தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன - பிபிசி ஆய்வு #BeyondFakeNews

பட மூலாதாரம், WILLIAM WEST/AFP/Getty Images
"அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது புதிய 2000 ரூபாய் நோட்டு, உலகின் சிறந்த நோட்டாக சிறிது நேரத்துக்கு முன்பாக யுனெஸ்கோவால் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளது."
இம்மாதிரியான செய்திகள் நமது மொபைல் ஃபோன்களின் மூலம் வாட்சப்பில் அதிகம் பகிரப்படுகிறது. இதில் பெரும்பாலான செய்திகள் போலியானவை. ஆனால் இதை பகிர்பவர்கள் தேசிய கட்டமைப்புக்கு தங்களால் ஆனவற்றை செய்வதாக நினைத்துக் கொண்டு பகிர்கிறார்கள்.
சாதரண குடிமக்களின் பார்வையில் போலி செய்திகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பிபிசியின் ஆய்வில் தெரியவந்த முதல் தகவல் இதுவே.
உணர்வுகள் தொடர்பாகவோ அல்லது தனிநபர்களின் அடையாளம் குறித்தோ வரும் செய்திகள் போலியா அல்லது உண்மையா என்று ஆராயாமல் பகிரப்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், Sean Gallup/Getty Images
டிவிட்டர் பதிவுகளையும் இந்த அய்வு அலசுகிறது; மேலும், மறையாக்கம் செய்யப்பட்ட செய்தி செயலியான வாட்சப்பிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கான தகவல்களை சேகரிப்பதற்காக பயனர்கள் தங்களின் அலைபேசிகளை அரிதான வகையில் பிபிசி குழுவினரிடம் தந்தனர்.
2018 நவம்பர் 12 திங்களன்று நடைபெறும் பிபிசியின் Beyond Fake News நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்தியா, கென்யா மற்றும் நைஜீரியாவில் இந்த ஆழமான, தரமான மற்றும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவது குறித்த புரிதலை பெற பல்வேறுபட்ட சமூக வலைதள கணக்குகள், பக்கங்கள் மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
இந்தியாவில் பல்வேறு சம்பவங்களில் வாட்சப்பில் பரப்பப்பட்ட போலிச் செய்திகளால் சுமார் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Jaap Arriens/NurPhoto via Getty Images
வன்முறைகளை தூண்டும் செய்திகளை மக்கள் பகிர்வதற்கு தயங்குகின்றனர். ஆனால் தேசியவாத செய்திகளை பகிர்வதை தங்கள் கடமையாக கருதுகின்றனர்.
இந்தியாவின் முன்னேற்றங்கள், இந்துக்களின் வலிமை மற்றும் இந்துக்களின் தொலைந்து போன பெருமை ஆகிய செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயமலே மக்கள் பகிருகின்றனர்.
தங்கள் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளோடு ஒத்துப்போகும் செய்திகளையே இந்திய மக்கள் பகிர்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே இம்மாதிரியான செய்திகள் உண்மைத் தன்மையை கண்டறியும் தன்மைக்கு எதிராக மாறிவிடுகிறது.

வாட்சப் குழுக்களில் தெரிந்தவர்கள் மட்டுமே இருப்பதனால் மக்கள் அதனை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில், ஒரு நபர் தானாக செய்தியை டைப் செய்து அனுப்பாமல் அது ஃபார்வேட் செய்யப்படும் செய்தியானால் அதில் 'Forwarded' என்று குறிப்பிடும் அம்சத்தை வாட்சப் அறிமுகப்படுத்தியது.
இது, அந்த செய்தி ஃபார்வேட் செய்யப்பட்ட ஒரு செய்தி என்ற தகவலை பயனாளர்களுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இருப்பினும் இந்த வசதி போலி செய்திகள் பரவுவதை தடுக்கவில்லை என பிபிசியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் தங்களுக்கு வரும் செய்திகளின் ஆதாரங்கள் குறித்து மக்கள் சோதிப்பதில்லை. மாறாக அதனை தங்களுக்கு அனுப்பும் நபர்களையே கருத்தில் கொள்கின்றனர். சமூகத்தில் மதிக்கப்படும் நபர்களால் வரும் செய்திகளை மக்கள் அதிகம் ஃபார்வேட் செய்கின்றனர்.

தாங்கள் மதிக்கப்படும் நபர்களிடம் வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை எவரும் ஆராய்வதில்லை. செய்திகளை பகிர்வதை தங்கள் கடமையாக கருதுகின்றனர்.
சமீப காலமாக போலி செய்திகளை பரப்புவதில் வெகுஜன ஊடகங்களின் செயல்பாடுகளும் கேள்விக்குள்ளாகிறது. ஊடகங்கள் பெரும்பாலும் அரசியல் மற்றும் வணிக நலன்களின் அழுத்தம் காரணமாக இயங்குகின்றன என்றும் அதன் காரணமாக எப்போதும் அவற்றை நம்பமுடியாது என்றும் மக்கள் நம்புவதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் போலி செய்திகளுக்கும், நரேந்திர மோதி ஆதரவாளர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இந்தியாவில் ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் செயல்பாடு சார்ந்த தரவுகளை பகுப்பாய்வு செய்து பார்த்ததில், இடதுசாரி கொள்கையுடையவர்களை விட, வலதுசாரி கொள்கையுடையவர்கள் மிகவும் ஒன்றிணைந்து செயல்படுவதை பிபிசி கண்டறிந்துள்ளது.

இந்து மதம், மோதி, தேசியவாதம் ஆகியவற்றிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் ஒன்றோடொன்று இணைந்து பாஜகவின் ஆதரவாளர்களாக செயல்படுவதால், ட்விட்டரில் பாஜகவிற்கு மிகப் பெரிய பலம் உள்ளது.
எனவே, இந்த வலுவான பிணைப்பின் காரணமாக இடதுசாரி கொள்கை கொண்டவர்களைவிட வலதுசாரி கொள்கையுடைவர்கள் பரப்பும் போலி செய்திகள் மேலும் திறம்பட பரவுகிறது.
போலி செய்திகளை பரப்புவதில் மற்றொரு அணியினராக விளங்கும் இடதுசாரி கொள்கையுடையவர்கள் மோதி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு போன்ற தங்களது வேறுபட்ட ஒற்றுமைகளை முதலாக கொண்டு செயல்படுகிறார்கள்.
இடதுசாரி கொள்கை உடையவர்களும் போலி செய்திகளை பரப்பினாலும், வலதுசாரிகளோடு ஒப்பிடுகையில் அவர்களது எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வலதுசாரி கொள்கை உடையவர்கள் பரப்பும் போலி செய்திகள் ஆளுங்கட்சியான நரேந்திர மோதி தலைமையிலான அரசின் செயல்பாட்டுக்கு ஆதரவளிப்பதாக உள்ளது. ஆனால், இடதுசாரிகள் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி உள்ளிட்டவர்களுடன் ஒன்றுபட்டு செயல்படவில்லை.
இந்தியாவை சேர்ந்த 16,000 பேரின் ட்விட்டர் கணக்கு செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
நீங்கள் பகிர்வது போலி செய்தியா? - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு
ட்விட்டரில் அடிக்கடி போலி செய்திகளை பரப்பும் சில கணக்குகளை பிரதமர் நரேந்திர மோதி பின்தொடர்வதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
நரேந்திர மோதி பின்தொடரும் 56.2 சதவீத கணக்குகள் ட்விட்டர் நிறுவனத்தால் சரிபார்க்கப்படாத கணக்குகளாக உள்ளன. அதுமட்டுமின்றி, நரேந்திர மோதி பின்தொடரும் 61 சதவீத சரிபார்க்கப்படாத கணக்குகள் பாஜகவை வெளிப்படையாக ஆதரிக்கும் வகையில் இருக்கின்றன. ஆனால், சாதாரண மக்களை பின்தொடர்வதன் மூலம் அவர்களுடன் இணைவதற்கு பிரதமர் மோதி முயல்வதாக பாஜக கூறுகிறது.

ஆனால், சாதாரண மக்கள் என்று குறிப்பிடப்படும் அந்த ட்விட்டர் கணக்குகளை குறைந்தது சராசரியாக 25,000 பேர் பின்தொடர்வதுடன், 48,000க்கும் மேற்பட்ட பதிவுகளையும் இட்டுள்ளது பிபிசியின் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 11 சதவீத சரிபார்க்கப்படாத கணக்குகளையும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 37.7 சதவீத சரிபார்க்கப்படாத கணக்குகளையும் பின்தொடர்வதும் தெரியவந்துள்ளது.
போலி செய்தியும் ஆப்பிள் பழமும் - ஒரு வித்தியாசமான ஒப்பீடு
"போலி செய்திகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து பெரிதும் கவலைப்படுவதைப்போன்று காட்டிக்கொள்ளும் சாதாரண மக்கள் ஏன் போலி செய்திகளை பகிர்கிறார்கள் என்ற முக்கியமான கேள்வி இந்த ஆய்வின் மூலம் எழுகிறது" என்று பிபிசி உலக சேவையின் பார்வையாளர்கள் ஆராய்ச்சி பிரிவின் தலைவரான சாந்தனு சக்ரவர்த்தி கூறுகிறார்.
போலி செய்திகளின் பரவலை தடுக்கும் உறுதிப்பாட்டில் தீர்க்கமான அடியை பிபிசியின் Beyond Fake News செயற்திட்டம் எடுத்துவைப்பதற்கு தேவையான விலைமதிப்பற்ற தகவல்களை இந்த ஆய்வு முடிவுகள் வழங்குவதாக பிபிசி உலக சேவையின் இயக்குநரான ஜேமி ஆக்கஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், ULLSTEIN BILD DTL
"மேற்கத்திய நாடுகளின் போலி செய்தி விவகாரங்களில் பெரும்பாலான ஊடக கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தும் சூழ்நிலையில், உலகின் மற்ற பகுதிகளில் உருவாகி வரும் முக்கியமான பிரச்சனைகள் குறித்த வலுவான ஆதாரங்களை இந்த ஆய்வு வழங்குகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
இன்று (திங்கட்கிழமை) இந்தியாவின் ஏழு நகரங்களில் போலி செய்திக்கெதிராக பிபிசி நடத்தும் நிகழ்வுகளில் அரசியவாதிகள், நடிகர்கள், வல்லுநர்கள், மாணவர்கள், பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.
போலிச் செய்திகள்: நாம் ஏன் கவலை அடைய வேண்டும்? - விளக்கும் நாடகம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















