You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு நடந்தது எப்படி?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் நான்கு தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக 12க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் காவல்துறையின் வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு நடந்தது எப்படி?
குரூப் - 4 எனப்படும் நான்காம் நிலை அரசுப் பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று மாநிலம் முழுவதும் நடத்தியது.
5,575 மையங்களில் 16,29,865 பேர் இந்தத் தேர்வை எழுதினார்கள். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் தரவரிசைப் பட்டியல் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியானது.
அதில் முதல் 100 இடங்களில் இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரண்டு இடங்களில் இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தனர். வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள், இந்த மையங்களைத் தேர்வுசெய்திருந்தார்கள். குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கூடுதலாக இந்த இரு இடங்களையும் தேர்வுசெய்திருந்ததாகச் சொல்லப்பட்டது.
இது தொடர்பாக பலர் புகார் அளித்ததும், இந்த விவகாரம் குறித்து டிஎன்பிஎஸ்சி விசாரிக்க ஆரம்பித்தது. விசாரணையின் முடிவில் முறைகேடு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டு, பணம் கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற முயன்ற 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் துவங்கின. இதுவரை சுமார் 12க்கும் மேற்பட்டவர்கள் இது தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முறைகேடு நடந்தது எப்படி?
முதலிடம் பெற்ற 100 பேரின் தேர்வுத்தாள்கள் சோதிக்கப்பட்டபோது, 52 பேரின் தேர்வுத் தாள்கள் மாயமாகும் மையால் முதலில் நிரப்பப்பட்டு, பிறகு திருத்தம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு அதிகாரிகளாக இருந்த இரண்டு வட்டாட்சியர்கள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லையெனத் தெரியவந்தது.
இதற்குப் பிறகு ஜனவரி 26ஆம் தேதியன்று டிஎன்பிஎஸ்சியில் எழுத்தராகப் பணியாற்றிவரும் ஓம் கந்தன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த முறைகேடு தொடர்பாக பெரும்பாலான தகவல்கள் வெளிவந்தன.
இந்த ஓம் கந்தனுக்கு பழனி என்பவர் மூலம் முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். அவர் ஓம் கந்தனிடம் தனக்கு தெரிந்த நபர்களை குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் அதற்காக 15 லட்ச ரூபாய் வரை ஓம் காந்தனுக்கு தருவதாகக் கூறி முன் பணமாக 2 லட்ச ரூபாய் வரை தந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து தேர்வு நடப்பதற்கு முந்தைய நாளே ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளுக்குச் சென்ற ஜெயக்குமார் தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு, எழுதி சிறிது நேரத்தில் மாயமாகும் பேனாக்களைக் கொடுத்தார்.
தேர்வு நடக்கும்போது அந்த மேஜிக் பேனாக்களை வைத்து தேர்வர்கள் ஓம்.எம்.ஆர் விடைத்தாளை தங்களுக்கு தெரிந்த பதிலை நிரப்பினர். இந்த விடைத் தாள்கள் பிறகு ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன.
இந்த விடைத்தாள்களை அங்கிருந்து எடுத்துவந்த சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் அளிக்கும் பணி, மாணிக்கவேலு என்பவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உதவியாக ஓம் கந்தன் நியமிக்கப்பட்டிருந்தார். விடைத்தாள்கள் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் இருந்து எடுக்கப்பட்டு ஒரு தனியார் சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்னைக்குப் புறப்பட்டன. பாதுகாப்பிற்காக காவலர்கள் சிலரும் வந்தனர்.
சென்னை வரும் வழியில் சிவகங்கையில் தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்களும் அதே வாகனத்தில் ஏற்றப்பட்டன. இந்த வாகனத்தை ஜெயக்குமார் தனது காரில் பின் தொடர்ந்தார். விடைத்தாள்களை ஏற்றிவந்த வாகனம் சிவகங்கையைத் தாண்டிய பிறகு, சிறிது தூரத்தில் உணவிற்கென நிறுத்தினார் ஓம் கந்தன்.
அப்போது விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து விடைத்தாள்கள் ஜெயக்குமாருக்கு கைமாறின. அவற்றைத் தன் காரிலேயே வைத்து திருத்தத் துவங்கினார் ஜெயக்குமார்.
இதன் பிறகு விழுப்புரம் அருகில் உள்ள விக்ரவாண்டியில் அதிகாலையில் விடைத்தாள்களின் வாகனம் மீண்டும் நிறுத்தப்பட்டது. அப்போது ஜெயக்குமாரிடமிருந்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஓம் கந்தன் பெற்றுக்கொண்டார்.
விடைத்தாள்கள் டிஎன்பிஎஸ்சியில் ஓப்படைக்கப்படும்போது திருத்தப்பட்ட விடைத்தாள்களும் சேர்த்து வைக்கப்பட்டன. ஆனால், காரில் வரும்போது பணம் பெற்றுக்கொண்ட எல்லோருடைய விடைத்தாள்களையும் ஜெயக்குமாரால் திருத்த முடியவில்லையெனக் கூறப்படுகிறது.
தற்போதுவரை இந்த விவகாரத்தில் ஓம் கந்தன் உட்பட 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகின்றனர். காவல்துறையில் பணியாற்றிவரும் ஒருவரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டுவருகிறது.
இந்த வழக்கை தற்போது மத்திய குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்துவருகிறது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஓம் காந்தன் (டிஎன்பிஎஸ்சி எழுத்தர்), ரமேஷ் (பள்ளிக் கல்வித் துறை உதவியாளர்), திருக்குமரன் (எரிசக்தித் துறை அலுவலக உதவியாளர்) ஆகிய மூன்று பேரும் அரசு ஊழியர்கள். இவர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட தேனியைச் சேர்ந்த பாலசுந்தரராஜ் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். பணம் கொடுத்த 99 தேர்வர்களுக்கும் வாழ்நாள் முழுக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் சிலர் இடைத்தரகர்களாகவும் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேட்டின் மையப் புள்ளியாகச் சுட்டிக்காட்டப்படும் ஜெயக்குமார் என்ற நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. வேலையைப் பெற்றுத் தருவதாக ஒவ்வொருவரிடமும் 9 லட்ச ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய் வரை பணம் பெற்றது இவர்தான் எனக் கூறப்படுகிறது. இவர் காவல்துறையினரால் தேடப்பட்டுவருகிறார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் என்பது பல்வேறு மட்டங்களில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களை தேர்வுசெய்யும் ஒரு அமைப்பு. இந்தியாவிலேயே மாகாணங்களில் ஊழியர்களைத் தேர்வுசெய்வதற்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு இதுதான். 1929ல் மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, 1957 மெட்ராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்ட பிறகு, 1970ல் தற்போதைய பெயரான தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்ற பெயர் சூட்டப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: