குப்பைக்கு பதிலாய் கோலங்கள்: வண்ணமயமாகும் மாநகரம்
இந்திய அளவில் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் தரவரிசை பட்டியலில் கடந்த ஆண்டு ஆறாவது இடம் பிடித்த திருச்சி மாநகராட்சியை இந்த ஆண்டு முதலிடத்துக்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் ஒரு வண்ணமயமான முயற்சி கணிசமாகப் பலனளித்துள்ளது.

தற்போது திருச்சியை , "குப்பை தொட்டி இல்லா மாநகராட்சி" ஆக்கும் முயற்சியாக மாநகராட்சியில்குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்த 1,400க்கும் மேற்பட்ட இடங்களுள் 700க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றபட்டுள்ளன.

அதற்குப் பதிலாக மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் வீடுகள் தோறும் குப்பைகளை வாகனங்கள் மூலம் தினமும் சேகரிப்பது, வாரம் ஒருமுறை மக்காத குப்பைகளை தனியாக வாங்குவது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்ட இடங்களில், மீண்டும் பொதுமக்கள், குப்பையை கொட்டாமல் இருக்க, அழகழகாக பல வண்ணக் கோலங்கள் மாநகராட்சியால் வரையப்பட்டுள்ளன.

கோலம் போட்ட இடங்களில், குப்பையை கொட்டி அசிங்கப்படுத்த விரும்பாத மக்கள், குப்பை கொட்டுவதை தவிர்த்து வருகின்றனர்.

இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து நகரில் உள்ள அனைத்து இடங்களிலும் வண்ணக் கோலமிடும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.

சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகரின் 18 இடங்களில் செயல்பட்டு வரும் நுண்ணுர செயலாக்க மையங்களில் மறு சுழற்சி செய்யப்பட்டு இயற்கை உரங்களாக மாற்றப்பட்டு விவசாயிகள் மற்றும் தேவையுள்ளோருக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












