You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கம்: விமர்சித்த பிரிட்டன் எம்.பி டெப்பி ஆப்ரஹாம்ஸ் விசா மறுப்பு
கடந்த ஆண்டு இந்திய அரசின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கி அரசு அறிவித்த முடிவை விமர்சனம் செய்த பிரிட்டனின் தொழிலாளர் கட்சி எம்பி ஒருவருக்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரங்கள் தொடர்பான பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு தலைமை வகித்துவரும் தொழிலாளர் கட்சி எம்பியான டெப்பி ஆப்ரஹாம்ஸ்:, தனக்கு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இ-விசா வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கான காரணம் எதையும் குடிவரவு அதிகாரிகள் விளக்கவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கி இந்திய அரசு எடுத்த முடிவு குறித்து இவர் கவலை தெரிவித்திருந்தார்.
அரசு எடுத்த இந்த முடிவுக்கு பரவலாக இந்தியாவில் ஆதரவு நிலை இருந்தாலும், இதற்கு சர்வதேச அளவில் குறிப்பாக சட்ட வல்லுநர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமையன்று எமிரேட்ஸ் விமானம் மூலம் டெல்லேய் வந்திறங்கிய டெப்பி ஆப்ரஹாம்ஸிடம், அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
''எனது பாஸ்போர்ட்டை வாங்கிய ஓர் அதிகாரி, அடுத்த 10 நிமிடங்களுக்கு எங்கோ சென்றுவிட்டார். மீண்டும் வந்த அவர் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். தன்னுடன் வருமாறு அவர் உரத்த குரலில் கூறினார்'' என்று டெப்பி ஆப்ரஹாம்ஸ் தெரிவித்தார்.
அதற்கு பிறகு பல குடிவரவு அதிகாரிகள் என்னிடம் பேசினர்.எனது விசா ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்தும், டெல்லி வந்தவுடன் எனக்கு விசா உடனடியாக வழங்கப்படுமா என்பது குறித்தும் யாரிடமும் பதிலில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
''இதனால் தற்போது பிரிட்டனுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுவதற்கு நான் காத்திருக்கிறேன். இந்திய அரசின் மனம் மாறினால் ஒழிய இதுதான் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளருக்கு டெப்பி ஆப்ரஹாம்ஸ் எழுதிய கடிதத்தில், இந்திய அரசின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கி அரசு அறிவித்த முடிவு அந்த பகுதி மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் விளைவித்துவியது என்று குறிப்பிட்டிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: