‘காதலனை ஏவி கணவன் கொலை’ - சமூக ஊடகம் என்ன நினைக்கிறது?

திருமணமான ஒரே மாதத்தில் காதலனை ஏவி கணவனை வெட்ட உதவிய பெண் என்ற செய்தி நேற்றைய செய்திதாள்களில் பிரதான இடத்தை பிடித்திருந்தது.

இதனிடையே அந்நபர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இத்தகைய சம்பவங்களுக்கு காரணம், விருப்பம் அறிந்து திருமணம் செய்யாத பெற்றோரா? முடிவெடுக்கத் தெரியாத பெண்களா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

தாமோதரன் ஃபேஸ்புக்கில், " பொண்ணு அவங்க பெற்றோர் ரெண்டு பேருமே தான் காரணம்" என்று தம் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

"திருமணத்திற்கு முன்னால் மணமகன் நேரடியாகவோ அல்லது டெலிபோன் மூலமாகவோ எந்த வித நிர்பந்தமும் இல்லாமல் மணப்பெண்ணின் விருப்பத்தை கேட்டு விட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்." என்பது அனீஸ் கான் புளியங்குடியின் கருத்து.

"பெற்றோர்களுக்கு கௌரவ பிரச்சினை , பிள்ளைகளுக்கு காதல் பிரச்சினை , நடுவில் சிக்குவது அப்பாவி ஆண் மகன் , ஆக தண்டனை இருவருக்கும் கொடுத்தால் ஆண் மகன் நிம்மதியாக வாழ்வான்." என்கிறார் ராஜாகனி.

சக்திவேல்: "பெற்றோர்கள் தான் இதற்கு முதலும் முற்றிலும் காரணம்.

காதல் திருமணத்தை ஒப்பு கொள்ள முடியாது எனில் முன்பே அதனை மகளிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

அதனை செய்யாமல் அவர்கள் விருப்பம் போல் வளர்த்து பிறகு திடீரென்று கட்டுப்பாடுகள் விதித்தால் இவ்வாறு தான் நடக்கும்."

"சுயநலமே உருவான பெற்றோரும், மகளும்தான் காரணம். கொலை செய்பவன் நிச்சயமாக நல்லவனாக இருக்க மாட்டான். போதிய விழிப்புணர்வு இல்லாத பெண்கள். எங்கே போய்க்கொண்டிருக்கிறது நம் சமூகம்? ஒரு பாவமும் செய்யாத மாப்பிள்ளை நிலைதான் பாவம்." என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.

சங்கீதா ஸ்ரீ சொல்கிறார், "இதற்க்கு நீண்ட விவாதம் தேவையல்ல.சரியான காரணம், குடும்ப கெளரவம் நற்சிந்தனை கட்டுப்பாடான வாழ்வு எதிர்காலம் குறித்த நினைவு சுற்றி இருக்கும் சமுதாயம் குறித்த அச்சம் இவை எதைப்பற்றியும் கவலை இன்றி தன் மனம் போன போக்கில் வாழ நினைக்கும் நெறிகெட்ட மனிதர்களின் 'கொழுப்பு' என்று கூறினால் அது மிகையல்ல"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :