சபரிமலை : சமத்துவம் கோரி 620 கி.மீ நீள பிரம்மாண்ட மனித சங்கிலி பேரணி நடத்திய லட்சக்கணக்கான கேரள பெண்கள்

கேரள மாநிலம் சபரிமலை ஆலயத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து மனித சங்கிலி பேரணி நடத்தினார்கள்.
அரசு ஊழியர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து 620 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மனித சங்கிலி பேரணி நடத்தியுள்ளனர் மாநிலத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இந்த பேரணி நடைபெற்றது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 லட்சம் பெண்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர் என்று கேரள மாநில அதிகாரிகள் பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷிவிடம் தெரிவித்தனர்.

சமத்துவமின்மையை எதிர்த்தும், சபரிமலை ஆலயத்திற்கு பெண்கள் செல்வதை தடுக்க நினைக்கும் வலதுசாரி குழுக்களின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மனித சங்கிலி பேரணி நட்த்தப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த மனித சங்கிலி பேரணியில் முப்பது லட்சம் பேர் கலந்துக் கொண்டிருக்கலாம் என்று பேரணி ஏற்பாட்டாளர்கள் கணிக்கின்றனர்.
மாநிலத்தின் வடக்கு முனையில் இருக்கும் காசர்கோடு பகுதியில் இருந்து தெற்குப் பகுதியில் அமைந்துள்ள திருவனந்தபுரம் வரை பிரம்மாண்டமான இந்த மனித சங்கிலி நீண்டிருந்தது.

மலைப்பகுதியில் அமைந்திருக்கும் சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு, 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்லக்கூடாது என்ற நடைமுறை தொடரவேண்டும் என்று இந்து மத கடும்போக்காளர்கள் வலியுறுத்துகின்றனர்.
சபரிமலை ஆலயத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு வந்தபிறகு, இந்த விவகாரம், இந்து கடும்போக்காளர்களும், பாலின சமத்துவம் கோரும் செயற்பாட்டாளர்களும் மோதிக் கொள்ளும் முக்கியமான தளமாகிவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













