கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கோரிய வில் ஸ்மித்: கடிதத்தில் தெரிவித்திருப்பது என்ன?

வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அறைந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்கர் மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்தது குறித்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார்.

தனது செயல் "எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"நான் வெளிப்படையாக உங்களிடம் மன்னிப்பு கோர விரும்புகிறேன் கிறிஸ். நான் வரைமுறையை மீறி நடந்து கொண்டேன். நான் செய்தது தவறு" என்று தனது மன்னிப்பு கடிதத்தில் தெரிவித்துள்ளார் வில் ஸ்மித்.

ஏற்கனவே ஆஸ்கர்ஸ் ஃபிலிம் அகாடமி வில் ஸ்மித்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் சம்பவம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அறைந்தது ஏன்?

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை, கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார்.

வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கேலியாக பேசியதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அறைந்ததாக வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

50 வயதாகும் ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டு வருபவர். இதை 2018இல் ஒரு நிகழ்ச்சியில் அவரே வெளிப்படுத்தியிருந்தார்.

வில் ஸ்மித் தனது மன்னிப்பு கடிதத்தில் என்ன குறிப்பிட்டுள்ளார்?

will smith and jada smith

பட மூலாதாரம், Getty Images

"எந்த வடிவத்திலும் வன்முறை என்பது மிகவும் ஆபத்தானது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நான் நடந்து கொண்ட விதம் ஏற்று கொள்ளத்தக்கது அல்ல. எனது மனைவி ஜடா மருத்துவ ரீதியாக எதிர்கொண்டு வரும் பாதிப்பு குறித்து நகைச்சுவை செய்வது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்." என்று தெரிவித்துள்ளார்.

"அன்பும் கருணையும் நிறைந்த இந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ் ராக் ஜாடா குறித்து பேசியது என்ன?

ஜி.ஐ ஜேன் 2. படத்தில் கதாநாயகி தனது தலையை மொட்டையடித்தபடி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்துடன் ஜடாவை ஒப்பிட்டு கிறிஸ் ராக் கிண்டல் செய்து பேசியபோது, பார்வையாளர்கள் வரிசையில் சிரிப்பலை எழுந்தது.

அவர்களில் ஒருவராக வில் ஸ்மித் அருகே அமர்ந்திருந்த ஜடா தன் கண்களை சுழற்றி பார்த்தார். அது கிறிஸ் ராக்கின் கருத்தை அவர் ரசிக்கவில்லை என்பதை உணர்த்தியது.

இந்த நிலையில், திடீரென்று மேடைக்கு வில் ஸ்மித் ஏறியபோது தன்னை பாராட்ட அவர் வருவதாகவே கிறிஸ் ராக் கருதி பேசினார். ஆனால், மேடையில் அவர் அருகே சென்றதும் ஓங்கி அறை விட்டு விட்டு மீண்டும் பார்வையாளர் பகுதியில் தனது மனைவியுடன் வில் ஸ்மித் அமர்ந்தார். அப்போது வில் ஸ்மித் பற்றி கிறிஸ் ராக் பேசியபோது, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எனது மனைவியை பற்றி உன்னுடைய வாயால் எதையும் பேசாதே என்று உரக்க குரல் கொடுத்தார் வில் ஸ்மித்.

இந்த நிலையில், வில் ஸ்மித்திடம் கன்னத்தில் அறைவாங்கியபோதும் அந்த சூழலை இயல்பாக்கிக் கொள்ள முயன்ற கிறிஸ் ராக், "தொலைக்காட்சி வரலாற்றில் இது சிறந்த இரவாக இருக்கும்," என்று கூறினார்.

சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற வில் ஸ்மித்

வில் ஸ்மித் மற்றும் கிறிஸ் ராக் (2015ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வில் ஸ்மித் மற்றும் கிறிஸ் ராக் (2015ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்)

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார்.

கிறிஸ் ராக்கை அவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வில் ஸ்மித் தனது விருதைப் பெறுவதற்கு முன்பு நடந்தது.

விருதை பெற்ற பின், "நான் அகாடமியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இங்கே உள்ள விருதுக்கு முன்மொழியப்பட்ட சக கலைஞர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டு வரும் ஜடா; அலோபீசியா என்றால் என்ன?

கடந்த 2018ஆம் ஆண்டு முகநூலில் தான் தொகுத்து வழங்கிய ரெட் டேபிள் டாக் என்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய ஜடா, "எனக்கு தீவிரமான முடி உதிர்தல் பிரச்னை உள்ளது. இது முதலில் தொடங்கியபோது மிக மோசமாக இருந்தது," என்றார்.

தான் குளிக்கும்போது அதிகமாக முடி உதிர்வதை கண்டபோதுதான் முதன்முதலாக தனக்கு இந்த பிரச்னை இருப்பதை கண்டறிந்துள்ளார் ஜடா.

"கடவுளே, நான் மொட்டை தலையாக போகிறேனா? என கேட்டுக் கொண்டேன். எனது வாழ்க்கையில் நான் அச்சத்தால் மிகவும் நடுங்கிய தருணம் அது. அதனால்தான் எனது முடியை வெட்டிக் கொள்கிறேன். தொடர்ந்து அதை செய்கிறேன்" என்று தனது நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் ஜடா.

அதீத அளவில் முடி உதிர்தல் ஏற்படும் நிலையை அறிவியல் ரீதியாக அலோபீசியா என்று அழைப்பர். இது தன்னியக்க நோய் எதிர்ப்பு நிலை என சொல்லப்பட்டும் 'ஆட்டோ இம்யூன் கண்டிஷனால்' ஏற்படக்கூடும். அதாவது நமது உடலில் ஆரோக்கியமான செல்லை நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தவறாக புரிந்து கொண்டு அழிக்கும் நிலை.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :