இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கு இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்டதா? #BBCFactCheck

இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான பி.வி. நரசிம்ம ராவும், ராஜிவ் காந்தியும், இந்திரா காந்தியின் இறுதி சடங்கின்போது இஸ்லாமிய முறைப்படி மரியாதை செலுத்துவதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும், அந்த புகைப்படத்தின் ஓரத்தில் காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் நிற்பதை போன்று உள்ளது.

இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கின்போது அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தும் விதத்தை பார்க்கும்போதே அவர்களது மதம் வெளிப்படுவதாக பகிரப்படும் புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட புகைப்படங்கள் கடந்த மூன்று மாதகாலமாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டு வருகிறது.

இருப்பினும், அந்த புகைப்படம் தவறானது என்பதை கண்டறிந்துள்ளோம்.

உண்மை நிலவரம் என்ன?

வைரலாக பகிரப்பட்டு வரும் புகைப்படம் குறித்து தேடல் மேற்கொண்டபோது, பாகிஸ்தானை சேர்ந்த அரசியல்வாதி மொஹ்சின் தவாரின் ட்விட்டரில் பதிவு கிடைத்தது.

1988ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் கான் அப்துல் காபார் கானின் இறுதிச்சடங்கில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

மேலும், ஸ்கைஸ்கிராப்பர்சிட்டி என்னும் இணையதளத்திலும் இதே புகைப்படம், பெஷாவரில் நடந்த கானின் இறுதிச்சடங்கின்போது எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல செய்தித்தாள்களான நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸில் கானின் இறுதிச்சடங்கில் ராஜிவ் காந்தி தனது அமைச்சரவையை சேர்ந்த சிலர் மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கு

1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்ட இந்திரா காந்தியின் இறுதிச்சடங்குகள் இந்து முறைப்படி 1984ஆம் ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி நடத்தப்பட்டது.

அதுதொடர்பான பல காணொளிகள் யூடியூப் காணொளி தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட புகைப்படத்தில் ராஜிவ் காந்தி தனது தாயான இந்திரா காந்தியின் உடலுக்கு இந்து முறைப்படி தீ வைப்பதை காண முடியும்.

மேற்கண்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்களின் மூலம் இந்திரா காந்தியின் இறுதிச்சடங்குகள் இந்து முறைப்படி நடந்ததென்பது தெளிவாகிறது.

பத்தாயிரம் கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற பெண்ணின் கதை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :