இணையத்தில் உங்கள் ஆபாசக் காணொளி பரவாமல் தடுப்பது எப்படி? பரவினால் நீக்குவது எப்படி?

கோப்பு படம்

பட மூலாதாரம், MANAN VATSYAYANA

படக்குறிப்பு, கோப்பு படம்

பெண்களின் மீதான இணைய வன்முறை அதிகரித்துள்ளதற்கு சான்றாக பல செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இன்றைய நவீன சமூக ஊடகங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. ஆனால், அதன் காரணமாக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பல துறைகளில் கால்பதித்து, பொது வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் மீண்டும் ஒரு வட்டத்திற்குள் சுருங்கி விட முடியாது.

அதே சமயம், நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சமூக வலைத்தளங்கள் பற்றிய முறையான விழிப்புணர்வும் , அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியாக அந்த சிக்கல்களில் இருந்து எப்படி மீண்டு வருவது என்று அறிந்திருப்பதும் அவசியமாகிறது.

சமுக ஊடகங்களில் பெண்கள் எப்படி விழிப்புணர்வோடு இயங்குவது என்பது குறித்து பெண்ணுரிமை செயற்பாட்டாளர் பத்மாவதி பிபிசி தமிழிடம் பேசினார்.

"எந்த வெப்சைட்டில் அவர்கள் புகைப்படம் இருக்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. நாம் இயங்கக் கூடிய இந்த வலைத்தளங்கள் ஒரு கேமராவை போல நம்மை எப்போதும் கண்காணித்து கொண்டே இருக்கின்றன. இதில் விழிப்புணர்வோடு எப்படி செயல்படுவது என்பதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும் என்கிறார் பத்மாவதி. முகநூல் வழியாக நட்பு வட்டத்தினை உருவாக்கும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். நமக்கு முற்றிலும் அறிமுகமில்லாத புதிய நபர்களோடு பழக ஆரம்பிக்கும் போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன.

பத்மாவதி
படக்குறிப்பு, பத்மாவதி.

ஏனெனில் போலி ஐடி-யில் இயங்குபவர்கள் மிகவும் தெளிவாக , தம்மை மிகவும் நாகரீகமானவர்களாக காட்டிக்கொள்ளும் அளவிற்கு தங்கள் முகநூல் கணக்குகளை உருவாக்கி வைத்துள்ளனர். பெண்களின் வீடியோக்களை வைத்து பல கோடிகள் புழங்க கூடிய பெருவியாபாரம் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த வியாபாரத்தில் முக்கியமாக நடைபெறுவது ஆபாச வீடியோக்கள் எடுப்பது. பெண்கள் வெளியிட்டுள்ள டாப்ஸ் மாஷ், டிக் டாக் வீடியோக்களை எடுத்து அதனை ஆபாச வீடியோக்கள் நடுவே இணைத்து ஆபாச வலைத்தளங்களில் வெளியிடுவது.முகத்தை மாப் செய்து பயன்படுத்துவது,xxx வீடியோக்களில் பதிவேற்றுவது என பல்வேறு விஷயங்கள் இதில் நடைபெற்று வருகின்றது என்கிறார் .

தேவையில்லாத செயலிகளை (app) அலைபேசியில் பதிவிறக்கம் செய்வதனை முதலில் தவிர்க்க வேண்டும்.இது போன்ற நபர்கள் முதலில் ஹாய் ஹல்லோ என்ற உரையாடல்களில் தொடங்குவர், இறுதியில் செக்ஸ் சாட்டில் சென்று நிற்கும்.எனவே, ஆண்கள் பாலியல் ரீதியாக உரையாடலை துவங்கும் போதே பெண்கள் தெளிவாகி விட வேண்டும்.

சில முகநூல் கணக்குகள் பெண்களின் பெயரில் இருக்கும், ஒரு பெண் தானே இதை கேட்கிறாள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால் அது ஒரு ஆணாக இருக்கலாம். பெண்கள் வீட்டு முகவரியினை அல்லது அலுவலக முகவரியினை அனுப்பி விடுகின்றனர்.இந்த நபர்கள் கேமிரா பொருத்திய பரிசு பொருளை அனுப்பி, அதன் மூலமாக எளிதாக வீடியோக்களை எடுத்து விடுகின்றனர்.

அடுத்து ஒரு ஆணோடு இப்படி பாலியல் ரீதியாக உரையாடி இருந்து, அதை தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்து முழுமையாக விலகி விடலாம்.ஆனால், பெண்கள் அதற்கு பின்தான் பெரிய தவறு செய்கின்றனர்.இந்த குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்கு செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்கு சென்று விடுகின்றனர்.

பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்த சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாக பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன.image removal processing மூலமாக ஆபாசமாக பதிவிட்டுள்ள புகைப்படங்களை நீக்கி விட முடியும். கூகுள் வலைத்தளத்தில் reverse image processor பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள் பகிர பட்டுள்ளது என்பதனை அறிந்து அதை நீக்கி விட இயலும்.

யூ ட்யூப் ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும். xxx வீடியோஸ் என்று சொல்லக் கூடிய ஆபாச வலைத்தளத்தில் abuse reporting form என்று ஒரு படிவம் உள்ளது.அந்த படிவத்தில் , இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பதிவேற்ற பட்டுள்ளது என்று தெரிவித்தால் அந்த காணொளியை நீக்கி விடுவார்கள் என்கிறார் பத்மாவதி.

இதனை தனியாக செய்யத் தெரியவில்லை என்றால் , அதற்கென்று சைபர் கிரைம் பிரிவு உள்ளது அல்லது இதை செய்து கொடுக்கக் கூடிய தனியார் ஏஜன்சிகள் இருக்கின்றன. உடலை வெளிப்படுத்துவதால் நமது புனிதம் கேட்டு விட்டது, கற்பு போய்விட்டது என்றெல்லாம் நினைத்து பதறாமல் ,பாலியல் அச்சறுத்தல்களுக்கு அடிபணியாமல் நிதானமாக இந்த சிக்கல்களில் இருந்து வெளியேறும் வழிகளை பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு சென்று வீடாக கூடாது என்ற பத்மாவதி முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லவில்லை, நண்பன், காதலன் போன்ற உறவுகள் ஆன்லைனில் பெறக்கூடியது அல்ல என்கின்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனிசாமி அவர்கள், சமூக வலைத்தளங்களில் உள்ள சுதந்திரத்தை சில ஆண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.இணையம் வழியாக பெண்களை துன்புறுத்துவது மிக எளிதானதாக இருக்கின்றது, பெண்கள் அதிகபட்சமாக பிளாக் செய்வார்களே தவிர பெரியதாக குற்றவியல் வழக்குகள் போடப்படுவது இல்லை.

இந்த ஒரு சுதந்திரத்தை இயல்பாகவே வக்கிரபுத்தி உள்ள ஆண்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்கிறார். இதற்காக இணைய செயல்பாடுகளை குறைத்துக் கொள்ள கூடாது. ஆனால் , எந்த மாதிரியான நபர்களோடு நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் இணைய வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் .

கிருபா முனிசாமி
படக்குறிப்பு, கிருபா முனிசாமி

ஏனெனில், இது குறித்து காவல் துறையினர்க்கு கூட தெளிவான புரிதல் இல்லை. சில நாட்களுக்கு முன்பு நான் இணைய வன்முறையால் பாதிக்கப்பட்டேன். டெல்லியில் உள்ள காவல் துறைக்கு புகார் அளிக்க சென்ற பொழுது ஆபாச வசவுகள் அனைத்தும் தமிழில் இருந்ததால் , தமிழ் நாட்டில் சென்று புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டேன். எனவே, சென்னை வந்து புகார் அளிக்கும் பொழுது 66A பிரிவு ரத்து செய்யப்பட்டு விட்டதால் இந்த வழக்கினை எடுத்துக்கொள்ள முடியாது என்று காவல் துறையினர் கூறினர். ஆனால், தொழில்நுட்ப சட்டம் 66ன் படியும் , இணைய வன்முறை சட்டப்படி குற்றம் ஆகும்என்கிறார் கிருபா முனிசாமி .

நமது நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக உள்ளன. ஆனால், அது குறித்த விழிப்புணர்வு பரவலாக இல்லை, அது மட்டுமன்றி சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. பொள்ளாச்சி சம்பவத்தினை எடுத்துக் கொண்டால் information technology act -தகவல் தொழில்நுட்ப சட்டம் , பிரிவு 67 மற்றும் 67 A இரண்டு பிரிவுகளும் , ஆபாச வீடியோக்கள் எடுப்பது , இணையத்தில் ஆபாசமாக பேசுவது ஆகியவற்றை தடுப்பதற்கான சட்டங்கள்.பிரிவு 66 ன்படியும் இவை தண்டனைக்குரிய குற்றங்கள்.

IPC 351 ன் படி பெண்களை அடித்து துன்புறுத்தி உள்ளது குற்றம்.பிரிவு 354ன் படி ஒரு பெண்ணின் கண்ணியத்தினை குலைப்பதற்காக உள் நோக்கத்தோடு பெண்ணின் மீது குற்ற நடவடிக்கைகளை எடுப்பது குற்றம். பிரிவு 357 ஒரு பெண்ணை சட்ட விரோதமாக அடைத்து வைப்பதுசட்டப்படி குற்றம் என்கின்றது .பிரிவு 362ன் படி ஒரு பெண்ணை தவறான நோக்கத்திற்காக தூண்டி விட்டு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கூட்டி செல்வது குற்றம்.

கோப்பு படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்பு படம்

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு போடப்படவில்லை.ஆனால், வீடியோ ஆதாரத்தினைக் கொண்டு வன்புணர்வு, கூட்டு வன்புணர்வு வழக்கும் போடலாம்.indecenent representaion of women act 1986, பெண்களை நாகரீமற்று நாகரீகமற்ற முறையில் புகைப்படம் எடுப்பதோ,நிர்வாணமாக அல்லது அரை நிர்வாணமாக வீடியோ எடுப்பதோ , ஓவியமாக வரைந்து இன்னொருவருக்கு அனுப்புவதோ சட்டப்படி குற்றம் ஆகும். எனவே,சட்டம் வலிமையாக இருப்பதால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கிறார் கிருபா முனிசாமி.

பெண்கள் வெளியில் வந்து அவர்களின் கருத்து சுதந்திரத்தினையோ, இணைய சுதந்திரத்தினையோ வெளிப்படுத்தும் பொழுது அவர்களின் பாதுகாப்பினை உறுதி வேண்டிய பொறுப்பு அரசுக்கும் உள்ளது.யாராவது ஒருத்தர் அரசினை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் எழுதினாலோ, மீம்ஸ் போட்டாலோ தேடி வந்து கைது செய்யும் அரசாங்கம் இது போன்ற சம்பவங்களுக்கு மிகவும் விரைவாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .

மேலும் முகநூல், ட்விட்டர் போன்ற நிறுவனங்களுக்கும் இதில் பொறுப்பு இருக்கின்றது. ஆபாச வீடியோக்கள் வெளியிடுதல் போன்ற குற்றங்கள் முகநூலில் நடக்கும் பொழுதே அதனை கண்டரியும் நுட்பத்திறன் இருப்பதால் அந்த நிறுவனங்களும் பொறுப்போடு நடந்து கொள்ளுதல் அவசியம். சமூக வலைத்தளங்களில் உள்ள ஆண்களும் பொறுப்போடு இயங்க வேண்டும்என்கிறார் கிருபா முனிசாமி.

சமூக செயற்பாட்டாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ, ஊடகங்களில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.இது அந்தப் பெண்ணிற்கு மன அளவில் பாதிப்பினை ஏற்படுத்தும.

மேலும் , பாலியல் வக்கிர மனநிலை உடைய ஆண்கள் இது போன்றவற்றை ஆபாச வீடியோவாகவாகத்தான் பார்ப்பார்கள். இந்த வீடியோக்களை பரப்புவதால் சமுகத்தில் எந்த நல்ல மாற்றங்களும் விளையப்போவதில்லை மாறாக குற்றங்கள்தான் அதிகரிக்கும். எனவே, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை, விபரங்களை வெளியிடுதல், வீடியோக்களை பரப்புதல் சமூக குற்றம் என்பதனை உணர்ந்து பொறுப்போடு இயங்க வேண்டும் என்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :