அமெரிக்கா - மெக்சிகோ எல்லை சுவர்: கடக்க முயன்ற கர்ப்பிணி மரணம் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
டொனால்ட் டிரம்பின் எல்லை சுவர்: தடுக்கி விழுந்த கர்ப்பிணி மரணம்
உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்க, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தும் ஒரு துன்பியல் நிகழ்வு நடந்திருக்கிறது. அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் உள்ள எல்லை சுவரிலிருந்து கெளதமாலாவை சேர்ந்த 19 வயதுடைய பெண்மணி ஒருவர் கீழே விழுந்து இறந்திருக்கிறார். கிரோன் லுனா எனும் அந்த பெண் தன் கணவருடன் டெக்சாஸ் வழியாக எல்லையைக் கடக்க முயன்ற போது ஒரு கம்பி வேலியில் ஏற முற்பட்டிருக்கிறார். அப்போது கால் இடறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. எல்லை பாதுகாப்புப் படை உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அவர் குழந்தையைக் காப்பாற்ற சிசேரியன் செய்தனர். ஆனால் குழந்தையும் உயிர்பிழைக்கவில்லை. அமெரிக்கா-மெக்சிகோ எல்லை நெடுகிலும் சுவர் கட்ட வேண்டும் என்பது ட்ரம்பின் கனவு. தேர்தலின் போது இந்த வாக்குறுதியை பெரிய அளவில் முன்வைத்தார் டிரம்ப்.

இது குறித்து விரிவாக தெர்ந்துகொள்ள இந்த இணைப்புகள் உதவும்:


அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images
தனக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அதன் முடிவுகள் தெரியவரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் நிவாரண மசோதா குறித்து பேசினார். தேவைப்படும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்: சிங்கப்பூரை முந்துகிறதா மலேசியா? - 238 பேருக்கு பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images
கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை மாலை நிலவரப்படி 238ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூரை முந்தியுள்ளது மலேசியா.கடந்த பிப்ரவரி தொடங்கி இன்று வரை சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. எனினும் சிகிச்சைக்குப் பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு அதிகரிக்கவில்லை.

"என்னை யாரும் கடத்தவில்லை" - தாயுடன் வீட்டிற்கு சென்ற இளமதி

சேலம் மாவட்டம் மேட்டூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி இன்று காவல்நிலையத்தில் ஆஜரானதை தொடர்ந்து தன் தாயுடன் அவரது வீட்டிற்கு சென்றார். சேலம் மாவட்டம் கொளத்தூரில், கடந்த 9ஆம் தேதி, செல்வன், இளமதி என்ற காதல் ஜோடியினர் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். அந்த காதல் ஜோடிகளையும், திருமணத்தை நடத்திவைத்த திராவிடர் விடுதலைக் கழகத்தினரையும் கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கியதோடு, பெண்ணையும் கடத்திச்சென்றது.
விரிவாகப் படிக்க:காவல் நிலையத்தில் ஆஜரான இளமதி தனது தாயுடன் வீடு சென்றார்

"சிஏஏ தொடர்பாக தமிழக தலைமை செயலாளருடன் நடந்த சந்திப்பு ஏமாற்றமே"

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் இஸ்லாமிய அமைப்புகளோடு, தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் நடத்திய சந்திப்பு, ஏமாற்றத்தை அளித்ததாக ஒருதரப்பினரும், எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என மற்றொரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டு மாதங்களாக போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
விரிவாகப் படிக்க:"சிஏஏ தொடர்பாக தமிழக தலைமை செயலாளருடன் நடந்த சந்திப்பு ஏமாற்றமே"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












