You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Coronavirus: அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த மாணவருக்கு கொரோனா, திருப்பதி கோயில் மூடல்
அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த மருத்துவ மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது தமிழகத்தில் இந்த நோய்த் தொற்றியோர் எண்ணிக்கையை 3 ஆக ஆக்கியுள்ளது.
17-ம் தேதி சென்னை வந்தவுடனே அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். நேற்று மார்ச் 18 அன்று அவர் அறிகுறிகளோடு ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனை, தனிமைப்படுத்தல் வார்டில் உள்ள அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடயே, தமிழகத்தில் 320 பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் 232 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 86 பேரின் மாதிரிகள் பரிசோதனையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தமது முந்தைய ட்வீட் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
திருப்பதி இலவச தரிசனம் மூடல்
இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் எச்சரிக்கை இருந்தபோதும் கூட்டம் குறையாமலே இருந்துவந்த திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் அனைத்து தரிசனங்களும் மறு உத்தரவு வரும்வரை மூடப்படுவதாக கோயில் மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
1892ஆம் ஆண்டில் இரண்டு நாட்கள் திருப்பதி கோயில் மூடப்பட்டது. அதற்கு பிறகு சமீபத்திய வரலாற்றில் இக்கோயில் இப்போதுதான் மூடப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று தொடர்பாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைள் குறித்து டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.
- வரும் மார்ச் 21ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று இத்தாலி தலைநகர் ரோமிற்கு செல்ல உள்ளது. அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் உட்பட மற்ற பயணிகள் அதில் இந்தியா திரும்புவார்கள்.
- நாட்டில் பொது போக்குவரத்து சேவைகளான மெட்ரோ, ரயில் சேவை, பேருந்துகள் ஆகியவை குறைக்கப்படவுள்ளன.
- அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
- நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள், தேர்வு மையங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
- முகமூடிகள், சானிடைஸர்கள் மேலும் மருத்துவ சாதனங்கள் ஏதெனும் அதிக விலைக்கு விற்கப்பட்டால் நுகர்வோர் துறை அதற்கான நடவடிக்கை எடுக்கும்.
முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு மும்பையின் புகழ்பெற்ற சித்தி வினாயகர் கோயில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்