You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமலா ஹாரிஸ்: மெட்ராஸ் இட்லியும், கடற்கரையில் தாத்தாவுடன் நடைப்பயிற்சியும் - அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் சென்னை நாட்கள்
அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான செனட்டர் கமலா ஹாரிஸ், தனது தாத்தாவுடன் சென்னை கடற்கரையில் நடந்ததையும், தனக்கு இட்லியை பிடிக்க வைக்க தனது தாய் எடுத்த முயற்சிகளையும் நினைவுகூர்ந்து பேசினார்
துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக இந்திய அமெரிக்க சமூகத்தினரிடம் உரையாற்றிய கமலா ஹாரிஸ், தனது இந்தியப் பாரம்பரியம் குறித்துப் பெருமைப்படுவதாகக் கூறினார்.
இந்தியர்களுக்கு சுதந்திர வாழ்த்து தெரிவித்த அவர், "இன்று ஆகஸ்ட் 15. தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்காவின் முதல் துணை அதிபர் வேட்பாளராக நான் உங்கள் முன் நிற்கிறேன்" என அப்போது தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "என் அம்மாவிற்கு 19 வயதாக இருக்கும்போது கலிஃபோர்னியா வந்திறங்கினார். அப்போது அவரிடம் எதுவுமில்லை. ஆனால், அவரது பூர்வீகத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அவரிடம் இருந்தது. என் அம்மாவின் பெற்றோர், அதாவது எனது பாட்டி ராஜன் மற்றும் தாத்தா பிவி கோபாலன் இருவரும் என் அம்மாவிற்கு நிறைய கற்றுக்கொடுத்திருந்தனர். இந்த உலகில் எங்கு அநியாயம் நடந்தாலும், அதைத் தட்டி கேட்க வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது என கற்றுக் கொடுத்தார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.
"நாங்கள் வளரும்போது அம்மா என்னையும் என் தங்கை மாயாவையும் மெட்ராசுக்கு அழைத்து செல்வார். ஏனெனில் அவர் எங்கிருந்து வந்தார், எங்கள் மூதாதையர்கள் குறித்து நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என அம்மா விரும்பினார். அதோடு எங்களுக்கு இட்லியை பிடிக்க வைக்க வேண்டும் என்று முயன்றார். மெட்ராசில் என் தாத்தாவுடன் நான் நீண்ட நடைப்பயிற்சிகளுக்குச் செல்வேன். அப்போது அவர் ஓய்வு பெற்றிருந்தார். காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது நான் அவரது கைகளை பிடித்துக்கொண்டு நடப்பேன். அப்போது அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எப்படி உருவானது என்பது குறித்தும் அதற்காக போராடியவர்கள் குறித்தும் என்னிடம் கூறுவார். அவர்கள் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து எடுத்துச் செல்வது நம் கடமை என்று கூறுவார். நான் இங்கு இந்த இடத்தில் நிற்பதற்கு மிகப்பெரிய காரணம் அவர் கூறிய கதைகள்" என இந்திய பாரம்பரியம் தனக்குள் வேறூன்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
யார் இவர்?
கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது. கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.
கமலா ஹாரிஸின் தாய் சென்னையை சேர்ந்தவர். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள்.
கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றபின், அவரின் தாய் ஷியாமலா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார் கமலா ஹாரிஸ்.
கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.
கமலாவின் தாயார் இந்தியாவிற்கு செல்லும்போதெல்லாம் அவருடன் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார் கமலா. மேலும் தனது இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்தார் கமலா.
இருப்பினும் தனது தாய் ஒக்லாந்தின் கருப்பின கலாசாரத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார் என்றும், தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்தார் என்றும் கமலா தெரிவித்துள்ளார்.
"எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்." என தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகத்தான் பார்க்கும் எனவே நாங்கள் தன்நம்பிக்கை கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்," என கமலா குறிப்பிட்டிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: