 31ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
- மார்ச் 23 அதாவது திங்கள் காலை 6 மணி முதல் மார்ச் 31 இரவு 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ஊரடங்கின் போது தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் ஈ-ரிக்ஷாக்கள் இயங்காது எனவும் 25 சதவீத டிடிசி பேருந்துகள் மட்டும் இயங்கும் எனவும் கூறியுள்ளார்.
- அனைத்து தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கும். ஆனால் ஊழியர்களுக்கு சம்பளம் ஏதும் குறைக்கப்படாது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா
அதுபோல ஆந்திரா மற்றும் தெலங்கானாவும் முடக்கப்பட்டது.
ஆந்திரா மாநிலத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு கொல்கத்தாவில் இருந்து வந்த அவர், சிறுநீரகக் கோளாறு காரணமாக இறந்தார் என பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த பிரபாத் குமார் சிங் தெரிவித்தார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆகியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேலும் புதிதாக 10 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜார்கண்ட்
ஜார்கண்ட் மாநிலம் மார்ச் 31 வரை முடக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், குடோன்களை மூட உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. வழிப்பாட்டு தலங்களும் இந்த சமயத்தில் மூட உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7-வது நோயாளி
ஸ்பெயினில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஊரடங்கு நடந்துவரும் நிலையில், இந்தியாவின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடியுள்ளன. மக்கள் நடமாட்டமோ, வாகனப் போக்குவரத்தோ இல்லாமல் தெருக்கள், சாலைகள் துடைத்து வைத்ததைப் போல காட்சியளிக்கின்றன.
இதனிடையே ஊரடங்கு தொடங்குவதற்கு சற்று முன்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, "இன்னும் சற்று நேரத்தில் மக்கள் ஊரடங்கு தொடங்க இருக்கிறது. நாம் எல்லோரும் இதில் பங்கு வகிப்போம்" என்று தெரிவித்து டிவிட்டரில் வீடியோ ஒன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கலிஃபோர்னியாவில் இருந்து வந்த 64 வயதான பெண் ஒருவரும் துபாயில் இருந்து வந்த 43 வயதான ஆண் ஒருவரும் திருநெல்வேலி மாவட்ட மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் 9 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் மார்ச் 31 வரை முழு முடக்கம் - முதல்வர் உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31 வரை பூரண முடக்கம் செய்ய மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். மாநில மக்கள் தொடர்பு அலுவலர்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி முகமை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, இந்த மக்கள் ஊரடங்கு நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அப்போது நரேந்திர மோதி என்ன பேசியிருந்தார் தெரியுமா? அவரது உரை பற்றிய விரிவான செய்தி இதோ:
இன்று மக்கள் ஊரடங்கு தொடங்கிய நிலையில், இந்தியா முழுவதும் இன்று காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கிளம்புவதாக இருந்த அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: