மக்களவை தேர்தல் 2019: வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

    • எழுதியவர்,  இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி

"வருக வருக ராகுல் காந்தி, உங்களை வயநாடு அன்புடன் வரவேற்கிறது" - காங்கிரஸ் ஊழியர்கள் வயநாடு எங்கும் இவ்வாறான கோஷத்தை எழுப்புகிறார்கள்.

வேட்பாளர்களை அறிவிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் காங்கிரஸ் ஊழியர்கள் முதலில் உற்சாகம் இழந்து இருந்தார்கள். ஆனால், ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு அனைத்தையும் மாற்றிவிட்டது.

உற்சாகம்

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி முதலில் நம்பிக்கை இழந்து இருந்தார்கள். அதன் முதன்மை எதிர்கட்சியான மார்க்சிஸ்ட்களும் அதன் ஜனநாயக கூட்டணியும் மிகவும் வலுவாக அங்கு இருந்தது.

இதனை எதிர்கொள்ள, கட்சியினருக்கு உற்சாகத்தை ஊட்ட, இதனையெல்லாம் கடந்து சபரிமலை விவகாரத்தின் மூலம் கட்சியை வலுப்படுத்த நினைக்கும் பா.ஜ.கவை தடுத்து நிறுத்த ஒரு உறுதியான முடிவு தேவைப்பட்டது.

அது இந்த அறிவிப்பின் மூலம் சாத்தியமாக இருப்பது போல தெரிகிறது.

இந்த முடிவானது கட்சியினரை மிகவும் உற்சாகப்படுத்தி இருக்கிறது . மாநிலம் எங்கும் கட்சி ஊழியர்கள் இடையே ஓர் உற்சாக அலை வீசுகிறது. பிரதமர் வேட்பாளர் முதல் முதலாக கேரளாவில் போட்டியிடுகிறார் என்று பிபிசி இந்தியிடம் தெரிவித்தார் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா.

 இது கேரளாவில் மட்டும் ஒரு தாக்கத்தை உண்டாக்க போவதில்லை. இது அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் தமிழகத்திலும் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் என்கிறார் அவர்.

வயநாடு தொகுதி

வயநாடு தொகுதி 2009ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதிகள் பழங்குடிகளுக்கான தனி தொகுதி. கேரளாவிலேயே அதிகளவில் பழங்குடி மக்கள் இருக்கும் தொகுதி வயநாடு.

 2009 மற்றும் 2014 என இரண்டு முறையும் காங்கிரஸ் கட்சியின் ஷானாவாஸ் இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார்.

2009 ஆம் ஆண்டு ஷானாவாஸ் 152,439 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2014 ஆம் ஆண்டு அவர் 377,035 வாக்குகள் பெற்றார்.

வயநாடு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி பலவீனமாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 2009 ஆம் ஆண்டு அதன் வேட்பாளர் இந்தத் தொகுதியில் பெற்ற வாக்குகள் 31,687.

2014 மக்களவைத் தேர்தலில் அதன் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 80, 752.

ஆனால், அதே நேரம் இடதுசாரிகள் இந்த தொகுதியில் வளர்ந்து வருவதையும் தரவுகள் காட்டுகின்றன.

2009 தேர்தலில் சி.பி.ஐ வேட்பாளர் ரஹமத்துல்லாவை 1.52 வாக்குகள் வித்தியாசத்தில் ஷானாவாஸை வீழ்த்தினார். ஆனால், இந்த வாக்கு வித்தியாசம் 2014 தேர்தலில் 20,870 வாக்குகளாக குறைந்தது.

 2016 சட்டமன்ற தேர்தலில் இந்த மக்களவை தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மூன்றில் காங்கிரஸ் வென்றது, ஒன்றில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வென்றது. சி.பி.எம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மூன்று தொகுதிகளில் வென்றன.

பெயர் குறிப்பிட விரும்பாத சி.பி.எம் தலைவர் ஒருவர் இந்த முடிவானது மாநில காங்கிரஸூக்கு உற்சாகமூட்டும் என்பதை ஒப்புக் கொள்கிறார்.

அவர்,"மாநில காங்கிரஸ் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும். இந்த முடிவின் மூலம் சி.பி.எ-க்கு மாநிலம் முழுவதும் சவால் விடுகிறது காங்கிரஸ்" என்கிறார்.

பா.ஜ.கவுக்கு எதிராக

ஆனால், அதே நேரம் பா.ஜ.கவுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலக்கட்டத்தில் இது போன்ற ஒரு போட்டி தேவையற்றது என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.

அவர் போட்டியிடுவது குறித்து நாங்கள் கவலைக் கொள்ளவில்லை. அவரை எதிர்த்து போட்டியிடுவோம். ஆனால், பாரதிய ஜனதா எங்கு போட்டியிடுகிறதோ அங்குதான் அவர்களை எதிர்த்து இவர் போட்டியிட்டுருக்க வேண்டும் என்கிறார் பினராயி விஜயன்.

அரசியல் பார்வையாளர்கள் வயநாடு தொகுதியை காங்கிரஸுக்கு மிகவும் பாதுகாப்பான தொகுதியாக பார்க்கிறார்கள்.

நிச்சயம் காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதி வயநாடு என்கிறார் அரசியல் விமர்சகர் ஜி.பிரமோத் குமார்.

இந்துக்கள் இந்த தொகுதியில் 54 சதவீதமும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்லள் 49 சதவீதமும் இந்த வயநாடு தொகுதியில் இருக்கிறார்கள்.

இந்துக்கள் மத்தியில் சி.பி.எம்க்கு செல்வாக்கு இருக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இந்துக்கள் மத்தியிலும், சிறுபான்மை மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இருக்கிறது என்கிறார் பிரமோத் குமார்.

சபரிமலை விவகாரம் எந்த அளவுக்கு பா.ஜ.க எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை. பந்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் தொகுதியில் தாக்கம் செலுத்தும் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :