You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: "தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பில் உள்ளனர்"
கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் சாமி கோவை அரசு மருத்துவமனையில் இன்று வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்தவர், 'கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனோ வைரஸ் கைகளின் மூலமாகாவும், இருமல் அல்லது தும்மல் மூலமாகவும் பரவுகிறது.
எனவே, கைகளை தினமும் 15 முறையாவது கழுவ வேண்டும், கை வைக்க கூடிய இடங்களை சுத்தமாக வைக்க வேண்டும், தும்மும் போது மூக்கை கை குட்டைகளால் பொத்திக்கொள்ள வேண்டும். முதியவர்களும், ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தைகளையும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். விரைவில் தமிழகத்திலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை வசதிகள் அமைக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கிடையாது என்பது பொய்யான தகவல். முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.' என்றார்.
மேலும், 'சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த 78 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் அனைவரும் 28 நாட்களுக்கு வீடுகளில் வைத்து கண்கானிக்கப்படுவார்கள். சலி, இருமல், காய்ச்சல் தான் அறிகுறிகள், எனவே அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் கைகுலுக்குவதை தவிர்த்து, நமது பாரம்பரிய முறையில் வணக்கம் சொல்வதே சிறந்தது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
கொரோனா வைரஸை பாதிப்பை சோதனை மூலம் கண்டறிவதற்கு இந்தியாவில் பூனாவில் மட்டுமே வசதி உள்ளது. ஆனால், மேலும் 10 இடங்களில் இந்த வசதியை ஏற்படுத்தித் தருகிறது அரசு. அந்த அடிப்படையில் தமிழகத்தில் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் இன்னும் சில நாள்களில் இந்த வசதி கிடைக்கும் என்றார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: