You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பை வெள்ளம்: மஹாராஷ்டிராவில் மழையின் காரணமாக சுவர்கள் இடிந்து விழுந்து 24 பேர் பலி
மஹாராஷ்டிராவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் மழையின் காரணமாக சுவர்கள் இடிந்து விழுந்து சுமாராக 24 பேர் உயிரிழந்துள்ளனர்..
கடந்த 24 மணி நேரம் தொடர் தீவிர மழையினால் மஹாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, கல்யாண், புனே பகுதிகளில் நிறைய சுவர்கள் ஆங்காங்கே இடிந்து விழுந்ததால் 24 பேர் இறந்துள்ளனர்.
நேற்று இரவு மும்பையில் பெய்த மழையினால் மலாட் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கீழே இருந்த குடிசைப்பகுதியில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 75பேர் காயம் அடைந்தனர்.
மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருவதாக பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஷதாப்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் இறந்தவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மும்பைக்கு அருகில் உள்ள கல்யாண் என்னும் இடத்தில் தடுப்புச்சுவர் இடிந்து குடிசைப்பகுதியில் விழுந்து இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் இரண்டு பெண்கள் உட்பட ஆறு கட்டடத்தொழிலாளர்கள் மழையின் காரணமாக சுற்றுசுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் சனிக்கிழமையன்று புனேவில் உள்ள கொண்ட்வா பகுதியில் ஒரு குடியிருப்பின் தடுப்புச்சுவர் இடிந்து கட்டடத்தொழிலாளர்களின் தற்காலிக கூடாரம் மீது விழுந்து நான்கு குழந்தைகள் உட்பட 15 பேர் இறந்துபோன சம்பவத்திற்கு அடுத்த நாளே நடந்துள்ளது.
மழையின் காரணமாக நகரின் ரயில்வே போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.
செவ்வாயன்று மழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றிக்கு பொது விடுமுறை அரிவிக்கப்பட்டு மக்கள் வீட்டினுள் இருக்குமாரு கேட்டுகொள்ளப்பட்டனர்.
திங்களன்று இரவு ஜெய்பூரிலிருந்து மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்ஜி 6237 மும்பையில் தரையிறங்கும்போது ரன்வேயில் விழுந்தது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வந்துள்ளது.
விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"54 விமானங்களுக்கு மேல் வேறு ஊர்களுக்கு திருப்பப்பட்டதாகவும், மழைக்கு ஏற்றாற்போல் விமானங்கள் தரை இறங்குவது மற்றும் புறப்படுவது முறைப்படுத்தப்பட்டும் வருகிறது," என்றார்.
மும்பையில் இருந்து கிளம்பும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இரண்டாவது ஓடுதளம் மட்டுமே தற்போது உபயோகப்படுத்தப்படுகிறது.
மழை இன்றும் அதிகமாக இருக்கும், அதிகபட்சம் 200 மில்லிமீட்டர் மழை பதிவாகும் என வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்