குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து புதுவை சட்டப் பேரவையில் தீர்மானம்

பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி புதுச்சேரி சட்டமன்றத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இச்சட்டத்தினை நிறைவேற்றமாட்டோம் என்று தெரிவித்தும் கேரளம், மேற்கு வங்காளம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து இன்று(புதன்கிழமை) நடைபெற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்திய தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்த போது, குறிக்கிட்ட பாரதிய ஜனதா கட்சியின் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தியும், முதலமைச்சர் நாராயணசாமியை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தியும் அவையில் அமளியில் ஈடுபட்டுட்டனர். பிறகு அவையிலிருந்து வெளிநடப்பு செய்த அவர்கள் சட்டமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் இதுகுறித்து கூறுகையில், "இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் 78% மக்களிடம் ஆதரவு இருந்தவரும் நிலையில், இன்று புதுச்சேரியில் முதலமைச்சரும், சபாநாயகரும் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி அச்சட்டதினை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இச்சட்டத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. இச்சட்டத்தால் புதுச்சேரியில் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என தெரிந்தும் இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்."

"புதுவை மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்யாமல், சோனியா காந்தியையும், ஸ்டாலினையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தை கூட்டியுள்ளனர். புதுச்சேரி அரசியல் வரலாற்றிலேயே இது ஒரு கருப்பு நாள். இந்த தீர்மானத்தை கொண்டு வந்து ஜனநாயகப் படுகொலை செய்துள்ளனர். மேலும் முதலமைச்சர் மற்றும் சபாநாயகரின் மேல் நடவடிக்கை எடுக்க கோரி ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க இருக்கிறோம்," என அவர் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரைவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண் பேடி கடிதம் அனுப்பினார். அது பற்றி பேரவையில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "முதலமைச்சருக்கு ஆளுநர் ரகசியமாக அனுப்பும் கடிதத்தினை முன்னதாக வாட்சாப் மற்றும் சமூக வலைதளத்தில் கிரண் பேடி வெளியிடுவது விதிமீறிய செயல். இதனால் ஆளுநர் பதவிக்கு கிரண் பேடி இழுக்கு ஏற்படுத்துகின்றார்," என பேரவையில் முதல்வர் குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பேசிய முதல்வர், "அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஒன்றரை லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம். மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டத்தை, நாங்கள் ஏற்க மாட்டோம். புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்வது என்றால் செய்து கொள்ளுங்கள். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானவை," என்று முதல்வர் நாராயணசாமி.
தீர்மானத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து வாசித்தார். பிறகு தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்படுவதாக கூறினார். என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த சிறப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்துள்ளனர். ஆகவே எதிர்க் கட்சிகளின்றி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றிய பிறகு பத்திரிகையார் சந்திப்பில் பேசிய முதல்வர் நாராயணசாமி, "துரதிஷ்ட வசமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என கடிதம் அனுப்பியுள்ளார். புதுச்சேரி சட்டமன்றம் தொடர்பான விஷயத்தில் தலையிடும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு கிடையாது. மேலும் இச்சட்டத்தில் தங்களது நிலை என்ன என்பது குறித்து எதிர்க் கட்சியான என்.ஆர் காங்கிரஸ் தெரிவிக்கவேண்டும்," என்று குறிப்பிட்டார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கூறுகையில், "மக்கள் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் இருக்கும் நிலையில், தங்களுடைய சுயலாபத்திற்காக இன்று புதுச்சேரியில் நாராயணசாமி அரசு இந்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டியுள்ளது. எனவே இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளோம். இதை வன்மையாக கண்டிக்கிறோம்," என்றார் அவர்.
சட்டமன்றத்தில் காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளான் மண்டலமாக அறிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













