You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடக சட்டப் பேரவை: மீண்டும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குகிறது
வியாழக்கிழமையன்று கர்நாடக சட்டமன்றத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு, விவாதத்துக்கு பிறகு நேற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
வியாழக்கிழமையன்று தொடங்கிய நம்பிக்கை கோரும் தீர்மான விவாதம் அவையில் ஏற்பட்ட கடும் அமலிக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று காலையில் தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்வர் குமாரசாமி அதன் மீது விவாதம் நடக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஒரே நாளில் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
வியாழக்கிழமையன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கர்நாடக சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா முதலில் கேட்டுக்கொண்டார்.
முதல்வருக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தில், ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையிலும், நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் இன்றைய நாள் இறுதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையை சபாநாயகர் நடத்த முயற்சிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்குமாறு ஆளுநர் வஜூபாய் வாலா சட்டப்பேரவை தலைவர் ரமேஷ் குமாருக்கு பின்னர் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் குமாராமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
தற்போதைய நிலையில், 224 எம்எல்ஏக்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மஜத (37), காங்கிரஸ் (78), பகுஜன் சமாஜ் (1), சுயேச்சைகள் ( 2) கூட்டணியின் பலம் 118 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது.
முன்னதாக, நேற்று முதல்வர் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தராமையா, கட்சித்தாவல் தடை சட்டம் குறித்து பேசினார்.
''ஒரு கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தபோது, அவர்களை கட்சியின் ஓர் அங்கமாக கருதாமல் எப்படி தனிநபர்களாக கருதமுடியும்?'' என்று சித்தராமையா வினவினார்.
இன்று ஒரு நாளில் இது குறித்து முடிவுசெய்துவிடமுடியாது என்று சித்தராமையா மேலும் கூறினார்.
சித்தராமையாவின் கருத்துக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அவர் உண்மைக்கு மாறாக பேசுகிறார் என்று குரல் எழுப்பினர்.
கர்நாடக சட்டப்பேரவை தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''சட்டப்பேரவைக்கு வரவேண்டாம் என்று ஒரு உறுப்பினர் விரும்பினால், அவர்கள் சட்டமன்ற கையேட்டில் கையெழுத்திட சட்டமன்ற பணியாளர்கள் அனுமதிக்கமாட்டர்'' என்று பேசினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அரசியலமைப்பு சட்டத்தின்படி முடிவெடுக்க எனக்குள்ள உரிமையை நான் பயன்படுத்துவேன் என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்