மும்பை ரயில் நிலையங்கள் மரண பொறிகளாக மாறியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜான்ஹவீ மூலி / ரவிந்தரா மஞ்சரேக்கர்
- பதவி, பிபிசி மராத்தி
கடந்த பத்து ஆண்டுகளில், மும்பையின் பாரல் பகுதியில் கார்ப்பரேட் அலுவலகங்களின் எண்ணிக்கை பெரியளவில் அதிகரித்தன.
அதன் விளைவாக, அந்த பகுதியிலிருந்த எலிபின்ஸ்டோன் சாலை மற்றும் பாரல் ரயில்வே நிலையங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தன.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும் கூட இந்த ரயில் நிலையங்களின் கட்டமைப்புகள் கிட்டத்தட்ட அப்படியேதான் இருந்தன.
தொடர்ந்து பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டப்பிறகும் ரயில் நிலையங்களின் கட்டமைப்பு மேம்படுத்துவதில் எவ்விதமான முன்னேற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே பயணிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும், கடினமான ரயில் பயணத்தையடுத்து பயணிகள் தங்கள் அலுவலகங்களை சென்றடைந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கயிற்றின் மேல் நடப்பது போன்ற தினசரி பயணம்
முன்னர், மத்திய மும்பையின் தெற்குப்பகுதியில் இருக்கும் இந்த பகுதி நகரின் ஜவுளி ஆலைகளின் மையமாக இருந்தது.
ஆனால், ஆலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்ட பிறகு, இந்த தொழில் தெற்கு மும்பைக்கு மாற்றலாகியது.
ஆலைகள் இருந்த பகுதிகளில் வானுயர கட்டடங்கள் எழுப்பப்பட்டன. நாளுக்குநாள் ரயிலிலிருந்து இறங்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இதன் காரணமாக, எலிபின்ஸ்டன் மற்றும் பாரல் ரயில் நிலையங்கள் மீது பெரும் சுமை விழுந்தது.
பாரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட ஒரு புதிய நடைபாதையை தவிர வேறெதுவும் மேம்படுத்தப்படவில்லை. இந்த ரயில் நிலையங்களிலிருந்து வெளியேறும் பாதை என்பது இன்னும் குறுகியாதாக இருக்கிறது.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
பரபரப்பான முக்கிய நேரங்களில் ரயில் நிலையத்தில் உள்ள இந்த நடைபாதை பாலத்தை கடப்பது என்பது கடும் சோதனையாக இருக்கும். பாலத்தின் ஏறும் மற்றும் இறங்கும் வழிகள் என இரு பக்கங்களுமே மரண பொறிகளாக மாறிவிட்டன.
''நெரிசல் விபத்து நடப்பதற்கு ஒருநாள் முன்புதான், இதே விஷயத்தை நாங்கள் விவாதித்து கொண்டிருந்தோம்.'' என்கிறார் சமீர் கார்வி. தினமும் இந்த ரயில் நிலையத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் சமீர்.
''விபத்தை வரவேற்பது போன்ற நிலைதான் இது. ஒரு பக்கம் அலுவலகங்கள் மறுபக்கம் மருத்துவமனை இருப்பதால் பாரல் ரயில் நிலையம் எப்போதுமே நெரிசலாக உள்ளது.''
சமீர் குறிப்புகளை எடுத்து கொண்டிருக்க, பயணிகள் கூட்டத்தை முறைப்படுத்த இங்கு யாருமே இல்லை.

பட மூலாதாரம், Getty Images
பெயர் மாற்றம்
எலிபின்ஸ்டன் சாலை ரயில் நிலையம் 1867ல் திறக்கப்பட்டது. 1853 முதல் 1860 வரை மும்பையின் ஆளுநராக இருந்த லார்ட் எலிபின்ஸ்டனின் நினைவாக இந்த ரயில் நிலையத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், எலிபின்ஸ்டன் என்ற ரயில் நிலையத்தை பிரபாதேவி என்று மாற்றுவதற்கு மகாராஷ்டிர அரசாங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ரயில்வேவும் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், பெயர் மாற்றம் செய்யும் தொடக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில்வே பயணிகள் சங்கத்தை சேர்ந்த சுபாஷ் குப்தா, எலிபின்ஸ்டன் சாலை ரயில் நிலையம் மிகவும் ஓர் சிறிய ரயில் நிலையம் ஆனால் மிகவும் முக்கியமானது.
மும்பையின் மேற்கு மற்றும் மத்திய ரயில் நிலையங்களை இணைக்கும் இரு புள்ளிகளிலே இதுவும் ஒன்று. மற்றொன்று தாதர் ரயில் நிலையம் அது சிறந்த கட்டமைப்பு கொண்டுள்ளது.
ஆனால், எலிபின்ஸ்டன் சாலை ரயில் நிலையம் மிகவும் சிறியது என்பதால், யாரும் அதற்கு பெரிய கவனத்தை செலுத்தவில்லை என்கிறார் குப்தா.
''நடைமேடை பாலம் மற்றும் பாலத்திற்கு செல்லும் படிகட்டுகள் மிகவும் கூட்ட நெரிசலாக இருக்கிறது.எப்போது வேண்டுமானலும் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் பலியாகலாம். இதை பலமுறை ரயில்வேயின் பார்வைக்கு கொண்டு சென்றோம். ஆனால், அதை ரயில்வே பொருட்படுத்தவேயில்லை.''
''இந்த சூழல் உடனடியாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிச்சயமாக மாறப்போவதில்லை. இந்நிலை மக்கள் உயிரோடு விளையாடுவதற்கு சமம்.'' என்கிறார் குப்தா.

பட மூலாதாரம், Getty Images
பழைய பாலங்களின் நிலை என்ன?
ரயில் நிலையங்களிலுள்ள பாலங்கள் மற்றும் படிகட்டுகள் விரிவாக்கப்பட வேண்டும் மற்றும் இதன் வழியே நடக்கும் பயணிகள் சிரமமின்றி நடக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும் என்கிறார் குப்தா.
ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மூன்று அடி அளவு கொண்ட பாலங்கள் தேவை.
பல ரயில்நிலையங்களில் இரண்டு பாலங்கள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான மக்கள் பிரதான சாலையையோட்டி அமைந்துள்ள பாலத்திலே நடந்து செல்கிறார்கள்.
ரயில் நிலையத்தைவிட்டு குறைந்த நேரத்தில் பயணிகள் எவ்வாறு உடனடியாக வெளியேறுவது என்பது குறித்து ரயில்வே கருத்தில்கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
'நிதர்சனத்தை புரிந்துகொள்ள வேண்டும்'
20 ஆண்டுகளுக்குமுன், பாரல்-எலிபின்ஸ்டன் சாலை ஒரு முக்கிய குடியிருப்பு பகுதியாக இருந்தது. ஆனால், தற்போது வீடுகளை பெரும் அலுவலகங்கள் ஆக்கிரமித்துவிட்டன. கெஈஎம் மற்றும் டாடா போன்ற பெரிய மருத்துவமனைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று வலியுறுத்துகிறார் குப்தா.
''மும்பையில் உள்ள ஒவ்வொரு ரயில்நிலையம் குறித்த அடிப்படை நிதர்சனத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப பாலங்கள், படிகட்டுகள் மற்றும் தானியங்கி படிகட்டுகளை கட்ட வேண்டும்'' என்கிறார் குப்தா.
பிற செய்திகள்:
- ''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை
- இலங்கை: ரோஹிஞ்சாக்கள் மீதான தாக்குதல் குறித்த வழக்கில் மேலும் சிலர் கைது
- ஒன்றாய் பிறந்து, ஒன்றாய் பறந்து, ஒன்றாய் ஓய்வு பெற்ற இரட்டையர் விமானிகள்
- மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலி; 39 பேர் காயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












