சீனாவில் மன்னிப்பு கேட்ட மாட்டிறைச்சி உணவகம் மற்றும் பிற செய்திகள்

மத்திய சீனாவில் உள்ள சாங்சா நகரில் அமைந்திருக்கும் மாட்டிறைச்சி உணவகம் ஒன்று தங்கள் வாடிக்கையாளர்கள் உணவுகளை ஆர்டர் செய்யும் முன்பு தங்களின் உடல் எடையை அளவிடுமாரு அறிவுறுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளது.

சீனாவில் தேசிய அளவில் உணவை வீணாக்குவது எதிரான பிரசாரம் தொடங்கப்பட்ட பின்பு அந்த உணவகத்தின் நுழைவாயிலில் உடல் எடையை பரிசோதிக்கும் இரு கருவிகள் நிறுவப்பட்டன.

உடல் எடையை அளவிட்ட பின்பு அங்கு இருந்த செயலியில் அவர்களின் உடல் எடை குறித்த விவரங்கள் பதிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அந்தந்த நபர்களின் உடல் எடைக்கு ஏற்ற உணவுகளை, அந்த செயலி பரிந்துரைக்கும்.

உணவை வீணாக்காமல் தங்களுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே வாடிக்கையாளர்கள் உண்பதை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த உணவகம் தெரிவித்துள்ளது.

எனினும், இவ்வாறு வாடிக்கையாளர்களை அவமானப்படுத்தும் வகையிலான செயலை மேற்கொள்வதாக சீன சமூக ஊடகங்களில் இந்நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த உணவகத்துக்கு எதிராக சுமார் மூன்று கோடி ஹேஷ்டேகுகள் சீன சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டன. இதன்பின்பு அந்த உணவகம் மன்னிப்பு கோரியுள்ளது.

கமலா ஹாரிஸ்: மெட்ராஸ் இட்லியும், கடற்கரையில் தாத்தாவுடன் நடைப்பயிற்சியும் - அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் சென்னை நாட்கள்

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான செனட்டர் கமலா ஹாரிஸ், தனது தாத்தாவுடன் சென்னை கடற்கரையில் நடந்ததையும், தனக்கு இட்லியை பிடிக்க வைக்க தனது தாய் எடுத்த முயற்சிகளையும் நினைவுகூர்ந்து பேசினார்

துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக இந்திய அமெரிக்க சமூகத்தினரிடம் உரையாற்றிய கமலா ஹாரிஸ், தனது இந்தியப் பாரம்பரியம் குறித்துப் பெருமைப்படுவதாகக் கூறினார்.

இந்தியர்களுக்கு சுதந்திர வாழ்த்து தெரிவித்த அவர், "இன்று ஆகஸ்ட் 15. தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்காவின் முதல் துணை அதிபர் வேட்பாளராக நான் உங்கள் முன் நிற்கிறேன்" என அப்போது தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் உண்மையில் எத்தனை மருத்துவர்கள் பலியானார்கள்? - மருத்துவ சங்கங்கள் எழுப்பும் சந்தேகம்

கொரோனா தடுப்புப் பணியில் 40க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவர்கள் இறந்துள்ளதாக இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்துள்ள நிலையில், அவர்களின் இறப்பு குறித்து தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என மருத்துவர்கள் சங்கமும், இறந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என அரசியல் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்த 47 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக கிளை அறிவித்துள்ளது. இறந்த மருத்துவர்களில் 32 பேருக்கு ஆர்டிபிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது என்றும் 15 நபர்கள் நெகட்டிவ் என்ற போதும் கொரோனா அறிகுறிகள் அவர்களுக்கு இருந்தன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் ராஜா, இறந்தவர்களில் பலர் மூத்த மருத்துவர்கள் என்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு இழப்பீடு அளிப்பதில் எந்த முடிவையும் அரசு மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

'பாஜகவினரின் வன்முறை பதிவுகளை கண்டுகொள்ளாத ஃபேஸ்புக்' - பாஜக vs காங்கிரஸ் கருத்து மோதல்

இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

இதற்கு பாஜக மூத்த தலைவரும் , மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பதில் கூறி உள்ளார்.

பாஜக கட்சிக்கு ஆதரவாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாகவும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பதிவிடும் வெறுப்பு பேச்சுக்களை அந்நிறுவனம் நீக்குவது இல்லை என்றும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

ஜெனரல் பிபின் ராவத்: இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றபின் ஏற்பட்ட மாற்றம் என்ன?

2015 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?

வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். கூகுள் கூட அதிகம் உதவாது. நான் முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஆனால், இந்தியாவின் ராணுவ வரலாற்றில் இந்த தினம் மகத்துவம் வாய்ந்தது என்பது உறுதி.

கடந்த ஆண்டு இதே நாளில், பிரதமர் மோதி தான் தவறு என்று நினைத்ததை சரிசெய்ய மிகப்பெரிய ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். முப்படைகளின் ஒருங்கிணைந்த தலைவர் பதவியை அறிவித்தார்.

இந்த திட்டத்திற்கு 24 டிசம்பர் 2019 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆறு நாட்களுக்குப் பிறகு, அப்போதைய ராணுவத் தலைவர் பிபின் ராவத் கூட்டுப் படைகளின் முதல் தலைவராக (Chief of Defense Staff, CDS) நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: