RCEP: இந்தியா இல்லை; மீண்டும் சீன ஆதிக்கம் - எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதினைந்து நாடுகள் சேர்ந்து உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளது. இது உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு (RCEP)என்று கூறப்படும் இதில் பத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளும், தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.

அந்த பிராந்தியத்தில் சீன தாக்கத்தின் ஒரு நீட்சியாகவே இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிலிருந்து அமெரிக்க வெளியேறியதால் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க சேர்க்கப்படவில்லை.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற சிறிது காலத்தில் ஆஸ்திரேலியா, சில்லி, கனடா, ஜப்பான் உட்பட 12 நாடுகள் கொண்ட ட்ரான்ஸ் பசிபிக் பாட்னர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.

இந்த ஒப்பந்தம் டிரம்புக்கு முன்னாள் அதிபராக இருந்த ஒபாமாவால் ஆதரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பிராந்தியத்தில் சீனாவின் அதிகாரம் அதிகரிப்பதை ஒடுக்க அந்த ஒப்பந்தத்திற்கு ஒபாமாவால் ஆதரவு வழங்கப்பட்டது.

தற்போது கையெழுத்தாகியுள்ள பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் குறித்துக் கடந்த எட்டு வருடங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஒருவழியாக இன்று காணொளி வாயிலாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

வியட்நாமால் நடத்தப்பட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து விடுபட இந்த ஒப்பந்தம் உதவும் எனத் தலைவர்கள் நம்புகின்றனர்.

"எட்டு வருடப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது, இருளில் ஒளிபாய்ச்சியது போல, இந்த பெருந்தொற்று காலத்தில் அமைந்துள்ளது," எனச் சீனாவின் பீரிமியர் லி கெஷுவாங் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஆரம்பக் கட்டத்தில் இந்தியாவும் இருந்தது. ஆனால் கடந்த வருடம் குறைந்த வரிகள் உள்ளூர் தொழிலாளர்களைப் பாதிக்கும் என்று கருதி இதிலிருந்து வெளியேறியது.

இருப்பினும் எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா விரும்பினால் இணைந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் இருபது வருடங்களுக்குள் இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் சில வரிகளை ஒழிக்க இந்த ஒப்பந்தம் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அறிவுசார் சொத்து, தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், இணைய வர்த்தகம் மற்றும் பிற முறையான சேவைகள் அடங்கிய பிரிவுகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். மேலும் சர்வதேச அளவில் 29 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் இந்த நாடுகளின் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இந்த புதிய ஒப்பந்தம், அமெரிக்க-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றைக்காட்டிலும் விரிவானதாக இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தால் என்ன பயன்?

இந்தோனீசியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருள், ஆஸ்திரேலியாவின் உதறி பாகங்களை கொண்டிருந்தால், பிற தெற் கிழக்கு ஆசிய நாடுகள் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம்படி, எந்த நாட்டில் இருந்து உதறி பாகங்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும், உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் ஒரே சலுகையே கொடுக்கப்படும். மேலும் இது ஒரு நிறுவனத்திற்கு இந்த பிராந்திய வர்த்தகத்திற்குள்ளாக விநியோகஸ்தர்களை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கும்.

இந்த ஒப்பந்தம் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் முன்னெடுப்பாக பார்க்கப்பட்டாலும், சீனாவின் ஆதரவு பெற்ற ட்ரான்ஸ் பசிபிக் கூட்டமைப்புக்கான ஒரு மாற்றாகதான் பார்க்கப்படுகிறது.

ட்ரான் பசிபிக் கூட்டமைப்பில் சீனாவை தவிர பல ஆசிய நாடுகள் உள்ளன. ஆனால் அமெரிக்காதான் அந்த கூட்டமைப்பிலிருந்து 2017ஆம் வெளியேறியது.

இந்தியா மீதான தாக்கம்

இன்று கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இடம் பெறவில்லை. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையின் ஆரம்பக்கட்டத்தில் இடம்பெற்ற இந்தியா கடந்த வருடம் இதிலிருந்து வெளியேறியது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், நாட்டில் மலிவான பல சீன பொருட்கள் வரத்து அதிகமாகும் என்றும், இது இந்தியாவில் சிறு தொழில் முனைவோருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், அந்த விலையால் பொருட்களை அவர்களால் வழங்க முடியாது என்றும் இந்தியா தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா நுழையாத பட்சத்தில் இந்தியாவில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்ற கேள்வியும் எழுகிறது.

இதைப் புரிந்து கொள்ள பிபிசி ஹிந்தி சேவை செய்தியாளர் ஃபைசல் முகமது அலி இந்தியச் சீன வர்த்தக நிபுணர் சந்தோஷ் பாயிடம் உரையாடினார்.

"இந்த ஒப்பந்தமானது, 15 நாடுகளைக் கொண்டுள்ளது. உலகின் 30 சதவீத கட்டுமான தொழிற்சாலைகள் இந்த நாடுகளில்தான் உள்ளன. எனவே இந்த சூழலில் கட்டற்ற வணிக ஒப்பந்தம் இந்தியாவிற்கு முக்கியமான ஒன்று. ஏனென்றால் இந்தியா அதன்மூலம் பல வர்த்தக வாய்ப்புகளைப் பெற முடியும்." என்கிறார் சந்தோஷ் பாய்.

சீனாவைச் சார்ந்திருத்தலைக் குறைக்கும் முயற்சியா?

"இந்தியா தனது கட்டுமான தொழிற்சாலையில் பல நாடுகளை முதலீடு செய்ய அழைப்பது போலவே இந்த ஒப்பந்தமும் பல நாடுகளை முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. எனவே இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இல்லையென்றால் அதுகுறித்து பல கேள்விகள் எழுகின்றன," என்கிறார் சந்தோஷ் பாய்.

ஒரு கட்டத்தில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைப் போன்று சீனாவை சார்ந்திருத்தலை இந்தியா குறைக்க விரும்பியது. ஆனால் தற்போது அந்த நாடுகளே இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசிய சந்தோஷ் பாய், "இந்தியா சீனாவைச் சார்ந்திருத்தலை தவிர்த்தல் என்பது ஆறு ஏழு மாதங்களில் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள ஐந்து வருடங்களாவது தேவைப்படும். பிற நாடுகள் சீனாவை சார்ந்திருத்தலைப் தவிர்ப்பதை பல வருடங்களாக முயற்சித்து வருகின்றன எனவேதான் அவை இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. ஏனென்றால் அவற்றிற்கு தெரியும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து கொண்டே சீனாவை சார்ந்திருத்தலை குறைக்கலாம் என்று,"

மேலும், சீனாவைத் தவிர்த்து பல துறைகளில் வலுவான பல நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன. குறிப்பாக மின்சாதனம், மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் வலுவாக உள்ள நாடுகள் இதில் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த வருடம் வரை கரும்பு வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சித்து வந்தது. மேலும் சீன முதலீட்டை அதிகரிக்கவும் முயற்சித்து வந்தது."

"இந்தியா, சீனாவுடனான வர்த்தகத்தில் 100பில்லியன் அமெரிக்க டாலர்களை இலக்காக வைத்துள்ளது. ஆனால் கடந்த ஆறு மாதங்களில் அரசியல் காரணங்களால் இந்த நிலை மாறியுள்ளது. தற்போது இந்தியா தற்சார்பு கொள்கைகளுக்கு ஆதரவான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சீனாவுடனான வர்த்தகத்தைக் குறைக்கவும், அதன் முதலீடுகளைக் குறைக்கவும் முயற்சித்து வருகிறது,"

முடிவாக, "இந்தியா தற்சார்பு பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்தாலும், அதன் விளைவைக் காணப் பல வருடங்கள் ஆகும் என்றும், தற்போது எதையும் சொல்ல இயலாது," என பாய் தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: