கொரோனா வைரசுக்குப் பின்: அரசு சோஷியலிசம் தோன்றுமா? காட்டுமிராண்டி நிலை வருமா?

கொரோனா வைரஸுக்கு பிறகான எதிர்காலத்தை கட்டமைக்கும் வழிகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சைமன் மெயர்
    • பதவி, பிபிசிக்காக

இப்போதிருந்து 6 மாதத்தில், ஓராண்டில், 10 ஆண்டுகளில் நாம் எங்கே இருப்போம்? என் அன்புக்குரியவர்களுக்கு, பலவீனமான நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்தபடியே இரவில் நான் தூங்காமல் விழித்திருந்தேன், நான் தொலைவிலிருந்தபடி வேலை செய்ய முடியும். நோய்வாய்ப்பட்ட காலத்துக்கு எனக்கு நல்ல ஊதியம் கிடைக்கும். இப்படி நான் ஒரு அதிர்ஷ்டவசமான ஆள்தான். ஆனாலும் என் வேலைக்கு என்ன ஆகும் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

பிரிட்டனிலிருந்து இதை நான் எழுதுகிறேன். இங்கே எனக்கு சுயவேலைவாய்ப்பு தேடிக்கொண்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அடுத்த பல மாதங்களுக்கு தங்களுக்கு வருமானம் இருக்காது என்ற நிலையை அவர்களால் பார்க்க முடிகிறது. பல நண்பர்கள் வேலையை இழந்துவிட்டனர். தற்போது எனக்கு என் ஊதியத்தில் 80 சதவீதத்தைத் தரும் இந்த வேலை ஒப்பந்தம் வரும் டிசம்பரில் முடிகிறது. கொரோனா வைரஸ் பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்கிறது. எனக்குத் தேவை எனும்போது எனக்கு வேலை கிடைக்குமா?

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதற்குப் பலவித சாத்தியங்கள் உள்ளன. கொரோனா வைரசையும், அதன் பொருளாதாரப் பின் விளைவுகளையும் அரசுகளும், சமூகங்களும் எப்படிக் கையாளப் போகின்றன என்பதைப் பொறுத்தே எதிர்காலம் செல்லும் பாதை அமைந்திருக்கும். இந்த சிக்கலை மறுகட்டுமானம் செய்யவும், மேம்பட்ட, மனிதத்தன்மை கொண்ட விஷயங்களை உருவாக்கவும் நாம் பயன்படுத்திக் கொள்வோம் என்று நம்பலாம். ஆனால், இதைவிட மோசமான நிலைமைக்கு நாம் சரியவும் வாய்ப்பிருக்கிறது.

பிற சிக்கல்களை உற்று நோக்குவதன் மூலம் நம்முடைய சூழ்நிலையை, நம் எதிர்காலத்தை நாம் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்.

Banner image reading 'more about coronavirus'
Banner

உலக அளிப்பு சங்கிலிகள் (global supply chains), கூலி, உற்பத்தித் திறன் போன்ற நவீன பொருளாதாரத்தின் அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்துகிறது. பருவநிலை மாற்றம், தொழிலாளர்களின் உடல், உள்ள நலன்களில் தாழ்ந்த நிலை போன்ற சவால்களுக்குப் பொருளாதார இயங்கியல் எப்படிக் காரணமாக இருக்கிறது என்பது குறித்து நான் ஆராய்கிறேன்.

சமூகரீதியாக நீதியான, சூழலியல் ரீதியில் வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் நமக்கு மிகவும் வேறுவிதமான பொருளாதாரம் வேண்டும் என்று நான் வாதிட்டுள்ளேன். கோவிட்-19 வைரஸ் சிக்கலை நாம் எதிர்கொண்டுள்ள இந்த நிலையைவிட வேறெப்போதும் இந்த உண்மைகள் மேலதிகத் துலக்கமாகத் தெரிந்ததில்லை.

எந்த வகை விழுமியத்துக்கு முன்னுரிமை தருவது என்பதைத் தீர்மானிக்கிற இயக்கமே பிற சமூக, சூழலியல் சிக்கல்களுக்குக் காரணமாகிறது. கோவிட்-19 உலகத் தொற்றுக்கு ஆற்றுகிற எதிர்வினைகள் இந்த இயக்கத்தைத் தீவிரப்படுத்துவதாகவே உள்ளன. எனவே வைரசுக்கான எதிர்வினைகள் பரிணமிக்கும்போது நம் பொருளியல் எதிர்காலம் எப்படி உருவாகும்?

பொருளாதாரப் பார்வையில் நான்குவிதமான எதிர்காலத்துக்குச் சாத்தியங்கள் உள்ளன. காட்டுமிராண்டி நிலைக்குத் தாழ்ந்துபோகலாம், வலுவான அரசு முதலாளித்துவத்தை நோக்கிச் செல்லலாம், தீவிர அரசு சோஷியலிசத்தை நோக்கிச் செல்லலாம், பரஸ்பர உதவிகளின் மீது கட்டப்படும் பெரிய சமூகமாக மாற்றமடையலாம். இந்த நான்கு வகை எதிர்காலத்தின் மாறுபட்ட வடிவங்கள் அனைத்தும் சாத்தியமே.

ஆனால் இந்த நான்கு வகைகளையும் சம அளவில் விரும்ப முடியாமல் போகலாம்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

சிறிய மாற்றங்கள் உதவாது

பருவநிலை மாற்றத்தைப் போலவே கொரோனா வைரஸும் ஓரளவு நம் பொருளாதாரக் கட்டமைப்பின் பிரச்சனை. இவை இரண்டும் சுற்றுச்சூழல் பிரச்சனையாகவும், இயற்கைப் பிரச்சனையாகவும் தோற்றமளித்தாலும் இவை இரண்டுமே சமூகக் காரணிகளால் உருவாகிறவையே.

சில வகை வாயுக்கள் வெப்பத்தை உறிஞ்சிக்கொள்வதால்தான் பருவநிலை மாற்றம் நிகழ்கிறது என்பது உண்மையே. ஆனால், இது மிகவும் மேம்போக்கான விளக்கம். பருவநிலை மாற்றத்தைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், நாம் பசுமை இல்ல வாயுக்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பதற்குக் காரணமான சமூகக் காரணிகளைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அதைப் போலவே கோவிட்-19 நோயும் வைரசால்தான் உருவாகிறது என்பது உண்மையே. ஆனால் இந்நோயின் விளைவுகளைச் சமாளிக்க வேண்டுமானால் மனித நடத்தையையும், அதன் விரிந்த பின்னணியையும் புரிந்துகொள்ளவேண்டும்.

தேவையற்ற பொருளாதார நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டால் கோவிட்-19 மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டையும் சமாளிப்பது எளிதுதான். பொருள் உற்பத்தியைக் குறைத்து, அதன் மூலம் ஆற்றல் பயன்பாட்டைக் குறைத்து, அதன் மூலம் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதைக் குறைத்தால் பருவநிலை மாற்றத்தைத் தணிக்கமுடியும். கோவிட்-19 பெருந்தொற்று வேகமாகப் பரவுகிறது. ஆனால் இதன் மையமாக உள்ள தர்க்கம் எளிமையானது. மக்கள் ஒன்று கலந்து வைரசைப் பரப்புகிறார்கள். பணியிடங்களில், வீடுகளில், பயணங்களில் இது நடக்கிறது. இந்த ஒன்று கலப்புகளைக் குறைத்தால் ஆட்களுக்கிடையில் வைரஸ் தொற்றுவது குறைந்து மொத்தத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை குறையக்கூடும்.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளோடு, மக்கள் மத்தியில் தொடர்புகளைக் குறைப்பதும் பிரச்சனையைச் சமாளிக்க உதவும். தொடர்புகளின் பாதையைக் கண்டறிவதும், தனிமைப்படுத்துவதும் தொற்று நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பொதுவான உத்திகள். நோய்த் தொற்று கண்டறியப்பட்ட ஒருவர் யாருடனெல்லாம் தொடர்பிலிருந்தார் என்பதைக் கண்டறிந்து, அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்காக அவர்களைத் தனிமைப்படுத்துவதே இந்த நடவடிக்கை.

அதிக அளவிலான தொடர்புகளைக் கண்டறிந்தால் இந்த நடவடிக்கை அதிகப் பலனளிக்கும். எத்தனை சதவிகித தொடர்புகளைக் கண்டறிகிறீர்கள் என்பது முக்கியம். நோய்த் தொற்றிய நபர் குறைவான நபர்களோடு தொடர்பிலிருந்தால், குறைவான நபர்களைக் கண்டறிந்தாலே அதிக சதவீதம் தொடர்புகளைக் கண்டறிய முடியும்.

சீனாவின் வுஹான் நகரில் சமூக விலகலும், முடக்கமும் மிகுந்த பயனளித்ததைக் காணமுடியும். ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாகப் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் முன்னதாக இவை ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அரசியல் பொருளாதாரம் எங்களுக்கு உதவியது.

கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்? நம் எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

நொறுங்கும் தன்மையுள்ள பொருளியல்

பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை, உலகப் பொருளாதாரத்துக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. மிகத் தீவிரமான மந்த நிலையை நாம் எதிர்கொள்கிறோம். இந்த நெருக்கடி காரணமாக, முடக்க நடவடிக்கைகளைத் தளர்த்தும்படி பல உலகத் தலைவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

சரிவுக் காலப் பொருளாதாரம் என்ன என்பது தெளிவானது. லாபம் சம்பாதிப்பதற்காகவே வணிக நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றால் உற்பத்தி செய்ய முடியாவிட்டால் விற்க முடியாது. அப்படியானால் லாபமும் வராது. அப்படியானால், அவர்களால் உங்களுக்கு வேலை தர முடியாது.

கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்? நம் எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

தங்களுக்கு உடனடியாகத் தேவைப்படாத தொழிலாளர்களைக்கூட வணிக நிறுவனங்களால் -குறுகிய காலத்துக்கு - தக்கவைத்திருக்க முடியும். தக்கவைத்திருப்பார்கள். ஏனெனில் பொருளாதாரம் மீண்டெழும்போது தேவைகளைச் சமாளிப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் நிலைமை மிகவும் மோசமாகத் தோன்றினால் அவர்கள் தக்கவைத்துக்கொள்ள மாட்டார்கள். தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். அதனால் அவர்கள் வாங்குவதைக் குறைத்துக்கொள்வார்கள். இதன் விளைவாகப் பொருளாதாரம் மந்த நிலையின் நீண்ட சுழற்சியில் சிக்கிக்கொள்ளும்.

வழக்கமாக ஏற்படும் இதுபோன்ற மந்த நிலை சிக்கல்களில் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான யோசனை எளிமையானது. மக்கள் நுகரவும், வேலை செய்யவும் தொடங்கும் வரை அரசு மீண்டும் மீண்டும் செலவிடும்.

ஆனால் இதுபோன்ற வழக்கமான தீர்வுகள் இங்கு உதவாது. ஏனெனில் குறைந்தபட்சம் உடனடியாக பொருளாதாரம் மீண்டெழக்கூடாது என்று நாம் நினைக்கிறோம். முடக்க நிலை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் மக்கள் வேலைக்கு சென்று அங்கே நோயைப் பரப்பிவிடக்கூடாது என்பதுதான். சீனாவின் வுஹான் நகரில் விரைவில் முடக்கநிலையைத் தளர்த்தும்போது, பணியிட மூடல்கள் முடிவுக்கு வரும்போது, மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும்போது நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் இதே ஆண்டில் இரண்டாவது உச்ச நிலைக்கு செல்லும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

பொருளியல் அறிஞர் ஜேம்ஸ் மீட்வே இப்படி எழுதுகிறார்:

கோவிட்-19 நோய்க்கான சரியான எதிர்வினை என்பது உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்கிற போர்க் காலப் பொருளாதாரமல்ல. அதற்குப் பதிலாக நமக்கு போர்க்கால நிலைமைக்கு எதிர்நிலைப் பொருளாதாரம் தேவை. அதாவது உற்பத்தியைப் பெருமளவில் குறைக்கவேண்டும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளவிலான தொற்றுகளால் நாம் கலங்காமல் இருப்பதற்கு (பருவநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கும்) வாழ்வாதார இழப்பு ஏற்படாத வகையில் உற்பத்தி குறைப்பு செய்யவல்ல ஓர் அமைப்பு முறை நமக்குத் தேவை.

எனவே நமக்குத் தேவை மாறுபட்ட பொருளாதார மனநிலை நமக்குத் தேவை. பொருள்களை, குறிப்பாக நுகர்வுப் பண்டங்களை, வாங்குகிற, விற்கிற முறை என்பதாகவே பொருளாதாரத்தைப் பற்றி நாம் கருதுகிறோம். ஆனால் பொருளாதாரம் என்பது இதுவல்ல. அல்லது அது இப்படி இருக்கவேண்டியதில்லை. வளங்களை எடுத்து அவற்றை நாம் வாழ்வதற்குத் தேவையான பொருள்களாக மாற்றும் முறையே பொருளியலின் மையக் கரு. இப்படிப் பார்ப்பதன் மூலம், துன்பத்தை அதிகரித்துக்கொள்ளாமல், குறைவான பண்டங்களை உற்பத்தி செய்து மாறுபட்ட முறையில் வாழ்வதற்கான நிறைய வாய்ப்புகளை நம்மால் பார்க்கத் தொடங்க முடியும்.

களையிழந்த அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, களையிழந்த அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரம்

சமூக ரீதியில் நீதியான வழிமுறையில் எப்படி குறைவாக உற்பத்தி செய்வது என்ற கேள்வி குறித்து நானும் பிற சூழலியல் பொருளியலாளர்களும் நீண்டகாலம் யோசித்து வருகிறோம். ஏனெனில் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் பிரச்சனையின் மையமாக உள்ள சவால்களில் குறைவாக உற்பத்தி செய்வதும் ஒன்று.

மற்றவை சமமாக இருக்கும்போது நாம் எவ்வளவு அதிகம் உற்பத்தி செய்கிறோமா அவ்வளவு அதிகமான பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகிறோம். மக்களை வேலையில் வைத்துக் கொண்டே, நாம் உற்பத்தி செய்கிற பொருள்களின் அளவைக் குறைப்பது எப்படி?

இதற்குப் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள்: ஒவ்வொரு வாரத்திலும் வேலை செய்யும் நேரத்தின் அளவைக் குறைப்பது. என்னுடைய சமீபத்திய கட்டுரையில் ஆராய்ந்திருப்பதைப் போல, ஆட்களை மிக மெதுவாக, குறைவான அழுத்தத்துடன் வேலை செய்ய அனுமதிக்கலாம். இந்த இரண்டு வழிமுறையுமே கோவிட் - 19 தொற்றை சமாளிக்க உகந்த முறைகள் அல்ல. ஏனென்றால் இந்தத் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்கு உற்பத்தியைக் குறைப்பது உதவாது. பதிலாக, தொடர்புகளைக் குறைப்பதே உதவும். ஆனால் இந்தப் பரிந்துரைகளின் உட்கரு ஒன்றுதான். மக்கள் தாங்கள் வாழ்வதற்குக் கூலியை, ஊதியத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவேண்டும்.

பொருளாதாரம் எதற்காக?

கோவிட்-19 நோய்க்கான எதிர்வினைகளைப் புரிந்துகொள்வதற்கான வழி பொருளாதாரம் என்பது எதற்காக என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்வதுதான். தற்போது உலகப் பொருளாதாரத்தின் முதன்மை நோக்கம், பணப் பரிமாற்றத்தைச் சாத்தியப்படுத்துவதுதான். இந்தப் பணத்தைத்தான் பொருளியலாளர்கள் பரிமாற்ற மதிப்பு என்று அழைக்கிறார்கள்.

பயன் மதிப்பு என்பதும் பரிமாற்ற மதிப்பு என்பதும் ஒன்றே என்ற எண்ணமே தற்போதைய அமைப்பு முறையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

தங்களுக்கு வேண்டுமென்ற, அல்லது தேவைப்படும் பண்டங்களை வாங்க மக்கள் பணத்தை செலவு செய்கிறார்கள். அந்தப் பொருளை அவர்கள் எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதை, அவர்கள் பணத்தைச் செலவிடும் இந்த நடவடிக்கை நமக்கு சொல்லும். இதனால்தான் சமுதாயத்தை வழிநடத்துவதற்கு சந்தையே சிறந்த வழி என்று பார்க்கப்படுகிறது. சந்தை நீங்கள் தகவமைய அனுமதிக்கும், அத்துடன் பயன் மதிப்பையும், உற்பத்தித் திறனையும் சமநிலைப் படுத்திப் பொருத்தும்.

சந்தைகளைப் பற்றிய நம்பிக்கைகள் பொய்யானவை என்பதைத்தான் கோவிட் - 19 முற்றாக அம்பலப்படுத்தியுள்ளது.

அளிப்பு சங்கிலி, சமூகப் பராமரிப்பு அதிலும் முக்கியமாகச் சுகாதார சேவை உள்ளிட்ட இன்றியமையாத அமைப்புகள் சீர்குலையும் அல்லது அவை அதிக சுமையை ஏற்கவேண்டிவரும் என்று உலகம் முழுவதும் அரசுகள் அஞ்சுகின்றன. இதற்குப் பங்களிக்கும் பல காரணிகள் உள்ளன. ஆனால் நாம் இரண்டினை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

முதலில், மிக அத்தியாவசியமான சமூகப் பணிகளில் பணம் சம்பாதிப்பது மிகக்கடினம். ஏனெனில் தொழிலாளர் உற்பத்தித் திறன் வளர்ச்சியே லாபத்தைப் பெருக்கும் முக்கிய வழி என்பது இதற்கு ஒரு பகுதியளவு காரணமாக இருக்கிறது. கொஞ்சம் பேரை வைத்து நிறைய செய்வது. மனித வளமே பல வணிகங்களில், குறிப்பாக நேரடி தலையீடுகள் தேவைப்படும் மருத்துவப் பணி போன்றவற்றில், மிக முக்கிய செலவுக் காரணியாக இருக்கிறது. எனவே, பொருளாதாரத்தின் மற்றத் துறைகளைக் காட்டிலும் மருத்துவத் துறையில் உற்பத்தித் திறன் வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கும். எனவே மருத்துவத் துறையில் செலவு, விலை சராசரியைவிட அதிவேகமாக உயரும்.

இரண்டாவதாகப் பல இன்றியமையாத துறைகளில் உள்ள வேலைகள் சமூகத்தில் உயர் மதிப்புடையவையாக இல்லை. பெரும்பாலான உயர் ஊதியம் பெறும் வேலைகள் பணப் பரிமாற்றத்துக்கு, அதாவது பணம் சம்பாதிக்க, உதவக்கூடிய வேலைகளே. அவற்றால் சமூகத்துக்கு விரிவான பயன் ஏதும் இல்லை.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆனாலும், மிகப் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் நம்மிடையே ஏராளமான ஆலோசகர்கள், பெரிய விளம்பரத் துறை, பிரும்மாண்ட நிதி மூலதனத் துறை ஆகியவை இருக்கின்றன.

அதே நேரம், சுகாதாரம், சமூகப் பராமரிப்பு ஆகிய துறைகளில் சிக்கல்கள் இருக்கின்றன. இத்துறைகளில் இருக்கிற சமூகத்துக்குப் பயனளிக்கும் வேலைகளில் இருந்து வெளியேறும் நிர்ப்பந்தம் அவற்றில் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. ஏனெனில் வாழத்தேவையான அளவு ஊதியத்தை இந்த வேலைகள் தருவதில்லை.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

பொருளற்ற வேலைகள்

ஏராளமான ஆட்கள் பொருளேதும் இல்லாத வேலைகளில் இருக்கிறார்கள் என்பதால்தான் கோவிட்-19 சிக்கலை எதிர்கொள்ள நம்மால் உரிய முறையில் தயாராக முடியவில்லை. பல வேலைகள் தேவையற்றவை என்பதை இந்த உலகத் தொற்று எடுத்துக்காட்டியுள்ளது. ஆனால் சிக்கல் ஏற்பட்டால் அதற்கு எதிர்வினையாற்றக்கூடிய முக்கியத் தொழிலாளர்கள் போதுமான அளவில் இல்லை.

கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்? நம் எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் சந்தை மூலம் மட்டுமே கிடைக்கிற, பறிமாற்று மதிப்பே வழிகாட்டு நெறியாக இருக்கிற சமூகத்தில் பொருளற்ற வேலைகளை செய்யும்படி மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஏனெனில் அத்தியாவசியப் பொருள்களை சந்தையில் வாங்க வேண்டும், வாங்குவதற்குப் பணம் தேவை, வேலைதான் அந்தப் பணத்தை அளிக்கிறது.

இந்த நாணயத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. கோவிட்-19 பிரச்சனைக்கு வந்த மிகத் தீவிரமான, மிகுந்த பயனளிக்கும் எதிர்வினைகள், சந்தை மற்றும், பயன் மதிப்பின் மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளக்குகின்றன. ஒரு மூன்று மாதம் முன்பு சாத்தியமே இல்லாததாகத் தோன்றிய நடவடிக்கைகளை உலகெங்கும் அரசாங்கங்கள் எடுக்கின்றன. ஸ்பெயினில் தனியார் மருத்துவமனைகள் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. பல போக்குவரத்து முறைகள் தேசிய மயமாகும் சாத்தியம் உருவாகியுள்ளது. மிகப் பெரிய வணிக நிறுவனங்களை தேசியமயமாக்கத் தயாராக இருப்பதை பிரான்ஸ் அறிவித்துவிட்டது.

அதைப்போல தொழிலாளர் சந்தைகள் உடைந்து நொறுங்குகின்றன. ஆட்கள் வேலைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் டென்மார்க், பிரிட்டன் போன்ற நாடுகள் வருமானத்தை தருகின்றன. வெற்றிகரமாக முடக்க நிலையை செயல்படுத்துவதற்கு இது ஒரு அத்தியாவசியமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கைகள் செம்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தங்கள் வருவாயை ஈட்ட மக்கள் வேலைக்கு செல்லவேண்டும் என்ற கொள்கையில் ஏற்பட்ட பெயர்ச்சி இது. தங்களால் வேலை செய்ய முடியாவிட்டாலும் மக்கள் வாழத் தகுந்தவர்கள் என்ற எண்ணத்தை நோக்கிய நகர்வும்கூட இது.

கடந்த 40 ஆண்டுகளாக நீடித்திருந்த போக்கினை இது தலைகீழாகத் திருப்பியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் சந்தையும், பறிமாற்ற மதிப்புமே ஒரு பொருளாதாரத்தை நடத்துவதற்கான சிறந்த வழிகளாகப் பார்க்கப்பட்டன. இதன் விளைவாக, பொது அமைப்புகளை சந்தைமயமாக்க, பணம் சம்பாதிப்பதற்கான வணிக நிறுவனங்களைப் போல அவற்றை நடத்த மேலும், மேலும் அதிக அழுத்தங்கள் தரப்பட்டன.

தொழிலாளர்கள் மேலும் மேலும் சந்தைக்கு ஆட்பட்டவர்களாக ஆகியுள்ளனர். ஜீரோ அவர் காண்ட்ராக்ட் எனப்படும் தேவை ஏற்படும்போது மட்டும் தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான பணி ஒப்பந்தங்கள், நெகிழ்வான நியதிகள் கொண்ட வேலைவாய்ப்புகள் நிரம்பிய கிக் பொருளாதாரம் (Gig economy) ஆகியவை, சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து நீண்டகால, நிரந்தர வேலைகள் அளித்துவந்த பாதுகாப்பு என்ற மூடியை அகற்றிவிட்டன.

வீட்டிலிருந்து வேலை செய்யும் லட்சக்கணக்கானோருக்கு, வழக்கம் போல அலுவலக வாழ்க்கைக்கு திரும்புவது கடினமாக இருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வீட்டிலிருந்து வேலை செய்யும் லட்சக்கணக்கானோருக்கு, வழக்கம் போல அலுவலக வாழ்க்கைக்கு திரும்புவது கடினமாக இருக்கலாம்.

தற்போது கோவிட்-19 இந்தப் போக்குகளை தலைகீழாகத் திருப்புவதாகத் தோன்றுகிறது. சுகாதாரப் பராமரிப்பு, தொழிலாளர்கள் தேவைக்கான பண்டங்கள் ஆகியவை சந்தையில் இருந்து அகற்றப்பட்டு, அவை அரசின் கைகளில் தரப்படுகின்றன. அரசுகள் பல காரணங்களுக்காக உற்பத்தியில் ஈடுபடுகின்றன.. அவற்றில் சில நல்ல காரணங்கள், சில மோசமான காரணங்கள். ஆனால் அரசுகள், சந்தையைப் போல பரிமாற்று மதிப்புக்காக உற்பத்தி செய்யவேண்டியது இல்லை.

இந்த மாற்றங்கள் எனக்கு நம்பிக்கையைத் தருகின்றன. இந்த மாற்றங்கள் பல உயிர்களைக் காப்பதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன. நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க நமக்கு உதவும் நீண்டகால மாற்றங்கள் நிகழ்வதற்கான குறிப்புகளையும் இவை கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த இடத்துக்கு வந்து சேர நமக்கு ஏன் இவ்வளவு நாள்கள் ஆனது? ஏன் இன்னும் பல நாடுகளுக்கு உற்பத்தியை மெதுவாக்க உரிய முறையில் இன்னும் தயாராகவில்லை? இதற்கான விடை, உலக சுகாதார நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்த சமீபத்திய அறிக்கையில் இருக்கிறது: They did not have the right "mindset".

நமது பொருளியல் கற்பனைகள்

கடந்த 40 ஆண்டுகளாக, மிகப் பெரிய விரிவான பொருளாதாரக் கருத்தொற்றுமை நீடித்து வருகிறது. இந்த அமைப்பு முறையில் இருக்கிற விரிசல்களை பார்ப்பதற்கான, அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆலோசகர்களின் வல்லமையை இந்த கருத்தொற்றுமை சுருக்கிவிட்டது. அவர்கள் மாற்றுகளை கற்பனை செய்து பார்க்கமுடியாதபடியும் செய்துவிட்டது. இந்த மன நிலை இரண்டு கற்பனைகளால் கட்டமைக்கப்பட்டது. அந்த கற்பனைகள்:

1.சந்தை நல்ல வாழ்க்கைத் தரத்தை அமைத்துத் தருகிறது.

2.குறுகிய கால சிக்கல்களுக்குப் பிறகு சந்தை எப்போதுமே பழைய நிலைமைக்குத் திரும்பும்.

இந்த நம்பிக்கைகள் மேற்கத்திய நாடுகளுக்குப் பொதுவானவை என்றபோதும் ஐக்கிய அமெரிக்க நாட்டிலும், பிரிட்டனிலும் இவை மிக வலுவாக இருக்கும். இந்த இரண்டு நாடுகளுமே கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராட சரிவர தயாராகாதவை.

Banner image reading 'more about coronavirus'

கோவிட்-19 நோயைப் பற்றி பிரிட்டன் பிரதமரின் மிக மூத்த உதவியாளர் ஒருவரின் அணுகுமுறை பற்றி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்கள் இப்படித் தொகுத்துக் கூறினார்கள்: "சமூக நோயெதிர்ப்பு சக்தி (herd immunity), பொருளாதாரத்தைப் பாதுகாக்கவேண்டும், ஆனால், அதனால் சில ஓய்வூதியக்காரர்கள் இறக்க நேர்ந்தால், அது மோசம்." ஆனால் அரசு இதை மறுத்துவிட்டது. ஆனால இது உண்மையாக இருக்குமானால், அது ஒன்றும் ஆச்சரியமல்ல. இந்த உலகளாவியத் தொற்று பரவத் தொடங்கியபோது நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், ஒரு மூத்த குடிமைப் பணி அலுவலர் என்னிடம் கூறினார் "பொருளாதாரத்தை சீர்குலைக்கும் அளவுக்கு அது முக்கியமானதா? நிதியமைச்சகத்துக்கு மனித உயிரைப்பற்றி இருக்கும் கருத்தை வைத்துப் பார்த்தால் அது முக்கியமல்ல."

இதுபோன்ற பார்வை குறிப்பிட்ட மேல்தட்டு மக்களிடம் பரவியிருக்கிறது. இந்தப் பார்வையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண அதிகாரி ஒருவர் இப்படி வாதிட்டார்: அமெரிக்கா பொருளாதார மந்த நிலையில் மூழ்குவதைப் பார்ப்பதைவிட பல முதியோர்கள் மகிழ்ச்சியாக சாவார்கள்.

கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்? நம் எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பார்வை பலவீனமான மக்கள் பலரை (வயோதிகர்கள் மட்டுமே பலவீனமானவர்கள் இல்லை) அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது ஒரு போலியான தேர்வு என்பதை இங்கே முயன்றிருக்கிறேன்.

கோவிட்-19 சிக்கல் செய்யப்போகிற பலவற்றில் ஒன்று பொருளாதாரம் பற்றிய பார்வையை விரிவுபடுத்துவதாக இருக்கும். அரசாங்கங்களும், குடிமக்களும், மூன்று மாதத்துக்கு முன்பு சாத்தியமில்லை என்று தோன்றியிருக்கக்கூடிய அடிகளை எடுத்துவைத்திருக்கும் நிலையில் இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றிய நமது கருத்துகளும் தீவிரமாக மாற்றமடையலாம். இந்த மறுசிந்தனை நம்மை எங்கே கொண்டு செல்லும் என்று பார்ப்போம்.

கொரோனா வைரஸுக்கு பிறகான எதிர்காலத்தை கட்டமைக்கும் வழிகள்

பட மூலாதாரம், Getty Images

நாம் எதிர்காலத்துக்குச் சென்று பார்ப்பதற்கு உதவும் வகையில் எதிர்காலவியல் ஆய்வுத் துறையில் உள்ள ஒரு பழைய உத்தியை நான் இங்குப் பயன்படுத்தப் போகிறேன். எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று நீங்கள் நினைக்கிற இரண்டு காரணிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் காரணிகள் வெவ்வேறு விதமாகக் கூட்டுச் சேர்ந்து ஊடாடினால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

நான் எடுத்துக்கொள்ள விரும்பும் இரண்டு காரணிகள் விழுமியங்கள் மற்றும் மையப்படுத்தல். விழுமியம் என்பது நம் பொருளாதாரத்தின் வழிகாட்டும் கொள்கைகளாக எவை இருந்தாலும் அவற்றைக் குறிப்பதாகும். பரிமாற்றத்தையும், பணத்தையும் மேம்படுத்திக்கொள்ள நமது வளங்களைப் பயன்படுத்துகிறோமா? அல்லது வாழ்வை மேம்படுத்திக்கொள்ளப் பயன்படுத்துகிறோமா?

மையப்படுத்தல் என்பது, விஷயங்கள் எப்படி ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பது. ஏராளமான சிறு அலகுகளாக அவை ஒழுங்கமைக்கப்படுகின்றனவா? அல்லது அதிகாரம் செலுத்தும் ஒரே பெரிய ஆற்றலால் அவை ஒழுங்கமைக்கப்படுகின்றனவா என்பது தொடர்பானது அது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்தக் காரணிகளை நாம் ஒரு தொகுப்பாக்கிக்கொள்வோம். பிறகு கற்பனையான சூழ்நிலைகளில் அவற்றைப் பொருத்திப் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் சிக்கலுக்கு, கீழ்க்கண்ட நான்கு தீவிர பாணிகளில் காரணிகளை ஒன்று சேர்த்து எதிர்வினையாற்றிப் பார்ப்போம்.

  • அரசு முதலாளித்துவம்: பரிமாற்ற மதிப்புக்கு முக்கியத்துவம் தரும், மையப்படுத்தப்பட்ட எதிர்வினை.
  • காட்டுமிராண்டி நிலை : பரிமாற்ற மதிப்புக்கு முக்கியத்துவம் தரும், பரவலாக்கப்பட்ட எதிர்வினை.
  • அரசு சோஷியலிசம்: உயிரை, வாழ்வைப் பாதுகாக்க முக்கியத்துவம் தரும், மையப்படுத்தப்பட்ட எதிர்வினை.
  • பரஸ்பர உதவி: உயிரை வாழ்வைப் பாதுகாக்கும் பரவலாக்கப்பட்ட எதிர்வினை.

அரசு முதலாளித்துவம்

கோவிட்-19 நோய்த்தொற்று பிரச்சனைக்கு அரசு முதலாளித்துவம் என்று மேலே கூறியிருக்கும் முறையில்தான் பெரும்பாலும், உலகம் முழுவதும் எதிர்வினையாற்றுகிறார்கள். வகைமாதிரியான எடுத்துக்காட்டுகள்: பிரிட்டன், ஸ்பெயின், டென்மார்க்.

அரசு முதலாளித்துவ சமூகங்கள், பொருளாதாரத்தின் வழிகாட்டும் ஒளியாக பரிமாற்ற மதிப்பு என்பதையே கொண்டிருக்கின்றன. ஆனால் சிக்கல் ஏற்படும்போது சந்தைக்கு அரசு உதவி தேவைப்படும் என்பதை இவை ஏற்றுக்கொள்கின்றன. உடல் நலமின்றியோ, உயிர் பயத்திலோ இருப்பதால் தொழிலாளர்கள் பலரும் வேலை செய்ய முடியாத நிலையில் இருப்பதால், அரசு தலையிட்டு விரிவான நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி தருவதன் மூலமாகவோ, கடன் தருவதன் மூலமாகவோ கீன்சிய கருத்தியல் வழியிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் இவை செயல்படுத்துகின்றன.

இத்தகைய உதவிகளைக் குறுகிய காலத்துக்கே செய்யவேண்டியிருக்கும் என்பது இங்குள்ள எதிர்பார்ப்பு. வணிகம் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்யும் வகையில், எத்தனை நிறுவனங்களைச் செயல்பட அனுமதிக்க முடியுமோ அத்தனை நிறுவனங்களை செயல்பட அனுமதிப்பது இந்த நடவடிக்கைகளின் முக்கிய அம்சம். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் இன்னமும் உணவு வகைகளை இன்னமும் சந்தையே விநியோகம் செய்கிறது. இதற்காக போட்டி ஒழுங்குமுறை சட்டங்களை அரசு தளர்த்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள் வழங்கப்படுகின்றன.

வழக்கமான தொழிலாளர் சந்தை செயல்பாட்டை சீர்குலைக்காத வகையில் இது செயல்படுத்தப்படுகிறது. பிரிட்டனில் உள்ள எடுத்துக்காட்டைக் கொண்டுபார்த்தால் தொழிலாளர்களுக்கான உதவித் தொகை முதலாளிகள் மூலமாக விநியோகிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட தொழிலாளி சமூகத்துக்கு எவ்வளவு பயனுள்ள பொருள்களை உற்பத்தி செய்கிறார் என்பதன் அடிப்படையில் பார்க்காமல், அவர் உற்பத்தி செய்கிறவற்றின் பரிமாற்று மதிப்பின் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகையின் அளவு தீர்மானிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இது ஒரு வெற்றிகரமான வழிமுறையாக இருக்குமா? கோவிட்-19 நோய் குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்குமானால், இது வெற்றிகரமான வழிமுறையாக இருக்கக்கூடும். சந்தை தொடர்ந்து செயல்படுவதைப் பராமரிக்கும் வகையில் முழு முடக்க நிலை தவிர்க்கப்பட்டுள்ளதால் தொற்று பரவுவது தொடரும் என்றே தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, பிரிட்டனில், அவசியமில்லாத கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதன் மூலம் கட்டுமானத் தலங்களில் மக்கள் ஒன்று கலப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. சாவு எண்ணிக்கை உயருமானால், அரசுத் தலையீட்டை குறைந்தபட்சமாக வைத்திருப்பது கடினமாக இருக்கும். நோய்த் தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தால் மக்களிடம் ஆவேசம் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஆழமடையும்.

இதனால் சந்தை தொடர்ந்து செயல்படுவதைப் பராமரிக்கும் வகையில் மேலும் தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு உருவாகும்.

காட்டுமிராண்டி நிலை

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பிரச்சனை தொடருமானால், எப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்குக் கொண்டு செல்லும் என்று ஆராய்வதற்காக நாம் கற்பனை செய்த நான்கு நிலைகளிலேயே இதுதான் மோசமான நிலையாக இருக்கும். பரிமாற்ற மதிப்பையே வழிகாட்டும் கொள்கையாக நாம் தொடர்ந்து வைத்திருந்தால், அதேநேரம் நோயாலும், வேலையின்மையாலும், சந்தைக்கு வெளியே விரட்டப்பட்டவர்களுக்கும் ஆதரவு காட்ட மறுத்தால் காட்டுமிராண்டி நிலை என்று நாம் குறிப்பிடும் நிலையே எதிர்காலம். நாம் இதுவரை பார்த்திராத ஒரு கற்பனையான நிலையை இது விவரிக்கிறது.

இந்த சூழ்நிலை வந்தால், அப்போது வணிக நிறுவனங்கள் தோல்வி அடையும். தொழிலாளர்கள் பட்டினி கிடப்பார்கள். ஏனெனில் அப்போது சந்தையின் கடும் எதார்த்த நிலையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க எந்தப் பொறியமைவும் அப்போது இருக்காது. மருத்துவமனைகளுக்கு அசாதாரண நடவடிக்கைகள் மூலம் ஆதரவு கிடைத்திருக்காது. அதனால் அங்கெல்லாம் பெரும் கூட்டம் இருக்கும். மக்கள் இறப்பார்கள். இந்தக் காட்டுமிராண்டி நிலை என்பது ஒரு ஸ்திரமற்ற நிலை. இந்த நிலை ஒரு முழுமையான பேரழிவிலோ அல்லது அரசியல், சமூக சேதங்களுக்குப் பிறகு இங்கு குறிப்பிட்டிருக்கிற பிற நிலைகளுக்கு மாறிச் சென்றோ முடிவடையும்.

இந்த நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறதா? உலகளாவிய தொற்றின் ஒரு நிலையில் தவறுதலாக ஏற்படலாம், அல்லது தொற்று உச்சநிலைக்குச் சென்ற பிறகு வேண்டுமென்றே உருவாக்கப்படலாம் என்ற கவலை இருக்கிறது. தவறுதலாக என்பது, தொற்று மிக மோசமாக வளரும் சூழ்நிலையில் அரசாங்கம் போதிய அளவு தலையிடாவிட்டால் ஏற்படும்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில் வணிக நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் உதவிகள் வழங்கப்படலாம். ஆனால் மிகப் பரவலாக ஆகிவிட்ட தொற்று நோயின் காரணமாக ஏற்படும் சந்தை சரிவைத் தடுக்கும் அளவுக்கு இது போதுமானதாக இல்லாவிட்டால் பெரும் குழப்பம் சூழும். இந்நிலையில் மருத்துவமனைகளுக்குக் கூடுதல் நிதியும், ஆட்களும் அனுப்பப்படலாம். ஆனால் அவை போதுமானதாக இல்லாவிட்டால் சிகிச்சை தேவைப்படும் மக்கள் பெருமளவில் திருப்பி அனுப்பப்படலாம்.

அதைப் போலவே ஏற்பட வாய்ப்புள்ள மற்றொரு விளைவு என்னவென்றால், இந்த உலகளாவிய தொற்று நோய் அதன் உச்ச நிலையை அடைந்த பிறகு சகஜ நிலைக்குத் திரும்ப விரும்பும் அரசுகள் ஏராளமான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஜெர்மனியில் இந்த நிலை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த நிலை ஒரு பேரழிவாக இருக்கும். இந்த சிக்கன நடவடிக்கைக் காலத்தில் இன்றியமையாத சேவைகளுக்கான நிதி குறைக்கப்படும், அல்லது ரத்து செய்யப்படும் என்பதால் இந்த உலகளாவியத் தொற்றுக்கு எதிர்வினையாற்றுவதற்கான நாடுகளின் வலிமையை இது பாதிக்கும் என்பது மட்டுமே காரணமல்ல.

பொருளாதார சமூகத் தோல்விகள் ஏற்பட்டு அதனால் சமூக, அரசியல் ஆவேசமும், பதற்றமும் ஏற்படும் என்பதாலும், இதன் விளைவாக, அரசு தோல்வியடைந்து, அரசும், சமூக நலத்திட்டங்களும் சிதைந்துபோகும்.

அரசு சோஷியலிசம்

பொருளாதாரத்தின் இதயத்தில் வேறு விதமான விழுமியங்களை நிறுவுகிற பண்பாட்டுப் பெயர்ச்சி ஏற்படுவதன் மூலம் ஏற்பட சாத்தியமுள்ள நிலையே அரசு சோஷியலிசம். பிரிட்டன், ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த நிலையை எதிர்காலத்தில் வந்து அடைவது நாம் ஊகித்த நான்கு சாத்தியங்களில் ஒன்று.

மருத்துவமனைகளைத் தேசிய மயமாக்குதல், தொழிலாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல் போன்றவை இந்த அமைப்பில் சந்தையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாக அல்லாமல் உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாகப் பார்க்கப்படுவதுதான் முக்கிய வேறுபாடாக இருக்கும். இது போன்ற ஒரு நிலைமையில் பொருளாதாரத்தில் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாக இருக்கும் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகத் தலையிடும்.

எடுத்துக்காட்டாக, உணவு, ஆற்றல், குடியிருப்பு போன்ற துறைகளை அரசு பாதுகாக்கும். இதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் சந்தையின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பாதிக்கப்படாது. அரசு மருத்துவமனைகளைத் தேசிய மயமாக்கும், வீடுகள் குடியிருப்பதற்கு இலவசமாக கிடைக்கும். இறுதியாக அரசே எல்லாவற்றையும் வழங்கும். அடிப்படைப் பொருள்கள், குறைக்கப்பட்ட மனித வளத்தைக் கொண்டு உற்பத்தி செய்ய சாத்தியமாக இருக்கும் நுகர்வுப் பண்டங்கள் உள்ளிட்ட பண்டங்களை அணுகுவதற்கு எல்லா மக்களுக்கும் வழிவாய்ப்புகள் இருக்கும்.

குடிமக்களுக்கும், அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைப் பெறுவதற்கும் நடுவே, இடைத்தரகர்களாக வேலைதரும் முதலாளிகள் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் ஊதியம் நேரடியாக செலுத்தப்படும். அந்த ஊதியம் அவர்கள் உற்பத்தி செய்த பண்டங்களின் பரிமாற்று மதிப்பைக் கொண்டு கணக்கிடப்பட்டதாக இருக்காது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

ஊதியம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்கும். நாம் உயிரோடு இருப்பதால் வாழ்வதற்குத் தேவையானதைப் பெறுவதற்கு நாம் தகுதியுடையவர்கள் என்ற அடிப்படையில் அது இருக்கும். அல்லது செலுத்துகிற உழைப்பின் பயன் அடிப்படையில் இருக்கும். சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள், டெலிவரி வாகனங்களின் டிரைவர்கள், கிடங்குப் பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள் ஆகியோரே அந்தப் புதிய உலகின் முதன்மை செயல் அதிகாரிகளாக, அதாவது சிஇஓ-க்களாக, இருப்பார்கள்.

உலகளாவிய தொற்று நீடிப்பதால் ஏற்படும் தாக்கத்தின் காரணமாகவும், அரசு முதலாளித்துவத்தை உருவாக்கும் முயற்சியின் பின் விளைவாகவும் அரசு சோஷியலிசம் உருவாக வாய்ப்பிருக்கிறது. ஆழமான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, இன்று நாம் பார்க்கிற திட்டமான கீன்சிய பொருளியல் கொள்கைகளால்(பணம் அச்சடிப்பது, எளிதாக கடன் கொடுப்பது போன்றவை ) தேவைகளை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு அளிப்புச் சங்கிலி சீர்குலைந்து போகும் நிலையில், உற்பத்தியை அரசு கையில் எடுக்கும்.

இந்த அணுகுமுறையில் ஆபத்துகள் உண்டு. எதேச்சாதிகாரம் தோன்றாமல் நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும். ஆனால் சிறப்பாக செயல்படுத்தினால், கோவிட்-19 தீவிரமாகப் பரவும் நிலையில் நமது மிகச் சிறந்த நம்பிக்கையாக இந்த அமைப்பு இருக்கலாம். சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தின் மையக் கருவான செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்காக வளங்களை ஒரு வலிமையான அரசு ஒழுங்கமைத்து ஒன்று திரட்டுவதாக இது அமைந்திருக்கும்.

பரஸ்பர உதவி

கோவிட்-19 சிக்கலின் விளைவாக ஏற்படும் நெருக்கடியால், மாற்றங்களால் உருவாகும் என்று நாம் கணிக்கிற மற்றொரு நிலை- பரஸ்பர உதவி நிலை.

இந்த நிலையில், உயிரை, வாழ்வைப் பாதுகாப்பதே பொருளாதாரத்தின் வழிகாட்டும் கொள்கையாக இருக்கும். ஆனால் இந்த நிலையில், தீர்மானகரமான பாத்திரத்தை அரசு ஏற்காது. அதற்குப் பதிலாக, தனி நபர்களும், சிறு குழுக்களும் தங்கள் சமூகங்களுக்கான ஆதரவையும், பராமரிப்பையும் ஒருங்கிணைக்கும்.

இந்த நிலையில் உள்ள ஓர் இடர்ப்பாடு, சுகாதாரம் போன்ற துறைகளின் திறனை விரிவுபடுத்துவதற்குத் தேவையான வளங்களை வேகமாகவும், வலுவாகவும் திரட்ட முடியாது. ஆனால் சமுதாய ஆதரவு வலைப்பின்னல்களைக் கட்டமைத்து பலவீனமானவர்களைப் பாதுகாக்கவும், காவல்துறை தனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றுவதன் வாயிலாகவும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை இந்த முறையில் திறமையாக முன்னெடுக்க முடியும்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

புதிய ஜனநாயக அமைப்புகள் உருவாவது இந்த நிலையின் மிகுந்த லட்சியவாத வடிவமாக இருக்கும். சமுதாய ஒன்றுகூடல் மூலமாக பெரிய அளவிலான வளங்களை ஒப்பீட்டளவில் வேகமாக திரட்ட முடியலாம். நோய்ப் பரவலைத் தடுக்க மக்கள் அந்தந்த சமுதாயங்களில் ஒன்றுகூடி வட்டார அளவிலான உத்திகளை வகுக்கவும், அவர்களுக்கு தேவையான திறமை இருந்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த முறையில் முடியும்.

முன்னர் கூறிய மூன்று முறைகளில் எதிலிருந்து வேண்டுமானாலும் இந்த நிலை உருவாகலாம். காட்டுமிராண்டி நிலை, அல்லது, அரசு முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவதற்கு சாத்தியமான வழிகளில் ஒன்றாக இது இருக்கும். அரசு சோஷியலிச நிலைக்கு உதவி செய்யக்கூடியதாகவும் இது இருக்கலாம். மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றிய எபோலா வைரஸ் பெருந்தொற்றினை சமாளிப்பதற்குச் சமுதாய எதிர்வினையே அச்சாணியாக இருந்தது நமக்குத் தெரியும்.

ஏற்கெனவே நடைபெற்றுவரும், சமுதாய ஆதரவுப் பணிகள், உதவிப் பொருள் தொகுப்புகள் விநியோகம் ஆகியவற்றில் இந்த எதிர்கால நிலைக்கான வேர்கள் இருக்கின்றன. அரசு எதிர்வினைகளின் தோல்வியாகவும் இவற்றை நாம் பார்க்கலாம். அல்லது, புதிதாகக் கிளம்பும் பிரச்சனை ஒன்றை சமாளிப்பதற்கான நடைமுறை சாத்தியமான, கருணை மிகுந்த சமுதாய எதிர்வினையாகவும் இவற்றைப் பார்க்கலாம்.

நம்பிக்கையும், அச்சமும்

இந்த அகக்காட்சிகள் எல்லாம் நிலைமையின் தீவிர வடிவங்கள், அல்லது தீவிர நிலையின் சித்திரங்கள். ஒரு நிலை நழுவி மற்றொன்றாக மாறக்கூடியவை. அரசு முதலாளித்துவம் தோன்றி அது காட்டுமிராண்டி நிலையாக சரியலாம் என்பதே என் அச்சம். அரசு சோஷியலிசமும் பரஸ்பர உதவி நிலையும் ஒன்று கலந்த ஒரு நிலையே எனது நம்பிக்கை. இந்த நிலையில் வலுவான, ஜனநாயகரீதியான அரசு வளங்களைத் திரட்டி, வலுவான சுகாதார அமைப்பைக் கட்டியெழுப்பும்; சந்தையின் விருப்பு வெறுப்புகளில் இருந்து பலவீனமானவர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும்; பொருளற்ற வேலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக பரஸ்பர உதவிக் குழுக்களை உருவாக்கிக் கொள்கிற குடிமக்களுக்கு எதிர்வினையாற்றக்கூடியதாக, அவர்களை அதிகாரப்படுத்துவதாக இருக்கும்.

இந்த அனைத்து நிலைகளிலும் அஞ்சுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன, நம்பிக்கை கொள்வதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவு. நமது தற்போதைய அமைப்பு முறையில் தீவிரமான குறைபாடுகள் இருப்பதை கோவிட்-19 சிக்கல் எடுத்துக்காட்டுகிறது. சிறப்பான முறையில் இதற்கு எதிர்வினையாற்றுவதற்கு தீவிரமான சமூக மாற்றங்கள் தேவைப்படலாம். இதற்கு சந்தையில் இருந்தும், பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதற்கான முதன்மை வழிமுறையாக லாபம் என்பதையே கொண்டிருப்பதில் இருந்தும் தீவிரமாக விலகிச் செல்லவேண்டும் என்று வாதிட்டிருக்கிறேன்.

இந்த சிக்கலின் ஒரு ஆதாயம், எதிர் காலத்தில் தோன்றக்கூடிய உலகளாவிய தொற்றுகள், பருவநிலை மாற்றம் போன்ற நிகழவிருக்கிற அபாயங்களில் தளர்ந்துவிடாமல் காக்கும் அளவுக்கு மனிதாபிமானம் மிக்க அமைப்பை கட்டியெழுப்பும் சாத்தியத்தை உருவாக்கியிருப்பதுதான்.

சமூக மாற்றம் பல இடங்களில் இருந்து உருவாகி வரலாம்; பலவற்றின் செல்வாக்கினாலும் தோன்றலாம். ஆனால் உருவாகவிருக்கிற சமூக வடிவங்கள் மற்றவர்கள் மீது காட்டுகிற அக்கறை, உயிர் வாழ்க்கை, ஜனநாயகம் ஆகியவற்றை மதிக்கிற அறக் கோட்பாட்டில் இருந்து உருவாகி வரவேண்டும் என்று வலியுறுத்துவதே நம் எல்லோரின் முக்கியக் கடமை.

சிக்கல் மிகுந்த இந்த காலத்தின் மையமான அரசியல் கடமை, வாழ்வதும், இந்த விழுமியங்களின் அடிப்படையில் (மனதளவில்) ஒருங்கிணைவதுமே ஆகும்.

இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க:

(சைமன் மெயர், சர்ரே பல்கலைக்கழகத்தின், சூழலியல் பொருளாதார ஆராய்ச்சியாளர். The Conversation தளத்தில் முதல் முதலில் வெளியான கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டு கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் பிபிசி ஃப்யூச்சர் தளத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டது.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: