You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் மரண தண்டனை நிறைய விதிக்கப்படுவது ஏன்? - நிர்பயா வழக்கின் பின்னணியில் ஒரு பார்வை
- எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
- பதவி, பிபிசி
டெல்லியில் 2012 ஆம் ஆண்டில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்து, கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நான்கு பேருக்கும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றவேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் வழங்கப்பட வேண்டும் எனவும் 'நிர்பயா' என்ற பெயரால் அறியப்படும் அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மிகக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்தாலும், 2015க்குப் பிறகு யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1990களில் நடந்த மும்பை வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு அப்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனை விதிப்பதில் இந்தியாவை விட மற்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. 2018ல் நான்கு நாடுகளில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால் உலக அளவில், நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் பார்த்தால், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பின் மனித உரிமைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
எந்தெந்த குற்றங்களுக்கு இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது?
பெரும்பாலும் கொலைகள் மற்றும் பாலியல் வன்முறையுடன் இணைந்த கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 2018ல் இவற்றின் எண்ணிக்கை முறையே 45 மற்றும் 58 என இருந்தது.
இந்தியாவில் இந்தத் தண்டனைகள் இந்திய குற்றவியல் சட்ட விதிகளின் (1860) கீழ் நிறைவேற்றப் படுகின்றன.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேறு 24 சட்டங்களின் கீழ் மரண தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
1947ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, அதிகபட்ச எண்ணிக்கையில் மரண தண்டனைகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் தொகுத்துள்ள தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு, அந்த மாநிலத்தில் 354 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கடுத்த இடத்தில் ஹரியானா (90), மத்தியப் பிரதேச (73) மாநிலங்கள் உள்ளன.
2018 ஆம் ஆண்டில் புதிதாக 162 பேருக்கு மரண தண்டனைகள் விதிக்கப் பட்டுள்ளதாக தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொகுப்பு தெரிவிக்கிறது. முந்தைய ஆண்டைவிட அது 50 சதவீதம் அதிகம். சுமார் 20 ஆண்டுகளில் அதுதான் அதிகபட்ச எண்ணிக்கை.
பாலியல் வன்முறையுடன் இணைந்த கொலைக் குற்றங்களுக்கு இந்திய நீதிமன்றங்கள் மூலம் 2018ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட 35 சதவீதம் அதிகம். சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதால் நிறைய பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் 250 மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் 229 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் உலக அளவில், 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. 2017ல் இந்த எண்ணிக்கை 2,591 ஆக இருந்த நிலையில், 2018ல் அது 2,531 ஆகக் குறைந்திருந்தது.
உலகில்அதிகம் மரண தண்டனை நிறைவேற்றுவது எந்த நாடு?
கடந்த ஆண்டில் 690 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் செய்யும் சர்வதேச பொது மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 30 சதவீதம் குறைவு.
2018ல் பதிவு செய்யப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றங்களில் 80 சதவீதம், நான்கு நாடுகளில் நடந்துள்ளது:
- இரான்
- சௌதி அரேபியா
- வியட்நாம்
- இராக்
அரிதாக கடந்த நவம்பர் மாதம் வியட்நாம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், கடந்த ஆண்டு 85 மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் தகவல்கள் அரசு ரகசியமாகக் கருதப்படுவதால், முந்தைய ஆண்டுகளில் எவ்வளவு பேருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பது பற்றி நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 46 சதவீதம் அதிகமாக மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. ஜப்பானில் 15 பேர், பாகிஸ்தானில் 14க்கும் மேற்பட்டோர், சிங்கப்பூரில் 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தாய்லாந்தில் 2009க்குப் பிறகு முதன்முறையாக மரண தண்டனை மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, முந்தைய ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகமான எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. 2017ல் 23 என இருந்த இந்த எண்ணிக்கை 2018ல் 25 ஆக உயர்ந்தது.
ஆனால், உலக அளவிலான விவரங்களில் சில முன்னெச்சரிக்கைகளும் உள்ளன:
- அதில் சீனா இடம் பெறவில்லை. அங்கு ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படுவதாக பொது மன்னிப்பு சபை நம்புகிறது. ஆனால் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
- சிரியாவில் போர் காரணமாக, அங்கு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதா என்று உறுதி செய்ய முடியவில்லை
- லாவோஸ் அல்லது வட கொரியாவில் இருந்து சிறிது தகவல்கள் வந்தன அல்லது எந்தத் தகவலும் வரவில்லை.
இவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால், உலகம் முழுக்க நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் எண்ணிக்கை என்பது, குறைவான மதிப்பீடாக இருக்கும்.
எந்த நாட்டில் அதிக மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்?
தகவல் தொகுப்பில் வரம்புகள் உள்ளன. எல்லா நாடுகளுக்குமான தகவல்கள் கிடைக்கவில்லை.
ஆனால் 2018ல் அறியப்பட்ட வரையில் பாகிஸ்தானில் அதிகபட்சமாக 4,864 வழக்குகள் இருந்தன. பாகிஸ்தானில் மரண தண்டனைக் கைதிகள், உச்ச நீதிமன்றத்தில் தங்களின் அப்பீல் மனு விசாரணைக்கு வருவதற்கு 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என்று பாகிஸ்தானிய மனித உரிமைகள் அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வங்கதேசத்தில் 1,500 க்கும் மேற்பட்டோர் மரண தண்டனைக் கைதிகளாக உள்ளனர் என சர்வதேச பொது மன்னிப்பு சபை கூறுகிறது.
கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்தியாவில் 426 பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருந்தனர் என்று தேசிய சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொலைக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள், 21.8 சதவீதம் பேர் பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டவர்கள்.
அமெரிக்காவில் பெருமளவில் மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர் - 2,654 பேர் உள்ளனர். நைஜீரியாவில் 2000க்கும் மேற்பட்டோர் மரண தண்டனைக் கைதிகளாக இருக்கின்றனர்.
2018 இறுதி நிலவரத்தின்படி, சட்டபூர்வமாக அல்லது நடைமுறையில் மரண தண்டனையை பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் ரத்து செய்திருந்தன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அது 47 சதவீதம் அதிகம்.
2018 ஆம் ஆண்டில் பர்க்கினா பாசோவில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. காம்பியாவும், மலேசியாவும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு அதிகாரப்பூர்வ தடை விதித்துள்ளன.
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணமும், மரண தண்டனை அரசியல்சட்டத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளது. அமெரிக்காவில் மரண தண்டனையை ரத்து செய்துள்ள மாகாணங்களின் எண்ணிக்கை அதன் மூலம் 20 ஆக உயர்ந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: