11 வயது சிறுமி பாலியல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் தாக்குதல்

சென்னையில் 11 வயதுச் சிறுமி ஒருவரை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மஹிளா நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 31ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 3.30 மணியளவில் நீதிமன்ற நடைமுறைகள் நிறைவடைந்து அவர்கள் வெளியில் அழைத்துவரப்பட்டனர்.

படிகள் மூலம் மூன்றாவது தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு அழைத்துவரம்போது அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலரும் இந்த 17 பேரையும் கடுமையாகத் தாக்கினர். இதில் நான்கு பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து கீழே இருந்த காவலர்கள் மேலே ஓடிவந்து 17 பேரையும் மீட்டு வேறொரு அறையில் அடைத்தனர். இப்போது பாதுகாப்பிற்காக அங்கே கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகப் போவதில்லையென தெரிவித்தார். இலவச சட்ட உதவி மையம் மூலமாகவும் யாரும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லையென்றும் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு இதனை எழுத்து மூலமாகத் தெரிவித்து ஆதரவு கோரப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :