You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜே.என்.யு போராட்டம்: தடுத்து நிறுத்தப்பட்ட மாணவர்கள் காயம்
ஜே.என்.யு பல்கலைக்கழக துணை வேந்தரை நீக்கக் கோரி டெல்லியில் பேரணி நடத்திய மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5ஆம் தேதியன்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து பல்கலைக்கழக துணை வேந்தரை நீக்க வேண்டும் என மாணவர்கள் கோரி வருகின்றனர்.
துணை வேந்தரை நீக்கக் கோரி மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்த முயன்றனர்.
அப்போது பேரணியில் கலந்துகொண்ட மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சில மாணவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் பிரச்சனைகளை தீர்த்து, முதன்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக ஜே.என்.யு தொடர்ந்து விளங்க ஜே.என்.யுவின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் ஜே.என்.யுவின் மாணவர் சங்க தலைவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக மனிதவள மேம்பாட்டு துறை செயலாளர், அமித் கரே தெரிவித்துள்ளார்.
நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது?
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தாக்கினர்.
இதனை கண்டித்து நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் இந்த தாக்குதலுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஜே.என்.யு மாணவர்கள் போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியது பெரிதும் பேசப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: