காசெம் சுலேமானீ: அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரான் ராணுவ தளபதி யார்?

பட மூலாதாரம், AFP
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டுள்ளது சர்வதேசஅளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் காசெம் சுலேமானீயை கொன்றதை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமை அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது.
''இந்த தாக்குதலை நடத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை காத்திருக்கிறது'' என்று இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி எச்சரித்துள்ளார்.
அயத்துல்லா அலி காமேனிக்கு அடுத்தபடியாக இரானில் சக்திவாய்ந்த நபராகக் கருதப்பட்டவர் சுலேமானீ.
சரி. யார் இந்த காசெம் சுலேமானீ? இரானின் ராணுவ முகமாக இருந்த இவரது மரணம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் என்ன?
இரானின் ஆட்சியில் ஜெனரல் காசெம் சுலேமானீ, ஒரு முக்கியமான நபர். 1998 ஆண்டு முதல் காசெம் சுலேமானீ, இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு (Quds Force) ஒன்றின் தலைவராக இருந்து வந்தார். இந்தப்பிரிவு வெளிநாடுகளில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

பட மூலாதாரம், MEHDI GHASEMI/getty images
இரானின் புரட்சிகர ராணுவ படையானது, அந்நாட்டின் இஸ்லாமிய கட்டமைப்பை பாதுகாக்க 40 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது.
இந்த படையின் Quds என்ற பிரிவு, மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள கூட்டணி அரசுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய போராளிகள் குழுவிற்கு ரகசியமாக பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனை போன்ற உதவிகளை வழங்கும். இதன் மூலம் இரானின் ஆதிகத்தை மத்திய கிழக்கு பகுதிகளில் விரிவுபடுத்தும் லட்சியம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு பின்னால் இருந்த முக்கிய புள்ளிதான் காசெம் சுலேமானீ. போர் என்று வரும்போது அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் போன்று இவர் செயல்பட்டார் என்கிறார் பிபிசியின் சர்வதேச தலைமை செய்தியாளர் லைஸ் டவுசட்.
இரான் - ஜெனரல் காசெம் சுலேமானீ - அமெரிக்கா
இரானும் அமெரிக்காவும் சித்தாந்த ரீதியாக எதிரிகளாக இருந்தாலும், இராக்கில் ஐ.எஸ் அமைப்பு நடத்திய தாக்குதல், இரு நாடுகளுக்கு இடையே மறைமுக தொடர்பை ஏற்படுத்தியது.
2001ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பை அகற்ற அமெரிக்காவுக்கு ராணுவ புலனாய்வு உதவிகளை வழங்கியது இரான்.

பட மூலாதாரம், Anadolu Agency/getty Images
மேலும், 2007ஆம் ஆண்டு, இராக்கின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்கா மற்றும் இரான் நாடுகள் தங்கள் அதிகாரிகளை பாக்தாத்துக்கு அனுப்பின.
அப்போது இராக்கில் வகுப்புவாத வன்முறையை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார் அந்நாட்டின் பிரதமர் நூரி மலிகி.
இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர் காசெம் சுலேமானீ. அது எப்படி?
இராக்கிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ரியான் க்ரோக்கர் இது தொடர்பாக பிபிசி பெர்சிய சேவைக்கு 2013இல் அளித்த பேட்டியில், பாக்தாத் பேச்சுவார்த்தைக்கு பின்னால் ஜெனரல் காசெம் சுலேமானீயின் பங்கு குறித்து விவரித்தார்.
"பேச்சுவார்த்தையின்போது இராக்கிற்கான இரான் தூதர் அடிக்கடி இடைவேளை எடுத்துக் கொண்டார். எனக்கு அது ஏன் என்று தெரியவில்லை. அவர் குறிப்பிடாத சில விஷயங்களை நான் பேசும்போதெல்லாம் அவர் இடைவேளை எடுத்துக் கொண்டு இரானுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசுவார். அவரை இரான் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொலைபேசியின் அந்த முனையில் பேசியவர் காசெம் சுலேமானீ," என்றார் க்ரோக்கர்.
க்ரோக்கர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதராக பணியாற்றிய போதும் சுலேமானீயின் தாக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்த இரான் நாட்டின் பேச்சுவார்த்தை அதிகாரிகள், அனைத்து விஷயங்களையும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்திடம் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், இறுதி முடிவு எடுப்பது காசெம் சுலேமானீதான் என்று பிபிசியிடம் க்ரோக்கர் தெரிவித்தார்.
ஒருசில ஆண்டுகளில் சுலேமானீயின் பங்கு வெளிச்சத்திற்கு வந்தது. தொலைபேசியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நபர், வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தார்.

பட மூலாதாரம், Anadolu Agency/getty Images
பிறகு இரானின் முக்கிய முகமாக மாறினார் சுலேமானீ, எந்த பிரச்சனை இருந்தாலும், அவரிடம்தான் எடுத்து செல்லப்படும்.
சிரியா போர், இராக் உடனான மோதல், இஸ்லாமிய அரசுக்கு எதிரான சண்டை, மற்றும் பல விவகாரங்களில் சிரியாவின் அதிபர் பஷர் அல்-அசாதின் மூளையாகவும் காசெம் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்துதான் வெறும் ஓர் அதிகாரியாக இருந்த காசெம், கதாநாயகர் போல பார்க்கப்பட்டார்.
காசெம் சுலேமானீ கட்டுப்படுத்திய படைப்பிரிவு நேரடியாக இரான் நாட்டின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமினேவிடம் தொடர்பில் இருக்கும்.
காசெம் சுலேமானீ தலைமை வகிக்கும் Quds பிரிவு, அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
ஏற்கனவே இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பிரச்சனையில், தற்போது சுலேமானீயின் மரணமும் சேர்ந்திருக்கிறது.
பிரச்சனை பெரிதாகும் அதே நேரத்தில், இரானின் பதிலடியும் தீவிரமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சுலேமானீ கொல்லப்பட்டது எப்படி?
அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியதில், ஜெனரல் சுலேமானீ கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவல் படை கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
சுலேமானீ மற்றும் இரான் ஆதரவு பெற்ற போராளிகள் இரண்டு கார்களில் பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து செல்லும்போது, அமெரிக்க ட்ரோனால் அவர்கள் தாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், "அதிபரின் உத்தரவின் பேரில், வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெனரல் காசெம் சுலேமானீயை கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்தது" என்று கூறப்பட்டுள்ளது.
"இரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தோடு இது நடத்தப்பட்டது. அமெரிக்கர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












