குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவதை பெண்கள் எதிர்ப்பது ஏன்?

குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்துவதை பெண்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி

இந்தியாவில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உள்ளது. ஆண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 21.

குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006-இன் படி குறைந்தபட்ச வயதுக்கு கீழ் உள்ள ஆண் அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

இந்நிலையில் தற்போது பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஜெயா ஜேட்லி தலைமையில் இதற்காக பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது பரிந்துரைகளை திட்டக் குழுவிடம் அளிப்பார்கள்.

காலம் வெகுவாக மாறும் நிலையில் பெரிய நகரங்களில் இருக்கும் பெண்கள் படிப்பு மற்றும் வேலை ஆகியவற்றால் பெரும்பாலும் 21 வயதுக்கு மேலாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

எனவே பெண்கள் படிப்பு மற்றும் வேலை ஆகியவற்றை பெரிதும் ஊக்குவிக்காத, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இந்த முடிவு குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். சிறந்த ஊட்டச்சத்து, சுகாதார சேவைகள் கிடைத்திராத இப்பெண்களை விரைவில் திருமணம் செய்து கொடுப்பது இன்றும் கிராமங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

இதுபோன்ற இடங்களில் குழந்தை திருமணங்களும் அதிகளவில் நடக்கிறது. ஆனால், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவது, இவர்களது வாழ்க்கையை மேம்படுத்துமா என்பதுதான் முக்கிய கேள்வி.

ஒரு சில சமூக அமைப்புகள் சேர்ந்து களத்தில் என்ன நிலை என்பதை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்ள 'Young Voices National Working Group' என்ற குழுவை அமைத்தது.

இதன் ஒரு பகுதியாக, 15 மாநிலங்களில் 96 அமைப்புகள் சேர்ந்து ஒரு திட்ட பிரசாரம் ஒன்றை தொடங்கியது. அதில் 12ல் இருந்து 22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது.

நேரடியாக கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு பல சிக்கலான பதில்கள் கிடைத்தன. ஒத்தக்கருத்து கொண்ட பதில்கள் இல்லை. மாறாக பல பெண்களும் அரசாங்கம் தங்களுக்கு போதிய விஷயங்களை செய்து தரவில்லை என்று குற்றச்சாட்டினர்.

குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்த மம்தா
படக்குறிப்பு, குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்த மம்தா

உதாரணமாக, தனக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தில் இருந்து அதிஷ்டவசமாக தப்பித்த, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரை சேர்ந்த மம்தா ஜன்கித், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்தும் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்த மம்தா

மம்தாவிற்கு தற்போது 19 வயது. ஆனால், மம்தாவை 11 வயதிலும், அவரது இளைய சகோதரியை 8 வயதிலும் திருமணம் செய்ய அவரது குடும்பம் நிர்பந்தித்தது.

ராஜஸ்தானில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவுகள் கடைபிடிக்கும் பாரம்பரியத்தின்படி,

ஒரு ஆண் ஒரு குடும்பத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்தால், அந்த குடும்பம் ஆணின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இதன்படி, மம்தா மற்றும் அவரது சகோதரியை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு அவர்களது தாய் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பல மிரட்டல்கள் வந்தும், அவரது தாய், தனது மகள்களின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 18 வயதுக்கு குறைவானர்வகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்ற நிலையில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தது.

குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்துவதை பெண்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், WILL RUSSELL-ICC

தற்போது பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 என உயர்த்தினாலும், இதெல்லாம் மாறாது என்பதே மம்தாவின் கருத்து.

"இங்கு பெண்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்கள் சம்பாதிக்கவும் இல்லை. அதனால் அவர்கள் வளர்ந்த பிறகு, ஒரு பாரமாகவே பார்க்கப்படுகிறார்கள். என்னை திருமணம் செய்து வைக்க நினைக்கும் அவர்களை நாம் எப்படி சமாளிப்பது. அவர்களால் எனக்கு 18 வயது முடியும்வரை காத்திருக்க முடியவில்லை. 21 வயது வரை என்னை திருமணம் செய்து கொடுக்க முயற்சிப்பதை நான் எப்படி தடுப்பது?" என்று கேள்வி எழுப்புகிறார் மம்தா.

பெண்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி கிடைப்பதை உறுதிபடுத்தி, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கித்தர வேண்டும் என்கிறார் மம்தா. இதனால் அவர்கள் திறமையானவர்களாகவும், பலம் பெற்றவர்களாகவும் ஆவார்கள்.

திருமணம் என்பது பெண்களின் சொந்த விருப்பமாக இருக்க வேண்டும் என்றும், அரசு எந்த சட்டத்தாலும் அதனை கட்டுப்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.

அதாவது, ஒரு பெண் தனது 18 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அது அவளது விருப்பம் என்றும் அதனை எந்த சட்டமும் தடுக்கக்கூடாது என்றும் மம்தா தெரிவித்தார்.

குழந்தை திருமணம் அல்ல, இளம்பருவ திருமணம்

குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்துவதை பெண்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக இருக்கிறது.

1929 இந்தியாவில் கொண்டுவரப்பட்ட சர்தா சட்டத்தின்படி, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 என்றும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 14 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்பிறகு 1978ல் இந்த சட்டம் திருத்தப்பட்டு, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு 18 என்றும் மாற்றப்பட்டது.

2006ல் குழந்தை திருமண தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது, இதே விதிகள் நீடித்து, மேலும் சில புதிய விதிகள் சேர்க்கப்பட்டன.

உலகெங்கும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது குறைந்துவிட்டது என்றும் ஆனால் தெற்காசியாவில் இது அதிகமாகி இருப்பதாகவும் ஐ.நாவின் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பான யூனிசெஃப் கூறுகிறது.

18 வயதுக்கள்ளானசர்களுக்கு திருமணம் நடத்தி வைப்பது சப் சகாரன் ஆப்ரிக்காவில் ( 35%) அதிகமாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் தெற்காசியா( 30%) உள்ளது.

குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்துவதை பெண்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், EYESWIDEOPEN

யூனிசெஃப் தீர்மானத்தின்படி, 18 வயது உட்பட்டவர்களுக்கு திருமணம் செய்துவைப்பது என்பது மனித உரிமை மீறலாகும். இதனால், பெண்களுக்கு கல்வி கிடைப்பது, குடும்ப வன்முறைக்கு உள்ளாவது மற்றும் குழந்தை பிறப்பின்போது மரணமடைவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகமாகிறது.

எனவே பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்தும் போது அவர்களின் கல்வி சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.

'திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு'

இந்தியாவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களின் இறப்பு விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்துள்ளது

2000ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் உயிரிழக்க இந்த எண்ணிக்கை 2017ல் 35 ஆயிரமாக குறைந்துள்ளதாக யுனிசெஃப் கூறுகிறது.

குழந்தைபேறு தொடர்பாக மற்ற பிரச்சினைகள் இந்தியாவில் பதின் வயது சிறுமிகள் அதிகம் இறப்பதற்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவது இதனை குறைக்குமா?

ஒரு தாயின் உடல்நலம் என்பது பிரசவத்தை மட்டும் சார்ந்தது அல்ல என்கிறார் 'Young Voices National Working Group' ஐ சேர்ந்த திவ்யா முகுந்த. "ஏழ்மை, குடும்பத்தில் பெண்களுக்கு அளிக்கப்படாத முக்கியத்துவம், குறைந்த ஊட்டச்சத்து உட்கொள்வது, ஆகியவை இன்னும் பிரச்சைனையாக பிரச்சனையாக இருக்கிறது" என்கிறார் அவர்.

களத்தில் நிலவரம் மேலும் சிக்கலாகவே உள்ளது.

இந்தியாவில் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு 'சம்மதம் பெற' ஒருவருக்கு தகுதியான வயது 18. பெண்களுக்கு திருமண வயது 21 என்று உயர்த்தப்பட்டால், அதற்கு முன்னதாக வைத்துக் கொள்ளும் உறவு, திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு (pre-marital sex) என்ற பிரிவில் வரும். திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு சட்டப்படி குற்றம் இல்லை என்றாலும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று.

'Young Voices National Working Group' வை சேர்ந்த கவிதா ரத்னா கூறுகையில், "மேலும் இவர்களுக்கு கருத்தடை மாத்திரைகளை வாங்குவதற்கான வாய்ப்பு குறைகிறது. அதோடு மற்ற சுகாதார சேவைகளையும் பெற முடியாது. இல்லை என்றால் அதனை பெறுவதற்காக பல அவமானங்களை சந்திக்க நேரிடும்" என்று தெரிவிக்கிறார்.

திருமணம் என்பது வயதை சார்ந்து இருக்கக்கூடாது

தாமினி சிங்
படக்குறிப்பு, தாமினி சிங்

இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, பல பெண்களும் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை 21ஆக உயர்த்துவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவர்கள் குடும்பம் திருமணம் குறித்த அழுத்தம் தருவது குறையும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

எனினும், அவர்கள் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, எந்த அதிகாரமும் கிடைக்காத நபர்களாக இருக்கிறார்கள் என்றால், இந்த சட்டம் எதையும் மாற்றாது என்று சில பெண்கள் கூறினார். மாறாக மறைமுகமாக குழந்தை திருமணங்கள் நடக்க இது வழிவகை செய்யும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் தாமினி சிங். 70 குடும்பங்கள் அடங்கிய இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருமணம் தாமதமாக நடக்க வேண்டும் ஆனால், அது வயது சார்ந்து இருக்கக்கூடாது என்கிறார் தாமினி. சொந்தக் காலில் நின்று, சொந்தமாக சம்பாதித்த பிறகே,ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அவரது கிராமத்தில் 5 குடும்பங்களில் இருக்கும் பெண்களே வெளியே பணிக்கு செல்கிறார்கள். இருவர் பள்ளி ஆசியர்களாக பணிபுரிகிறார்கள். இருவர் சமூக சுகாதார மையத்திலும் ஒருவர் அங்கன்வாடியிலும் வேலை செய்கிறார். இதுவே சுமார் 20 குடும்பங்களில் இருந்து ஆண்கள் வெளியே வேலைக்கு செல்கின்றனர்.

"எங்கள் கிராமத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் பள்ளி இருக்கிறது. அருகில் இருந்தால் நடந்து செல்லலாம். மேலும் பெண்களுக்கு பள்ளிகளுக்கு சென்று படிக்க ஆகும் பயணச் செலவுக்கு இங்கு பலரிடமும் பணம் இல்லை. அதனால் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்" என்கிறார் பிபிசியிடம் பேசிய தாமினி.

பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்கவும், தங்களுக்கு தேவையான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்ளவும் உதவும் வகையில், அரசாங்கம் திறமை அடிப்படையிலான பயிற்சி மையங்களை திறக்க வேண்டும் என்கிறார் தாமினி. சொந்தமாக முடிவெடுக்கவும், தேவைப்பட்டால், தங்கள் குரல்களை வெளிப்படுத்தவும் அவர்களுக்கு தெரிய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

பெண்களை சுமையாக நினைப்பது மாறவேண்டும்

குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு ஜார்க்கண்ட் சராய்கெலா பகுதியை சேர்ந்த பிரியங்கா முர்மு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

பிரியங்கா முர்மு
படக்குறிப்பு, பிரியங்கா முர்மு

தாமினி மற்றும் மம்தாவை போல, பெண்களுக்கு சிறந்த கல்வி மற்றும் சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

பெண்களை பாரமாக பார்ப்பது முக்கிய பிரச்சினை என்று கூறும் அவர், அந்த மனநிலை மாறும் வரை பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக இருந்தாலும் 21 ஆக இருந்தாலும் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கிறார்.

ஆனால் பெண்களால் சம்பாதிக்க முடியும் என்ற நிலை வந்தால் அவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பங்கள் அழுத்தம் தருவது குறையும் என்று அவர் கூறுகிறார்.

தனது பகுதியில் இன்னும் பல குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக பிரியங்கா கூறுகிறார்.

"மக்களுக்கு என்ன சட்டம் இருக்கிறது என்று தெரியும். ஆனால் அதற்கு அவர்கள் அஞ்சுவதாக இல்லை. ஒருவேளை குழந்தை திருமணத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இது மாறலாம். இல்லையென்றால் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவதில் எந்த பயனும் இருக்காது. ஏனெனில் பல பெண்களும் வீட்டிலேயே முடக்கப்படுவார்கள்" என்கிறார் பிரியங்கா.

குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்துவதை பெண்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஆண் பெண் இருவருக்குமே சம உரிமைகள் இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தாங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை தாங்களே முடிவு செய்யும் நிலை வரும் என்றும் அவர் கூறுகிறார்.

தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவதால், பல பெற்றோர் இதனை தவறாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக ஒரு பக்கமும் அச்சமும் நிலவுகிறது.

"அதாவது 18 வயது நிறம்பிய பெண், தனது விருப்பத்திற்குரிய ஆணை திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால், அதனை தடுக்க அவரது குடும்பம் சட்டப்படியாக இது குற்றம் என்று சொல்லி தடுக்கலாம். இதனால், அந்தப்பெண் சிறைக்கு சொல்லும் அபாயம் ஏற்படலாம்" என்கிறார் திவ்யா முகுந்த்.

இந்தக் கணக்கெடுப்பில், பெண்கள் பலரும், அரசு எந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் தங்களின் கருத்தை கேட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆனால், பெரும்பாலான பெண்கள் திருமணம் மட்டுமே தங்கள் வாழ்வின் மையமாக இருப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை என்கிறார்கள். திருமணத்தை வைத்து தங்கள் எதிர்காலம் கணிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

"பெண்களுக்கு தேவை சுதந்திரமும், தங்கள் விருப்பப்படி வாழ்வதற்கான பலமும்தான் வேண்டும். அதற்கு அரசாங்கம் உதவினால் நன்றாக இருக்கும்" என்கிறார் கவிதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: