நாளிதழ்களில் இன்று: ''பா.ஜ.கவை வீழ்த்த இதுவே ஒரே வழி''

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி

காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் இருந்தும் கட்சி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர். ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் காங்கிரஸ் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த ஒருமித்த கருத்து கொண்ட எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி போட்டியிடுவது என காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

இந்திய அளவில் உயர் கல்விக்கான சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் கூறியுள்ளார் என்றும், சுதந்திரத்திற்கு முன்பு நம் நாட்டில் 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகள் இருந்தது. ஆனால், தற்போது 800 பல்கலைக்கழகங்களும், 40 ஆயிரம் கல்லூரிகளும் உள்ளன என்றும் சுனில் பாலிவால் கூறியுள்ளதாக தினமணி செய்தி கூறுகிறது.

தி இந்து தமிழ்

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு-காஷ்மீரை பாதுகாப்பதற்காக, எந்த நாட்டின் எல்லையைத் தாண்டிச் சென்று தாக்கவும் இந்திய ராணுவம் தயங்காது என்று பாகிஸ்தானுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் என தி இந்து(தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர்

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தை சேர்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் விதத்தில் சென்னை, கோவை, திருச்சி, ஒசூர், சேலம் நகரங்களுக்கு 'ஜாக்பாட்' பரிசாக 'பாதுகாப்பு தொழில் பெருவழித்தடம்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்புத் துறைக்கு தேவையான ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் தொழில்கள் நிறைந்த வட்டாரமாக மாறவிருக்கும் இந்தப் பகுதிகளில் தொழில் துவங்க சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: