ரஃபேல் விவகாரம்: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
ரஃபேல் விமான கொள்முதலில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அப்போது, ரஃபேல் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் விதத்தில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை பிரான்சின் டஸ்ஸோ நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளியாக சேர்த்ததில் முறைகேடு எதுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருந்தனர்.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10-ந் தேதி ஒத்திவைத்த நிலையில், இன்று அந்த மனுக்கள் மீது தீர்ப்பு வெளியானது. தீர்ப்பில் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
கடந்த மே மாதம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோதியை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, 'காவலாளியே திருடன்' என்று விமர்சித்ததை எதிர்த்து தொடங்கப்பட்ட வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஃபேல் வழக்கில் மோதியை நீதிமன்றம் 'திருடன்' என்று சொன்னதாக கூறிய ராகுல் காந்தி, பின்னர் தனது கருத்திற்கு உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் மீனாட்சி லேகி தொடுத்த வழக்கை இன்று முடித்து வைத்த நீதிபதிகள், எதிர்காலத்தில் ராகுல் காந்தி எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்று தெரிவித்தனர்.
ரஃபேல் ஒப்பந்தம் என்ன சொல்கிறது?
இந்தியா, ரஷ்யா, செளதி அரேபியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள்தான் உலகிலேயே பாதுகாப்புக்காக அதிகமாக செலவு செய்கின்றன. ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக, உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருக்கிறது.
2017ஆம் ஆண்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில், இந்தியா 2.5%, இஸ்ரேல் 4.7 %, பாகிஸ்தான் 3.5%, ரஷ்யா 4.3% மற்றும் அமெரிக்கா 3.1% என்ற அளவுக்கு செலவு செய்திருந்தன.
ஊழல்களுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது தெரியுமா? அதன்படி ஒப்பந்த மோசடி குற்றச்சாட்டு பட்டியலில் சமீபத்தில் சேர்ந்தது ரஃபேல் ஒப்பந்தம். 2007ஆம் ஆண்டில் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அப்போதுதான் ரஃபேல் விமானங்களை வாங்கும் நடைமுறை தொடங்கியது, ஆனால் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. பின்னர், ஆட்சிக்கு வந்த பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2015இல் 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.
உண்மையில், இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, இந்த போர் விமானத்தை டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம் உருவாக்கியது. இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, அதாவது 2015, மார்ச் 28ஆம் தேதியன்று, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை உருவாக்கியது.
விமானங்களின் பாகங்களை இந்தியாவில் பொருத்தும் வேலையை, டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்தின் கூட்டாளியான ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் பிறகு எழுந்த சர்ச்சைகளில் பலர் சிக்கினார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவிலான ஊழல் நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சி காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. குற்றச்சாட்டுகள் தவறானவை என மோடி அரசாங்கம் கூறுகிறது.
விமானம் ஒன்றுக்கு 526 கோடி ரூபாய் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி விலை நிர்ணயித்திருந்தாலும், தற்போதைய அரசு விமானம் ஒன்றுக்கு ரூ. 1,670 கோடி விலை நிர்ணயித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
மிக் மற்றும் சுகோய் போன்ற ரஷ்ய விமானங்களை சார்ந்துள்ளது இந்திய விமானப்படை போர் விமானங்கள். அதனால் இறுதியாக 1996இல் ரஷ்யாவில் இருந்து 30 சுஹோய் விமானங்களை இந்தியா வாங்கியது. அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடம் மேம்பட்ட விமானங்கள் இருக்கும் நிலையில், ராணுவ சமநிலையை பராமரிக்க, மேம்படுத்தப்பட்ட போர் விமானங்களை இந்தியா வைத்திருப்பது அவசியமானது.
இந்தியாவின் பாதுகாப்பு வட்டாரத் தகவல்களின்படி, இந்திய விமானப்படையில் 31 விமானப்படையணி மட்டுமே உள்ளன. இருமுனைகளில் போராட இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 42 போர் விமான படையணிகள் (ஸ்க்வாட்ரன்)கள் தேவை.
ஒரு படையணியில் 12 முதல் 24 விமானங்கள் இருக்கும். மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான சாதனங்கள் பழையதாகிவிட்டதாக இந்த ஆண்டு மார்ச் மாதம்தான், நாடாளுமன்றக் குழுவிடம் இந்திய ராணுவம் கூறியிருந்தது.
ஒரு சர்வதேச அறிக்கையின்படி, பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் 750 மேம்படுத்தப்பட்ட பல்நோக்கு தாக்குதல் திறன் கொண்ட போர் விமானங்கள் உள்ளன.
இந்தியாவிடம் அத்தகைய திறன் வாய்ந்த 450 விமானங்கள் மட்டுமே உள்ளன.
இந்த நிலையில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டாலும், அதனால் சில நன்மைகளும் உள்ளன. இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் 58 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது இந்தியாவின் மொத்த பாதுகாப்பு பட்ஜெட்டில் சுமார் 20% .
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












