You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் Vs பைடன்: ஆட்சி மாற்றம் ஏற்படுவது சீனாவுக்கு ஆதரவாக அமையுமா?
- எழுதியவர், கரிஷ்மா வாஸ்வானி
- பதவி, ஆசியா வணிக செய்தியாளர்
அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் தேசிய கூட்டங்கள், அடுத்து வரும் அதிபரின் உள்நாட்டு கொள்கைகள் எந்த மாதிரி இருக்கும் என்ற ஒரு வெளிச்சத்தை அமெரிக்க வாக்காளர்களுக்கு அளிக்கும்.
ஆனால், இந்தாண்டு சீனாவுடனான பிரச்சனைக்குரிய உறவு குறித்தும் பலரையும் சிந்திக்க வைக்கிறது.
மீண்டும் நான்கு ஆண்டுகள் டிரம்பின் நிர்வாகம் வந்து, என்ன நடக்கும் என்று கணிக்க முடியாமல் இருப்பதற்கு, ஜோ பைடன் ஆட்சி வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.
ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தாலும் சீனா மீது கடுமையாகவே நடந்துகொள்வார். ஆனால், அது ஏதேனும் ஒரு காரணத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்பது அவர்களின் கருத்து.
ஒன்று மட்டும் தெளிவாக இருக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும், சீனாவுடன் கடுமையான போக்கையே அமெரிக்கா கடைபிடிக்கும்.
அடுத்து யார் அமெரிக்க அதிபராகப் போகிறார் என்ற கவலை சீன நிறுவனங்களுக்கு இருக்க மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
மேலும், அவர்களை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் முக்கியம்.
உறவை துண்டித்தல்
சமீபத்தில் Decoupling (உறவை துண்டித்தல்) என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. சீனாவுடனான உறவு தொடர்பாக அதிபர் டிரம்பும், அவரது நிர்வாகத்தினரும் ட்வீட்களிலும், செய்தியறிக்கைகளிலும் இதனை பயன்படுத்துகிறார்கள்.
சீனாவுடன், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கொண்டிருந்த வர்த்த ரீதியிலான உறவை நிறுத்திக் கொள்வது என்பதைதான் அவர்கள் Decoupling என்று குறிப்பிடுகிறார்கள்.
டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் தவறு செய்தால் உறவை முறித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிறார் குடியரசு கட்சியின் வெளிநாட்டு ஆதரவுக்குழுவின் தலைமை செயலதிகாரியும், துணைத் தலைவருமான சொலொமன் யூ
"உண்மையிலேயே எங்கள் தொழில்நுட்பம் திருடப்படுமோ என்ற தேச பாதுகாப்பு கவலையே இதற்கு காரணம்" என்கிறார் அவர்.
ஆனால் உறவை முறித்து கொள்வது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது.
ஹுவாவே போன்ற சீனாவின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தொழில் செய்வதை அமெரிக்க நிறுவனங்கள் நிறுத்துமாறு அந்நாடு அழுத்தம் அளித்தது ஓரளவிற்கு வெற்றி அடைந்துள்ளது. இது நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் தன்னிறைவை வளர்த்துக்கொள்ளும் சூழலை சீன நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.
"மீண்டும் அமெரிக்காவை நம்பக்கூடாது என்று உணர்ந்திருக்கிறோம்" என சீன தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பணிபுரியும் ஒருவர் கூறினார்.
"இது தங்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து சீன நிறுவனங்களை சிந்திக்க வைத்துள்ளது" என்று அவர் தெரிவிக்கிறார்.
தடை செய்வது
சீனாவில் இருந்து விநியோகங்கள் நடத்தும் அமெரிக்க தொழிற்சாலைகளை மூடுவது, அமெரிக்காவில் இருந்து செயல்படும் சீன நிறுவனங்களான டிக்-டாக் மற்றும் டென்சென்ட் ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள் இடத்தில் சீனர்களுக்கு பதிலாக அமெரிக்கர்களை கொண்டு வருவது. தன்னால் முடிந்தவற்றை அமெரிக்கா செய்ய தயாராகவே இருக்கிறது.
அமெரிக்காவின் பரிந்துரைப்படி அவர்கள் நடக்கவில்லை என்றால், அதற்கு தடை விதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
பைடன் நிர்வாகம் வந்தாலும் இதையே பின்பற்றுவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்தத்தொனி மற்றும் பரிந்துரைகள் இருக்கும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
"2020ல் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் அமெரிக்காவில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதற்கு சீனாவைதான் குறை கூறுவார்கள் என்பது மட்டும் மாறாது" என்கிறார் ஹாங்காங்கில் முதலீட்டு ஆலோசகராக இருக்கும் தாரிக் டெனிசன்.
உலகமயமாக்கலை கட்டுப்படுத்துதல்
உலகமயமாக்கலால் கடந்த 30 ஆண்டுகளில் மிகப்பெரிய பயன் பெற்றது சீனா. இதனால் கோடிக்கணக்காக சீனர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதுதான் சீன அதிபர் ஷி ஜின்பிங் கனவின் அடிநாதம்.
ஆனால், இதனை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார் அதிபர் டிரம்ப். உலகமயமாக்கலால் சீனா பணக்கார நாடான வேளையில், அமெரிக்கா ஏழ்மையான நாடானது என்கிறார் அவர்.
டிரம்பின் நிர்வாகத்தின் போது, உலகமயமாக்கலை கட்டுப்படுத்துவது என்பது ஒரு விஷயமாக எடுக்கப்பட்டது. அதாவது எல்லைகளையும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்துவது.
இது தேர்தல் முடிந்த பிறகும் மாறாது என்பது சீனாவிற்கு தெரியும்.
உலகமயமாக்கலால் உலகம் பாதுகாப்பான நிலைக்கு வரும் சூழல் ஏற்பட்டது.
ஒரு நாடு மற்றொரு நாடுடன் வர்த்தம் செய்கிறது என்றால், சண்டை வராமல், குறைந்தபட்சம் வெளிப்படையாக சண்டை போகும் வாய்ப்பு குறைந்தது.
ஆசியாவில் உள்ள பல தொழில்களுக்கு முக்கியமான கவலை, இரு சக்திவாய்ந்த நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் தவிர்க்க முடியாத உண்மையான ராணுவ மோதல். அதுவும் தென் சீன கடற்பகுதியில் சீனா ஏவுகணை ஏவியதை தொடர்ந்து இந்த கவலை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா - சீனா இடையேயான உறவை மீட்பது என்பது அந்த இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் ஆபத்தானதாக இருக்கலாம்.
பிற செய்திகள்:
- "மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது" - நீதிபதிகள்
- அதிமுக Vs பாஜக: யார் தலைமையில் கூட்டணி? தொடரும் சர்ச்சை
- பிரான்சில் இதுவரை இல்லாத அளவு தீவிரமடையும் கொரோனா பரவல்: மீண்டும் பொது முடக்கமா?
- இந்தர்ஜித் கௌர்: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதல் பெண் தலைவர்
- ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: