மத்தியப்பிரதேசத்தில் அரசியல் செல்வாக்கு மிகுந்த சாமியார் தற்கொலை

அரசியல் செல்வாக்கு மிகுந்தஆன்மிக குரு பையூ மகாராஜ் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த தகவலை இந்தூர் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

பையூ மகாராஜ் அல்லது குருதேவ் என்று பரவலாக அறியப்படும் இவர், மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

"மக்களுக்கு துன்பம் நேரும் போதெல்லாம் பையூ மகாராஜ் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவரை சார்ந்து பலர் வாழ்ந்து வரும் நிலையில், இதுபோன்றதொரு முடிவை அவர் தவிர்த்திருக்கலாம்," என்று காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

மாடலிங்கிலிருந்து சாமியாராக

1968ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி பிறந்த பையூ மகாராஜின் இயற்பெயர் உதேசின்ஹா தேஷ்முக் என்பதாகும். மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியை பூர்வீகமாக கொண்ட பையூவின் குடும்பத்தினர் பிறகு மத்தியப்பிரதேசத்தின் இந்தூருக்கு இடம்பெயர்ந்தனர். பையூ சிறிது காலம் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு மாடலாக செயல்பட்டார். அதன் பிறகு ஆன்மீகத்துக்குள் நுழைந்தார்.

அவர் இந்தூரில் 'சத்குரு டட்டா ரிலீஜியஸ் டிரஸ்ட்' ஆரம்பித்தார். தனது 37 வயதிலேயே ஆன்மீகத்துக்குள் நுழைந்த பையூ, இளம் சாமியாராக அறியப்பட்டார்.

இவரது மனைவி மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஆயுஷி ஷர்மா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

லோக்பால் அமைப்பை வலியுறுத்தி சமூக சேவகர் அன்னா ஹசாரே, கடந்த 2008ஆம் ஆண்டு நடத்திய உண்ணாவிரதத்தை முடித்துவைப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார். கடந்த 2011ஆம் ஆண்டு விரதத்தில் ஈடுபட்ட நரேந்திர மோதி இவர் அளித்த பழச்சாறை அருந்தித்தான் தனது விரதத்தை முடித்துக்கொண்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல் பதவி விலக வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டது. அப்போது, பிரதமர் மோதியை சந்தித்த பிறகு இந்தூருக்கு விரைந்த ஆனந்திபென், பையூ மகாராஜை சந்தித்தார். இதுகுறித்து அப்போது பெரியளவில் பேசப்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலத்துக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்ட இவர், உத்தவ் தாக்ரே மற்றும் பன்கஜா முண்டே ஆகியோருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :