இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்ற வழக்கிலிருந்து விடுதலை

கோட்டாபய ராஜபக்ஷ (கோப்புப்படம்)
படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ (கோப்புப்படம்)

பாரிய நிதி மோசடி தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளிலிருந்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விடுவிக்க மேல் மாகாண மூவரடங்கிய விசேட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

டி.ஏ.ராஜபக்ஷ் நினைவுஅருங்காட்சியகம் நிர்மாணிப்பதில் மூன்று கோடியே 39 லட்சம் ரூபா அரசாங்கத்திற்கு சொந்தமான நிதி கடந்த மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆட்சிக் காலத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டு, கோட்டாபய ராஜபக்ஷ் உள்ளிட்ட 7 பேரின் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியாக கோட்டாபய ராஜபக்ஷ் பெயரிடப்பட்டிருந்தார்.

இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் ஷம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

அரசியலமைப்பின் பிரகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவருக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை தொடர முடியாது என சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான அரச பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதன்படி, இந்த வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை அந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய, இந்த வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிணை கையெழுத்திட்டவர்களையும் அதிலிருந்து விடுவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 சந்தேகநபர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்த நீதிமன்றத்தை தெளிவூட்டுமாறு நீதிபதிகள குழாம், சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவின் கடவூச்சீட்டை மீள அவருக்கு வழக்குமாறும் மேல்நீதிமன்ற பதிவாளருக்கு விசேட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :