You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், VVPAT என்றால் என்ன? எப்படி வாக்களிக்க வேண்டும்? - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6 அன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கும். ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் மே 2ஆம் தேதி வெளியாகும்.
வாக்குப்பதிவு நடக்கும்போது தாங்கள் வாக்களித்தது சரியான வேட்பாளருக்கு சென்றுள்ளதா என்று வேட்பாளர்கள் அறிய உதவும் VVPAT ஒப்புகைச் சீட்டு வாக்காளருக்கு காட்டப்படும்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் VVPAT குறித்த சில முக்கியத் தகவல்களை உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி இயங்கும்?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்டுப்பாட்டு அலகு, வாக்களிக்கும் அலகு என்று இரு பகுதிகள் உள்ளன.
கட்டுப்பாட்டு அலகு வாக்குப்பதிவு மைய அலுவலர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்க பயன்படும். இதில் இருக்கும் பொத்தானை அழுத்திய பின்னர்தான், வாக்களிக்கும் அலகில் வாக்காளர் அவரது வாக்கை பதிவு செய்ய முடியும்.
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குகளை பதிவு செய்வதையும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நிகழ்வதையும் தவிர்க்கவே, இந்த ஏற்பாடு.
வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் பட்டியலில் இருக்கும் விவரங்கள் ஒன்றாக இருக்கின்றனவா என்று சரிபார்க்கப்பட்ட பின்னர், வாக்குச்சாவடி அலுவலர்களில் ஒருவர் உங்கள் வாக்காளர் சீட்டை பெற்றுக்கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பொத்தானை அழுத்துவார்.
இப்போது உங்கள் வாக்கைப் பதிவு செய்ய நீங்கள் தயாராகி விட்டீர்கள். பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் வாக்களிக்கும் அலகு வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு நீங்கள் செல்வீர்கள்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்களிக்கும் அலகு என்றால் என்ன?
தேர்தலில் போட்டியிடும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் பெயர்களும், அந்த பெயர்களுக்கு அருகில் அவர்களின் சின்னங்களும் வரிசையாக இந்த எந்திரத்தில் இருக்கும்.
வேட்பாளர்களின் பெயர் அந்த தொகுதியின் பெரும்பான்மையினர் பேசுகின்ற மொழிகளில் எழுதப்பட்டிருக்கும்.
எழுத்தறிவில்லாத வேட்பாளருக்கு உதவும் வகையில் வேட்பாளர் பெயருக்குப் பக்கத்தில் அவரது அல்லது அவரது கட்சியின் சின்னம் இடம் பெற்றிருக்கும்.
நீங்கள் வாக்குப் பதிவு செய்யத் தயாராக இருக்கும்போது, நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு அடுத்ததாக இருக்கும் நீல நிற பொத்தானை ஒரு முறை அழுத்தவும். இதைச் செய்தவுடன் வாக்கு பதிவாகிவிட்டது என்று பொருளாகாது.
'பீப்' என்ற சத்தம் கேட்டு, அந்த எந்திரத்தின் விளக்கு அணைந்தால்தான் நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் என்று பொருள். இப்போது நீங்கள் வாக்களித்துவிட்டீர்கள்.
அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலுள்ள வாக்குப் பதிவை முடிப்பதற்கான பொத்தானை அலுவலர்கள் அழுத்தினால்தான், மேலதிக வாக்குகள் பதிவாவது நிறுத்தப்படும்.
VVPAT என்றால் என்ன?
1.VVPAT எனப்படும் ஓட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் டிரேல் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.
2.வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.
3.மேலும் இந்த இயந்திரம் வாக்காளர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும்.
4.2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்த VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரியது. ஆனால் சில தொகுதிகளில் மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது.
5."VVPAT இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முறை துல்லியமாக செயல்பட உதவுகிறது. வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற VVPAT இயந்திரங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட வேண்டும்." என உச்சநீதிமன்றம் தெரிவித்தது
6.வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பல குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக இந்த VVPAT இயந்திரங்கள் பார்க்கப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர் VVPAT இயந்திரங்கள் அவசியமான ஒன்று என்று கூறுகின்றனர்.
7. இந்தமுறை நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.
8.2015ஆம் ஆண்டு முதல், இந்த VVPAT முறை சட்டமன்றத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இதுவரை இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.
9."இதுவரை ஒருமுறை கூட வாக்குப்பதிவு செய்யப்பட்ட சின்னத்துக்கு மாறான சின்னத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
10.இது முதன்முறையாக 1999இல் நடந்த கோவா சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :