சந்திரயான் 2: நரேந்திர மோதி கேமராவைப் பார்த்துதான் சிவனுக்கு ஆறுதல் சொன்னாரா? #BBCFactCheck

சிவன்

பட மூலாதாரம், DD

    • எழுதியவர், உண்மை சரிபார்க்கும் குழு
    • பதவி, பிபிசி

செப்டம்பர் 7ஆம் தேதி சந்திரயானின் விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று முதலில் இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் மோதிக்குத் தெரிவித்தபோது, மோதி அவரிடம் ஏதோ பேசி சென்றுவிட்டார் அல்லது ஆறுதல் சொல்லவில்லை என்றும் ஆனால் இருவரும் கேமரா முன் வந்தபோது, கண்ணீர் சிந்திய சிவனை மோதி கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார் என்றும் கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த 27 விநாடி வைரல் வீடியோ பரவலாக பல பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ பேஸ்புக், ட்விட்டர் உட்பட பல்வேறு சமூக ஊடகங்களிலும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

வீடியோவின் முதல் பகுதியில், பிரதமர் மோதியிடம் சிவன் ஏதோ சொல்கிறார், பிறகு பிரதமர் மோதி சென்று அவரது இடத்தில் உட்கார்ந்து விட்டார். வீடியோவின் இரண்டாம் பாகத்தில் மோதி, சிவனை தனது மார்பில் அணைத்துக் கொண்டு, முதுகில் தட்டி தடவிக்கொடுக்கிறார்.

இந்த வைரல் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்களில் சிலர், 'சுற்றிலும் ஊடகங்களும் கேமராக்களும் இல்லை' என்பதால் மோதி முன்பு சிவனை திருப்பி அனுப்பியதாகவும், ஆனால் துணிகளை மாற்றிக் கொண்டு, கேமராக்கள் முன்னிலையில், அவர் சிவனைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்' என்றும் பதிவிட்டுள்ளனர்.

பிபிசி

பட மூலாதாரம், தூர்தர்ஷன்

இந்த வீடியோ குறித்து பிபிசியின் உண்மை சரிபார்க்கும் குழு ஆராய்ந்தது. எங்கள் ஆய்வில் இந்த கூற்று தவறானது என்றும், தூர்தர்ஷன் நியூஸ் நேரடி ஒளிபரப்பின் இரண்டு வெவ்வேறு பகுதிகளைச் சேர்த்து, இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்தோம்.

தூர்தர்ஷன் செய்திகளின் முழு நேரடி ஒளிபரப்பைப் பார்க்கும்போது, இரு சந்தர்ப்பங்களிலும் பிரதமர் மோதி இஸ்ரோ தலைவர் மற்றும் அவரது குழுவின் விஞ்ஞானிகளுக்கு தைரியம் கொடுத்தார் என்பது தெளிவாகிறது.

முதல் பகுதி மற்றும் உண்மை

வைரல் வீடியோவின் முதல் பகுதியில், விக்ரம் லேண்டர் பற்றிய தகவல்களைப் பெற்றபின் சிவன், பிரதமர் மோதியிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டு திரும்பச் சென்றார். மோதி அவரது இடத்தில் உட்காரச் சென்றதாகத் தெரிகிறது, இது 2019 செப்டம்பர் 6 முதல் 7 வரை இரவு 1.30 மணியளவில் நடந்த ஒரு சம்பவம்.

அதன் பிறகு சற்று நேரத்தில் அதாவது 1.45 மணிக்கு, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில், விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தான அறிவிப்பை இஸ்ரோ தலைவர் கே.சிவன் முதன்முறையாக வெளியிட்டார்.

முறையான அறிவிப்புக்கு முன்னர், நெறிமுறைகளின்படி, பிரதமர் மோதியிடம் சிவன் தகவலை தெரிவித்தார்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விக்ரம் லேண்டருடனான தொடர்பு இழந்துவிட்டதாக சிவன் பிரதமர் மோதியிடம் கூறிய போது, தூர்தர்ஷனின் கேமராக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு நேரடியாக ஒளிபரப்பியது.

கேமராவைப் பார்த்துதான் நரேந்திர மோதி சிவனுக்கு ஆறுதல் சொன்னாரா?

பட மூலாதாரம், Facebook

இந்தியாவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலான தூர்தர்ஷன் இரவு 12:30 மணிக்கு, லேண்டர் விக்ரம் சந்திரனில் இறங்குவதை இஸ்ரோ மையத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கியது. அதன்படி, நேரடி ஒளிபரப்பு தொடங்கிய 23 நிமிடங்களுக்குப் பிறகு பிரதமர் மோதி 'மிஷன் ஆபரேஷன் காம்ப்ளெக்ஸில்' நுழைந்தார்.

விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் திட்டம், 51 வது நிமிடம் வரை அட்டவணையின் படி சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இஸ்ரோ மையத்தில் நிலைமை மாறியது, அமைதி ஏற்பட்டது.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

53 வது நிமிடத்தில், விக்ரம் லேண்டரிடமிருந்து எந்த சமிக்ஞையும் இல்லை என்று சந்திரயான் -2 மிஷன் இயக்குனர் ரிது கரிடலின் குரல் ஒலிபெருக்கி மூலம் கேட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு, இஸ்ரோ தலைவர் முறையான அறிவிப்பை வெளியிட்டார்.

இதன் பின்னர், பிரதமர் மோதி கட்டுப்பாட்டு மையத்தின் முதல் மாடியில் உள்ள தனது அறையில் இருந்து இறங்கி இஸ்ரோ தலைவர் உட்பட அனைத்து விஞ்ஞானிகளிடமும் உரையாற்றினார்.

சந்திரயான்

இஸ்ரோ தலைவரின் தோளில் தட்டும்போது, "உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்" என்று கூறினார்.

"வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இன்று நீங்கள் செய்திருப்பது ஒரு சிறிய பணி அல்ல. நான் உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் நாட்டிற்கும், அறிவியலுக்கும், மனிதகுலத்துக்கும் மிகச் சிறந்த சேவையைச் செய்துள்ளீர்கள். இதிலிருந்து எதையாவது கற்றுக் கொண்டிருக்கிறோம். நமது பயணம் இன்னும் தொடரும். நான் உங்களுடன் இருக்கிறேன் தைரியமாக இருங்கள்" என்று ஆறுதல் கூறினார் பிரதமர் மோதி.

இதன் பின்னர், அவர் பள்ளி மாணவர்களைச் சந்தித்து பின் இஸ்ரோ மையத்திலிருந்து வெளியேறினார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

வைரல் வீடியோவின் இரண்டாம் பகுதி

7 செப்டம்பர் 2019 அன்று, காலை டிவிட்டரில் செய்தி வெளியிட்ட பிரதமர் மோதி, பெங்களூரில் இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை காலை 8 மணிக்கு சந்திக்கப் போவதாக தெரிவித்தார்.

கேமராவைப் பார்த்துதான் நரேந்திர மோதி சிவனுக்கு ஆறுதல் சொன்னாரா?

பட மூலாதாரம், Twitter

இரவு 7.20 மணிக்கு இஸ்ரோ மையத்தை அடைந்த அவரை இஸ்ரோ தலைவர் கே.சிவன் வரவேற்றார்.

இந்த சந்தர்ப்பத்தில், பிரதமர் மோதி இஸ்ரோ மையத்தின் வளாகத்தில் கிட்டத்தட்ட இருபது நிமிட நீண்ட உரை நிகழ்த்தினார், அதில் அவர் விஞ்ஞானிகளின் வாழ்க்கை மற்றும் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

கேமராவைப் பார்த்துதான் நரேந்திர மோதி சிவனுக்கு ஆறுதல் சொன்னாரா?

பட மூலாதாரம், Twitter

"இந்திய விஞ்ஞானிகள் இந்திய அன்னையின் வெற்றிக்காக வாழ்பவர்கள், அவர்கள் கடின உழைப்பின் மீது ஆர்வம் கொண்டவர்கள். நேற்று இரவு உங்கள் மனநிலை எனக்கு புரிந்தது. உங்கள் கண்கள் பல விஷயங்களை சொல்லிக்கொண்டிருந்தன. உங்கள் முகத்தின் சோகத்தை என்னால் படிக்க முடிந்தது. அதனால்தான் நேற்று இரவு நான் உங்களிடையே தங்கவில்லை. ஆனால் நான் காலையில் மீண்டும் உங்களைச் சந்தித்து உங்களுடன் பேசவேண்டும் என்று நினைத்தேன்" என்று பிரதமர் கூறினார்.

அப்போது, இஸ்ரோ தலைவர் பிரதமர் நரேந்திர மோதியின் அருகே நின்றுக் கொண்டிருந்தார்.

பிரதமர் உரையாற்றி முடித்ததும், இஸ்ரோ தலைவர் சந்திரயான் -2 அணியின் விஞ்ஞானிகளையும் பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார், 8.15 மணியளவில் இஸ்ரோ மையத்திலிருந்து பிரதமர் வெளியேறினார்.

முழு நிகழ்ச்சியும் தூர்தர்ஷன் நியூஸில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, அதில் மோடி 'மிஷன் ஆபரேஷன் காம்ப்ளெக்ஸின்' வாயிலை அடைந்து போது, திடீரென திரும்பிச் சிவனை பார்க்கிறார். அப்போது, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த சிவனை ஆறுதல்படுத்தும் விதமாக, சட்டென்று தழுவிக்கொண்டு, தோளிலும், முதுகிலும் தட்டி ஆறுதல் சொன்னார் பிரதமர் மோதி. இதுதான் உண்மை நிலவரம் என்பது எங்களது ஆய்வில் தெரியவந்தது.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: