தமிழக அரசியல்: மு.க. ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்கு

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.
முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சரின் சார்பில் சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன் இரு அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கபட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பல பிரிவுகளிலும் தமிழகம் முதல் சில இடங்களில் இடம்பெற்றிருந்தது.
இதனை விமர்சித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை டிசம்பர் 28ஆம் தேதி முரசொலியில் வெளியானது. இந்த அறிக்கை அவதூறான கருத்துகளை வெளிப்படுத்துவதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு, டிசம்பர் 29ஆம் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவை டிசம்பர் 30ஆம் தேதி முரசொலியில் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசியுள்ளதால், அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் மு.க. ஸ்டாலினைத் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: இலங்கை வரும் சீனர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?
- பியர் கிரில்ஸ் மேன் Vs வைல்ட் ஷோவில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் நடிகர் ரஜினிகாந்த்
- ’ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்த விமானம் எங்களுடையதுதான்’ - அமெரிக்க ராணுவம்
- பொது சுகாதாரத்தில் தனியார் முதலீடு: சர்ச்சைக்குள்ளாகும் நிதிக் குழு பரிந்துரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













