You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் தமிழக விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு
டெல்லி ஜந்தர் மந்தரில் 21 நாட்களாக நீடித்து வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவர்களுடன் பஞ்சாப் மாநில விவசாயிகளும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
தமிழகத்தை கடும் வறட்சி பாதித்துள்ள நிலையில், வறட்சி நிவாரணம், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், நேற்று தலைமை பாதி மொட்டை அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, இன்று ஒரு பக்க மீசையை மட்டும் மழித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மண்டை ஓடுகள், அரை நிர்வாணப் போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம், வாயில் கறுப்புத்துணி கட்டி, பாம்பு மற்றும் எலி கறியை உண்பது போன்று ஒவ்வொரு நாளும் நூதன முறையில் இந்த போராட்டம் தொடர்ந்துவருகிறது.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு தொடக்கத்திலிருந்து இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வரும் நிலையில், டெல்லியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் பலர் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் போராட்ட ஒருங்கிணைப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, டெல்லியைச் சேர்ந்த தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள், டெல்லியின் முக்கிய பகுதியாக கருதப்படும் கனாட் ப்ளேஸில் இருந்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜந்தர் மந்தர் பகுதி வரை பேரணி நடத்தினர்.
ராகுல் காந்தி, ஸ்டாலின், வைகோ, டி.ராஜா, கனிமொழி, சீமான், உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் விஷால், பிரகாஷ்ராஜ் போன்ற திரையுலக பிரபலங்கள் விவாசாயிகளை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து விவசாயிகள் தங்கள் கோரிக்களை தெரிவித்தனர்; இருப்பினும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு உத்தர பிரதேச மாநில விவசாயிகள் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இன்று பஞ்சாப் மாநில விவசாயிகள் தமிழக விவசாயிகளுடன் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, மேலும் பல லட்சம் விவசாயிகளைத் திரட்டி வரத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியும் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்