You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முஸ்லிம் நாடான இந்தோனீசியாவின் கரன்சியில் விநாயகர் படம்: உண்மை என்ன?
- எழுதியவர், அனந்த் பிரகாஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்து கடவுள்களான விநாயகர்-லட்சுமியின் படங்களை இந்திய நாணயத்தில் அச்சிடுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விடுத்துள்ள வேண்டுகோள், பாஜக மற்றும் காங்கிரஸை திகைக்க வைத்துள்ளது.
இந்த வேண்டுகோளை விடுத்த அரவிந்த் கேஜ்ரிவால், உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவால் இதைச் செய்ய முடியும் என்றால், இந்தியா ஏன் செய்யக்கூடாது என்று வினவியுள்ளார்.
இந்தோனீசியாவின் மக்கள் தொகையில் 85 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள், இரண்டு சதவிகிதம் பேர் மட்டுமே இந்துக்கள் என்று இருக்கும்போதும், பிள்ளையாரின் படம் அந்த நாட்டின் நாணயத்தில் உள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.
புதன்கிழமை காலை 11 மணியளவில் அரவிந்த் கேஜ்ரிவால் இந்தப் பிரச்னையை எழுப்பினார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் டிவி சேனல்கள் முதல் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் வரை பரவியது.
கேஜ்ரிவாலின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, 'இந்தோனீசியாவின் நாணயம்' என்ற முக்கிய வார்த்தைக்கான தேடலில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூகுள் ட்ரெண்ட்ஸ் கூறுகிறது.
இந்தோனேஷிய நாணயத்தில் இந்து கடவுளான விநாயகரின் படம் ஏன் உள்ளது என்பதை இணைய பயனர்கள் அறிய விரும்புகிறார்கள்.
இந்தோனீசிய ரூபாய் நோட்டில் இந்து தெய்வத்தின் படம் ஏன்?
இந்தோனீசியா 1998 ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் கீழ் இந்த நோட்டை வெளியிட்டதாக பிபிசி தனது ஆய்வில் கண்டறிந்தது. இப்போது இந்த நோட்டு புழக்கத்தில் இல்லை.
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த ரூபாய் நோட்டின் படத்தை கவனமாகப் பார்த்தால், ஒருபுறம் இந்து தெய்வமான பிள்ளையார் மற்றும் ஒரு நபரின் படம் காணப்படுகிறது.
சில குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும் படம் மறுபுறம் காணப்படுகிறது.
இந்தோனீசியாவில் விநாயகரின் படம் இருப்பது இங்குள்ள கலாசாரத்தின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது என்று பிபிசி இந்தோனேஷியா சேவையுடன் தொடர்புடைய மூத்த பத்திரிகையாளர் அஸ்துதெஸ்த்ரா அஜெங்க்ராஸ்த்ரி கூறுகிறார்.
"1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த கரன்சி நோட்டின் கருப்பொருள் கல்வி. இந்தோனேஷியாவில் கலை, ஞானம் மற்றும் கல்வியின் கடவுளாக விநாயகர் கருதப்படுகிறார். இங்குள்ள பல கல்வி நிறுவனங்களிலும் விநாயகரின் உருவம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நோட்டில் இந்தோனீசியாவின் தேசிய வீரரான ' கிஹசார் தேவந்தரா' வின் படமும் உள்ளது. இந்த நாடு டென்மார்க்கின் காலனியாக இருந்த காலத்தில் இந்தோனேஷியர்களின் கல்வி உரிமைக்காக அவர் போராடினார். அந்த நேரத்தில் வசதியான மற்றும் டச்சு சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமே பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்."
இந்தோனீசியாவின் பாலி தீவில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலின் படம் கொண்ட கரன்சி நோட்டு இந்தோனீசியாவில் இப்போதும் புழக்கத்தில் உள்ளது.
இதை உறுதிசெய்த அஸ்துத்தெஸ்த்ரா, "ஐம்பதாயிரம் ரூபாய் நோட்டில் பாலியில் உள்ள ஒரு கோவிலின் படம் உள்ளது. பாலியில் இந்து சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர்," என்று குறிப்பிட்டார்.
ஆனால் மற்ற கரன்சி நோட்டுகளில் பல்வேறு மதங்கள் மற்றும் சமூகங்களின் சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், நோட்டுகளில் இந்து மதத்தின் சின்னங்கள் மட்டுமே இருப்பதாக கூற முடியாது.
இந்தோனீசியாவில் விநாயகர் ஏன் இவ்வளவு பிரபலம்?
இந்தோனீசியா முழுவதிலுமாக இந்துக்கள் இரண்டு சதவிகிதம் மட்டுமே இருக்கின்றனர். ஆயினும் பாலி தீவின் மக்கள் தொகையில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள். ஆனால் இந்து மதம் இந்தோனீசியா முழுவதும் பரவியுள்ளது.
1960 மற்றும் 1970 களில், ஜாவா தீவில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்து மதத்திற்கு மாறியதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தோனீசியாவின் சமூகம் மற்றும் கலாச்சாரத்தைப் பார்த்தால் பல இடங்களில் இந்தோனீசியாவின் இந்து வரலாற்றின் காட்சியை பார்க்கமுடிகிறது. கடந்த காலங்களில் இந்தோனீசியா பல இந்து வம்சங்களால் ஆளப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவின் பெரும்பகுதி 7 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்து-பௌத்த வம்சங்களால் ஆளப்பட்டது.
மஜாபஹித் பேரரசு மற்றும் ஸ்ரீ விஜய பேரரசு ஆகியவை அவற்றில் மிகப்பெரியவை. அந்த காலகட்டங்களில் இந்தோனேஷிய தீவுகளில் இந்து மதம் தழைத்தோங்கியது.
மஜாபஹித் சாம்ராஜ்யத்தில் இந்து, பௌத்தம், ஆன்மவாதம் (Animism) உள்ளிட்ட பல மதங்கள் தழைத்தோங்கின. ஆனால் மத மொழி சமஸ்கிருதமாகவே இருந்தது. இதற்கு முன், ஸ்ரீ விஜய பேரரசின் காலம் ஏழாம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது, அதன் முக்கிய மொழிகள் சமஸ்கிருதம் மற்றும் பழைய மலாய்.
தற்போதைய காலகட்டத்திலும், இந்தோனீசியாவின் வரலாற்றில் செழித்தோங்கிய நாட்டுப்புறவியல் மற்றும் சின்னங்களின் செல்வாக்கு காணப்படுகிறது.
இந்தோனீசியாவின் தேசிய சின்னம் கருடன். இது இந்து புராண நூல்களுடன் நேரடியாக தொடர்புடையது. கருடபறவை, சீதையை இலங்கையில் இருந்து கொண்டு வர ராமருக்கு உதவியது என்று ராம்சரித் மானஸ் குறிப்பிடுகிறது.
இதனுடன் இந்தோனீசியாவின் மிகவும் பெருமைமிகு பல்கலைக்கழகங்களில் ஒன்றான பாண்டுங் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் விநாயகரின் படம் லோகோவாக பயன்படுத்தப்படுகிறது.
இந்தோனீஷிய விமான நிறுவனத்தின் பெயரும் கருடா ஏர்லைன்ஸ் ஆகும். அதன் லோகோவும் புராண பறவையான கருடனின் படத்தைப் பயன்படுத்துகிறது. இந்தோனேஷியாவில் ஒரு இடத்தில் 1961 முதல் ராமாயணம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்துக்களுடன், பிற மதத்தினரும் ராமாயண கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதனுடன் இந்து பெயர்களை வைப்பதும் இந்தோனீஷியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்