இரவு உணவு வழங்க தாமதமானதால் மனைவி கொலை

டில்லி அருகே, இரவு உணவை தாமதமாக வழங்கிய தனது மனைவியை கொன்ற குற்றத்திற்காக 60 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பதிவாகும் குற்றங்களில், குடும்ப வன்முறைச் சம்பவங்களே அதிகம்
படக்குறிப்பு, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பதிவாகும் குற்றங்களில், குடும்ப வன்முறைச் சம்பவங்களே அதிகம்

சனிக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த அஷோக் குமார் தனது மனைவியிடம் சண்டை போட்டதாக, தலைநகர் டெல்லிக்கு அருகே இருக்கும் காஜியாபாதில் மூத்த காவல்துறை அதிகாரி ரூபேஷ் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

55 வயதான சுனைனா, தலையில் குண்டடிபட்ட காயத்தோடு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டார்.

தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அஷோக் குமார், தனது செயலுக்காக இப்போது வருத்தப்படுகிறார்.

"அஷோக் குமார் தினமும் மது அருந்துவார். சனிக்கிழமையன்று, குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவருக்கும், மனைவிக்கும் வாக்குவாதம் எழுந்தது. சுனைனா, தனது கணவரின் குடிபழக்கத்தால் மனவருத்தம் அடைந்திருந்தார். அது பற்றி பேச சுனைனா விரும்பினார், ஆனால், அஷோக்கோ உடனே உணவு வேண்டும் என்று கேட்டார்," என்று ரூபேஷ் சிங் கூறுகிறார்.

"உணவு பரிமாற தாமதமானதால், எரிச்சலில் மனைவியை சுட்டுவிட்டார்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பதிவாகும் குற்றங்களில், குடும்ப வன்முறைச் சம்பவங்களே அதிகமாக இருக்கிறது.

2015இல், வரதட்சணை மரணங்கள் தொடர்பான சட்ட வரையறையின்கீழ், நான்கு நிமிடங்களுக்கு ஒரு பெண், குடும்ப வன்முறையை அதாவது வரதட்சணை தொடர்பான குற்றங்களை, கணவன் அல்லது அவரது உறவினர்களின் மூலம் அனுபவிப்பதாக பதிவாகியிருந்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :