You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உண்டாகியுள்ள அரசியல் சரிவு மற்றும் பிற செய்திகள்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கட்சியிலிருந்து இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கி உள்ளார். அவர்கள் இருவரும் எஸ்.என்.சி-லாவ்லின் எனும் ஒரு பெருநிறுவனத்திற்கு எதிரான கிரிமினல் விசாரணையில் ஜஸ்டின் தலையிடுகிறார் என குற்றஞ்சாட்டி, அதனை அம்பலப்படுத்தியவர்கள்.
ஜோடி வில்சன் மற்றும் ஜானெ பில்போட் ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜஸ்டின் அரசு மீது குற்றஞ்சாட்டி தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர். விரைவில் தேர்தல் நடக்க இருக்க சூழ்நிலையில் ஜஸ்டினின் தாராளவாத கட்சியிலிருந்து அவர்ஜள் நீக்கப்பட்டுள்ளனர்.
ஒரு முறைகேட்டை அம்பலப்படுத்திய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கியதன் மூலம் ஜஸ்டின் நீதிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஸ்சேர்.
பொதுத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கடந்த சில மாதங்களாக ட்ரூடோவுக்கு மக்களிடையே உள்ள ஆதரவு குறைந்து வருகிறது.
லிபியாவில் சில தொழில் ஒப்பந்தங்களைப் பெற அந்நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எஸ்.என்.சி-லாவ்லின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரஃபேல் குறித்த புத்தகம்: பறிமுதல் செய்த புத்தகங்களை திருப்பித் தர உத்தரவு
ரஃபேல் ஊழல் தொடர்பாக சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் வெளியிடப்பட்டிருந்த புத்தகம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், அப்படி பறிமுதல் செய்யும்படி கூறப்படவில்லை எனவும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை கோரியிருப்பதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய புத்தக நிறுவனமான பாரதி புத்தகாலயம், நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் என்ற தலைப்பில் ரஃபேல் விமானங்களை வாங்குவதில் நடந்த முறைகேடு குறித்து ஒரு நூலை வெளியிடுவதாக இருந்தது. இதனை எஸ். விஜயன் என்பவர் எழுதியிருந்தார்.
இந்தியாவின் செயற்கைக்கோள் அழிப்பு நடவடிக்கை சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதிக்கலாம்
செயற்கைக்கோள் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியிருப்பதை 'மோசமான விஷயம்' என்று தெரிவித்திருக்கும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இது அச்சுறுத்தலாக இருக்கு என்று கூறியுள்ளது.
10 நாட்களில் 44 சதவீதம் அதிகரித்திருக்கும் விண்வெளி குப்பைகள், சர்வதேச விண்வெளி நிலையத்தோடு மோதுகின்ற ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதாக நாசாவின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறியுள்ளார்.
எனினும், சர்வதேச விண்வெளி நிலையம் பாதுகாப்பாகவே இருப்பதாகவும், மாற்றம் ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அதனை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விரிவாகப் படிக்க:இந்தியாவின் செயற்கைக்கோள் அழிப்பு நடவடிக்கை சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதிக்கலாம் - நாசா
பத்தாயிரம் கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற பெண்ணின் கதை
ஆடம்பர வாழ்வுக்காகவெல்லாம் இல்லை. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கணிசமான மக்கள் தங்கள் சிறுநீரகத்தை விற்று வருகின்றனர். அவர்களின் கதை இது. ஒரு நிலப்பரப்பின் கதை இது. இரு நதி ஓடும் ஒரு மாவட்டத்தின் கதை இது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கதை இது.
காணொளியை காண:
தென்னிந்திய மக்களுக்கு ராகுல் சொல்லும் செய்தி என்ன?
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியின்போது, ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து போட்டியிடுவதற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "தற்போதைய பாஜக அரசாங்கம் தங்கள் மீது அக்கறை காட்டுவதில்லை என்று தென்னிந்திய மாநிலங்கள் நினைப்பதால் அங்கு எனக்கான தேவை உள்ளது. அதுமட்டுமின்றி, நரேந்திர மோதி தங்களை விரோத போக்குடன் நடத்துவதாக தென்னிந்திய மாநிலங்கள் கருதுகின்றன" என்று தெரிவித்தார்.
விரிவாகப் படிக்க:தென்னிந்திய மக்களுக்கு ராகுல் சொல்லும் செய்தி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்