10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கில் சிறுமியின் இன்னொரு மாமா கைது
கடந்த மாதம் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பாலியில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 10 வயது சிறுமியின் இன்னொரு மாமா, அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த சிறுமியை பாலியல் வல்லுறவக்குட்படுத்தியதாக, முன்னதாக கைது செய்யப்பட்டிருந்த மாமாவின் இளைய சகோதரர் இவர் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த 10 வயது சிறுமி பெற்றெடுத்த குழந்தையின் டிஎன்ஏ மாதிரிகளில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனைகள், முதல் குற்றவாளியின் டிஎன்ஏ மாதிரிகளோடு பொருந்தாத நிலையில், அடுத்த சந்தேக நபரை போலீஸார் தேட தொடங்கினர்.
முதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் போலீஸ் காவலில் இருப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் குற்றச்சாட்டுகளில் இருந்து இன்னும் முற்றிலும் விடுபடவில்லை. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது.
சிறையில் இருக்கின்ற அவர், இதுவரை எதைப் பற்றியும் தகவல் தெரிவிக்கவில்லை.
போலீஸாரோடும், உளவியல் நிபுணர்களோடும் நடத்திய உரையாடலின்போது, இந்த சிறுமி தன்னுடைய இன்னொரு மாமாவின் பெயரையும் குறிப்பிட்ட பின்னர், செவ்வாய்க்கிழைமை மாலை சமீபத்திய கைது நிகழ்ந்துள்ளது.
"தன்னுடைய 38 வயது இன்னொரு மாமாவும் தன்னை துஷ்பிரயோகம் செய்திருப்பதாக இந்த சிறுமி தெரிவித்திருக்கிறார்" என்று சண்டிகர் நகரின் மூத்த போலீஸ் அதிகாரி நீலம்பாரி விஜய் பிபிசி பஞ்சாபி சேவையிடம் தெரிவித்திருக்கிறார். அவருடைய டிஎன்ஏ மாதிரிகளையும் சோதனை செய்ய போலீஸார் அனுமதி பெற்றிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த 10 வயது சிறுமியின் கவலையளிக்கும் இந்த வழக்கு இந்தியாவிலும், உலக அளவிலும் பல வாரங்களாக தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது என்று பிபிசி செய்தியாளர் கீதா பாண்டோ தெரிவிக்கிறார்.
இந்த 10 வயது சிறுமி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததை அடுத்து, பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருந்தது ஜூலை மாதத்தின் நடுவில் கண்டறியப்பட்டது.
தான் கர்ப்பம் அடைந்திருப்பது பற்றி அறிந்திராத அந்த சிறுமியிடம், அவருடைய வயிற்றில் கல் ஒன்று இருப்பதால் இந்த வீக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கருவைக் கலைப்பது இந்த சிறுமிக்கு மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர் அமர்வு ஒன்று பரிந்துரைத்ததை தொடர்ந்து, அவர் கருத்தரித்து அதிக மாதங்கள் ஆகிவிட்டதை அடிப்படையாக வைத்து, கருக்கலைப்பு செய்ய கோரியதை சண்டிகரிலுள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒன்று மறுத்துவிட்டது. பின்னர், இதே காரணத்தை வைத்து உச்ச நீதிமன்றமும் கருவை கலைக்க அனுமதி மறுத்துவிட்டது.
பிறக்கும் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என்று இந்த சிறுமியின் பெற்றோர் கூறிவிட்டதால், குழந்தைகள் நலவாழ்வு இல்லத்தில் இந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை உள்ளது. விரைவில் அது தத்து கொடுக்கப்படும்.
கடந்த 7 மாதங்களாக கைது செய்யப்பட்டுள்ள 40 வயதுகளில் இருக்கின்ற மாமாதான் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக, இந்த சிறுமி போலீஸிடமும், குழந்தைகள் நல ஆவலர்களிடமும் முதலில் தெரிவித்திருந்தார்.
காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த அந்த சிறுமி, மாமாவின் பெயரை தெளிவாக தெரிவித்து, அவரை துஷ்பிரயோகம் செய்த உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

பட மூலாதாரம், iStock
முதலில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கவில்லை என்று இந்த சிறுமியின் தந்தை முன்னதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பிறந்த குழந்தையின் டிஎன்ஏயில் நடத்தப்பட்ட சோதனைகள் குற்றவாளியின் டிஎன்ஏ மாரிதிகளோடு பொருந்தாமல் போய்விட்டதால், மேலும் சந்தேக நபர்களை போலீஸார் தேட தொடங்கினர்.
டிஎன்ஏ அறிக்கையில் தவறுகள் இல்லை என்பதை உறுதி செய்ய, மீண்டும் சோதனை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
தாய் உயிர் ஆபத்தில் இருப்பதாக மருத்துவர்கள் சான்றளித்தால் தவிர, 20 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பு செய்ய இந்திய சட்டம் அனுமதிப்பதில்லை.
ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், 20 வாரங்களுக்கு பிறகு தங்களுடைய கர்ப்பத்தை கலைத்துவிட பல புகார்களை நீதிமன்றங்கள் பெற்று வருகின்றன. இதில் பல புகார்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகளாவர்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், 32 வாரங்கள் கர்ப்பமாக இருந்த 13 வயதான சிறுமிக்கு, கருவை கலைத்துவிட நீதிமன்றம் அனுமதித்த பின்னர், அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு நாட்களுக்கு பின்னர், அக்குழந்தை இறந்துவிட்டது.

பட மூலாதாரம், AFP
கடந்த மே மாதத்தில், இதே மாதிரியான வழக்கு ஒன்று இந்தியாவின் வடக்கில் ஹரியானா மாநிலத்தில் தொடுக்கப்பட்டது.
தன்னுடைய வளர்ப்பு தந்தையால் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறலுக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், கருக்கலைப்பு செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அவர் சுமார் 20 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
சட்டப்பூர்வ காரணங்களுக்காக இந்த சிறுமியர் யாருடைய பெயரும் வெளியிடப்படுவதில்லை.
இந்தியாவில் துஷ்பிரயோகங்கள்
- ஒவ்வொரு 155 நிமிடங்களுக்கு ஒருமுறை, 16 வயதுக்கு கீழுள்ள சிறுமி ஒருவரும், ஒவ்வொரு 13 மணிநேரங்களுக்கு 10 வயதுக்கு கீழுள்ள சிறுமி ஒருவரும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர்.
- 2015 ஆம் ஆண்டு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
- இந்தியாவில் வாழும் 240 மில்லியன் பெண்களுக்கு 18 வயது ஆவதற்கு முன்னரே திருமணமாகிவிடுகிறது.
- அரசால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கலந்து கொண்ட 53.22 சதவீத குழந்தைகள், சில வடிவ பாலியல் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
- குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்வோரில் 50 சதவீதத்தினர் அந்தக் குழந்தைக்கு தெரிந்தவர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் பராமரிப்போராக உள்ளனர்.
பிற செய்திகள்
- 18 எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்: இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை
- அக்டோபர் 25-ல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம்
- ''ரோஹிஞ்சா அகதிகளை திரும்ப அனுப்பும் இந்திய முயற்சி மனித உரிமை மீறல்''
- செக்ஸ் பொம்மை வாடகை சேவையை சீன நிறுவனம் நிறுத்தியது ஏன்?
- 'ப்ளூ வேல்' விளையாட்டு தற்கொலைக்கு தூண்டுவது ஏன்?
- மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி
- இணையத்தில் தீவிரவாத கருத்துகளுக்கு எதிரான முயற்சிகளை கூகுள் ஆதரிக்கும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












