அமெரிக்காவின் மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை 'பூமியின் அதிகபட்ச' வெப்பநிலை பதிவு மற்றும் பிற செய்திகள்

மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை 'பூமியின் அதிகபட்ச' வெப்பநிலை பதிவு

பட மூலாதாரம், REUTERS

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 130 டிகிரி ஃபாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மரணப் பள்ளத்தாக்கின் ஃபர்னேஸ் க்ரீக் எனும் இடத்தில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதுவரை பூமியில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியின் வெப்பநிலை இந்த வாரத்தில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பூமியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 129.2 டிகிரி ஃபாரன்ஹீட் (54 டிகிரி செல்சியஸ்) ஆகும்.

இதுவும் 2013-ஆம் ஆண்டு மரணப் பள்ளத்தாக்கில்தான் பதிவு செய்யப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக மரணப் பள்ளத்தாக்கில் 134 டிகிரி ஃபாரன்ஹீட் (56.6 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உள்ளன.

Banner image reading 'more about coronavirus'
Banner

1913ஆம் ஆண்டு பதிவான அந்த அளவு வெப்பநிலை, அந்த காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலை அளவுகளுடன் ஒத்துப்போகவில்லை என்று 2016-ஆம் ஆண்டு வெப்பநிலை வரலாற்றாளர் கிறிஸ்டோபர் பர்ட் தெரிவித்துள்ளார்.

1931ஆம் ஆண்டு ஆஃப்ரிக்காவின் துனிசியாவில் 131 டிகிரி ஃபாரன்ஹீட் (55 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் அது காலனியாதிக்க காலத்தில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலை என்பதால் அதன் நம்பகத்தன்மை குறித்து கிறிஸ்டோபர் பர்ட் கேள்வி எழுப்புகிறார்.

Transparent line

பாலியல் குற்றங்கள்: யோகி ஆதித்யநாத்தின் ராம ராஜ்ஜியத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

யோகி ஆதித்யநாத்தின் ராம ராஜ்ஜியத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

பட மூலாதாரம், Getty Images

உத்தரப் பிரதேசத்தில் உள்ள லஷ்மிப்பூர் கேரியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது தலித் சிறுமியின் உடல் ஆகஸ்ட் 16ஆம் தேதி அங்குள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

அதற்கு ஆறு நாட்கள் முன்பு அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த சுதிக்ஷா பாட்டி எனும் இளம்பெண் புலந்தசகர் மாவட்டம் அவுரங்காபாத் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் அவர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா செல்ல இருந்தார்.

Transparent line
குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவதை பெண்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உள்ளது. ஆண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 21.

குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006-இன் படி குறைந்தபட்ச வயதுக்கு கீழ் உள்ள ஆண் அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

இந்நிலையில் தற்போது பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஜெயா ஜேட்லி தலைமையில் இதற்காக பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது பரிந்துரைகளை திட்டக் குழுவிடம் அளிப்பார்கள்.

Transparent line

இலங்கை தமிழர் பிரச்சனை: "13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவுக்கு கடும் அழுத்தம்"

இலங்கை தமிழர் பிரச்சனை: "13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவுக்கு கடும் அழுத்தம்" - ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

பட மூலாதாரம், PAFFREL

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவுக்கு கடுமையாக அழுத்தம் கிடைத்து வருவதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அமையப் பெற்றுள்ள போதிலும், அது இன்று கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளதை காண முடிகின்றது.

இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரினால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

Transparent line

சென்னையில் மதுபான கடைகள் திறப்பு: கட்டுப்பாடுகளும் எதிர்ப்புகளும்

சென்னையில் மதுபான கடைகள் திறப்பு: கட்டுப்பாடுகளும் எதிர்ப்புகளும்

பட மூலாதாரம், Getty Images

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குள் செயல்படும் 700க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநில அரசின் டாஸ்மாக் நிறுவனத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் மார்ச் மாதம் 24ஆம் தேதியோடு மூடப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 4,550 கடைகள் மே மாதம் 7ஆம் தேதியே மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

Transparent line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: